யாருமறியாமல் ரகசியமாய்
நீ தரும்
கைக்குட்டைகளில்
புதைத்து தருகிறேன்
என் வாசனைகளை
--------------------------------------------------------------------------------------------
காரப்பொறிகளில் இருக்கும்
நிலக்கடலைகள்
எனக்கு பிடித்தமானவை தான்
அதை உனக்கு
பொறுக்கித் தருவது
அதைவிட பிடித்தமானதாக இருக்கிறது
--------------------------------------------------------------------------------------------
கையெழுத்திடும் போதெல்லாம்
நீ தட்டிவிட்டு
கோணல்மாணலான எழுத்துக்களோடு
நிறைந்திருக்கும் கையொப்ப ஏடு
நீ இல்லாத ஒரு நாளில்
வெறுமையாய்
என்னைக் கடந்து சென்றது
--------------------------------------------------------------------------------------------
கடைசியாக
நாம் மௌனமாய்
அமர்ந்திருந்த இடத்தை
இன்று நான்
தனியே கடக்கும்பொழுது
நாம் விட்டுச்சென்ற மௌனம்
பல பாஷைகளில்
பேசி சென்றது
--------------------------------------------------------------------------------------------
நம்மிடையேயான
புரிதல்களின் இடைவெளிகளில்
நிரம்பி வழிகிறது
ஒரு பார்வை
ஒரு புன்னகை
ஒரு மௌனம்
No comments:
Post a Comment