Thursday, 11 September 2014

தாரணி குட்டி - 3

காரிடரை கடந்து வந்தும் கூட இந்த பூனைகளை காணவில்லை. காரிடரில் நுழையும்பொழுதே எங்கிருந்தோ இரண்டும் ஓடி வரும். வீட்டருகில் சென்று கதவை திறந்தபொழுது குட்டி பூனை மட்டும் கத்திக்கொண்டே பின்னால் வந்து நின்றது. உள்ளே சென்று பிரட் பாக்கெட்டில் இருந்து நாலு பிரட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். சாப்பாடு போடும் இடத்தை தெரிந்து வைத்துக் கொண்டு சரியாக அந்த இடத்திற்கு எனக்கு முன்னால் ஓடி சென்று நின்று கொண்டது. பிரட்டை பிய்த்து போட்டுவிட்டு பெரிய பூனைக்காக காத்திருந்தேன். குட்டிபூனை பிரட் துண்டுகளை அவசர அவசரமாக விழுங்கியது. இந்த குட்டி பூனை கொஞ்சம் வித்தியாசமாக சாப்பிடும்பொழுது "மௌ மௌ" என்று ஒலியெழுப்பி சாப்பிடுவது வேடிக்கையாக இருக்கும். பூனைகளுக்கு பெயர் ஏதுமில்லை; குட்டி பூனை, பெரிய பூனை என்று நிறுத்திக்கொண்டேன். 

பிரட்டை இன்னும் சிறு துண்டுகளாக பிய்த்து போட்டுவிட்டு எழுந்தபொழுது அந்த பக்கம் தாரணி வந்து நின்றாள். நான் உடனே எழுந்து சுவற்றுக்கு பின் ஒளிந்து கொண்டேன். கொஞ்சம் நேரம் விட்டு எட்டிப் பார்த்தேன். அங்கேயே நின்று கொண்டு நான் நின்ற திசையை பார்த்துக்கொண்டிருந்தாள். எட்டிக்கூட பார்க்கவில்லை. நான் மறுபடி தலையை உள்ளே இழுத்துக்கொண்டு கொஞ்சம் நேரம் கழித்து எட்டிப்பார்த்தேன். அவள் அசைய கூட இல்லை அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அவளும் என்னைப் போலவே ஒளிந்து கொண்டு விளையாட்டு காட்டுவாள் என்றெண்ணி ஏமாந்தேன். இப்பொழுது முகத்தில் கொஞ்சம் சிரிப்பு வந்திருந்தது. கொஞ்ச நேரத்திற்கு இப்படி எட்டி பார்ப்பதும் ஒளிந்துகொள்வதுமாக தொடர்ந்தது இந்த விளையாட்டு.

என்ன நினைத்தாளோ திடீரென்று சுவற்றை சுற்றிக் கொண்டு என்னை பிடிப்பது போல வந்தாள். நானும் ஓடத் துவங்கினேன். ஒரே திசையில் வராமல் எதிர்திசையில் ஓடிவருவதும் பின்னர் ஒரே திசையில் ஓடுவதுமாக இருந்தோம். அவள் என்னை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே மெதுவாக ஓடினேன். குழந்தைகளிடம் தோற்றுப் போவதை விட ஆகச் சிறந்த சந்தோசம் என்ன இருக்க முடியும் ? நான் மெதுவாக ஓடியும் அவளால் பிடிக்க முடியவில்லை. நானே எதிர் திசையில் அவளுக்கு பின்புறமாக ஓடி சென்று "பூஊஊ" என்று கத்தியபடி அவளை தூக்கிச் சுற்றினேன். ஈஈஈஈ என்று சிரித்தவள் போதும் போதும் இறக்கிவிடு என்று கைகளில் இருந்து அவளே விடுவித்துக்கொண்டாள்.

"வா இன்னொரு முறை கண்ணாமூச்சி விளையாடலாம்"  என்றாள்

நான் "இது கண்ணாமூச்சிய்யா ?" என்று உதட்டை சுழித்துக் காட்டினேன்

"இல்லயா ?" என்று வாயினுள் மூன்று விரல்களை விட்டபடி இன்னொரு கையால் பாவடையை பிடித்தபடி ஒரு சுற்று சுற்றினாள்

"மூஞ்சயே மூடிக்கல இது கண்ணாமூச்சி இல்ல "

நான் எதுவுமே பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன். அவளே தொடர்ந்தாள்.

"ஒளிஞ்சு பிடிச்சு விளையாட தெரியல உனக்கு. மறைஞ்சு நின்னுக்கோ நான் சொல்லி தரேன்"

எந்த மாதிரியான கண்ணாமூச்சி விளையாட்டை இவள் சொல்லித்தரப் போகிறாள் என்று யோசித்தபடி "சரி வா " என்றேன்.

"இப்போலாம் சொல்லி தர முடியாது. நாளைக்கு சொல்லி தரேன். இப்போ நான் சாப்பிட போறேன்" என்று திரும்பி நடக்க ஆரம்பித்தாள்

"அய்ய் என்ன சாப்பிட போற" 

"டோஓச"

"ம்ம்ச் நான் இட்லி தான் சாப்பிடப் போறேன். நீ எனக்கு தோசை ஊத்தி தரியா" 

"டோசன்னா அம்மா தான் ஊத்தி தரனும்"

"...."

"சரி சரி நீ உள்ள போ" காரிடரை தாண்டி வெளிப்பக்கமாக ஓடி மறைந்தாள்

Wednesday, 10 September 2014

வெல்லிங்டன் – பிரிதலும் பிரிதல் நிமித்தமும் – வாசிப்பனுபவம்

மாற்றம் என்பது ஒரு நொடிப் பொழுதில் நேர்ந்துவிடுவது அல்ல. அதற்கான அடித்தளங்கள் வெகு முன்னரே போடப்பட்டுவிடுகின்றன.காடுகளை அழித்து நகரங்கள் உருவாகும் பொழுது ஏற்படும் இடப்பெயர்ச்சிகளில் பெருமளவு பாதிக்கப்படுவது காலங்காலமாக அந்த இடங்களில் வாழ்ந்து வரும் பழங்குடியினரும், காடுகளில் வாழும் மிருகங்களும் தான். நுகர்வுமயமாக்குதல் சமவெளி பகுதிகளை கடந்து மேடேறி சென்ற காலத்திலேயே மலைப்பகுதிகளின் அழிவு ஆரம்பமாகிவிட்டது, இது அங்கு வாழும் மக்களையும் மிருங்களையும் சேர்த்தே குறிக்கின்றது. இடமும் மக்களும் ஒன்றோடொன்று தொடர்புடைய(து)வர்கள், ஒன்றினால் மற்றொன்று அறியப்படுவது. ஆனால் இது வெகு சமீபத்தில் நடந்தது அல்ல. இதற்கான விதையை பிரிட்டிஷ்காரர்கள் வித்திடப்பட்டது. அரசியல்வாதிகளாலும், அதிகார வர்க்க முதலாளிகளாலும் வளர்க்கப்பட்டது.

பெருநகரங்களில் இவ்வாறாக ஏற்படும் மாற்றங்களை வெகு சுலபத்தில் கடந்து சென்றுவிட முடியும். முக்கியமாக நாடோடித்தனமான வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு இது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது. ஆனால் ஊரோடான உறவு வேரோடு பிடுங்கப்படும் வலியும் வேதனையும் ஆதியந்தமாக அந்த ஊரோடு உறவு கொண்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

கவிஞரும் மொழிப்பெயர்ப்பாளருமான சுகுமாரன் , எழுதிய முதல் நாவல் இது. ஆரம்ப பக்கங்களின் வாசிப்பு இது அவரின் முதல் நாவல் என்று தோன்றாதபடிக்கு வாசிப்பதற்கு லகுவான மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முதல் எழுபது பக்கங்களில் வெல்லிங்டன் உருவான கதை பற்றி விரிவாக அதே சமயம் அழுத்தமாக விவரித்திருக்கிறார். ஊட்டியை கண்டுபிடிக்க ஜான் சல்லீவன் புறப்படுவதில் இருந்து தொடங்கும் கதை எழுபதாவது பக்கத்தில் ஊட்டியில் தேயிலை பயிர் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து ஜான் சல்லீவனின் மகனிடமிருந்து வரும் செய்தியுடன் முடிகிறது (கொசுறாக ஜான் சல்லீவன் இறந்த வருடத்துடன் முடிக்கிறார்).

இந்த பக்கங்களுக்கிடையே தான் ஊட்டிக்கும் குன்னூருக்கும் இடைப்பட்ட ஜதளா எனும் மலை கிராமம் (ஹட்டி) வெல்லிங்டன் எனும் ராணுவத் தளவாடமாக உருமாறுவது சித்தரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து படுகர் இன மக்கள் இந்த மலை கிராமத்தில் வந்து குடியேறிய கதை பற்றியெல்லாம் விவரிக்க ஆசிரியர் சிரத்தை மேற்கொள்ளவில்லை.
“தமிழ்நாட்டின் நீலகிரி மலைப்பகுதிகளில் குடியேறிய ஒரே காரணத்தால் மட்டுமே தங்களையும் ”தோடர்கள்” போன்று (படுகர்களை) “ பட்டியலிடப்பட்டபழங்குடியினர்” (Scheduled Tribes) என்ற சலுகை கேட்டு தமிழ்நாடு மாநில அரசிடம் தொடர்ந்து போராடி வருகின்றனர்.”  என்று ஆவணக் குறிப்புகள் கூறுகின்றன.

இம்மக்கள் 200 வருடங்களுக்கு முன்பு தான் நீலகிரி மலைப்பகுதியில் வந்து குடியேறியதாக ஆவணங்கள் கூறுகின்றன. ஜான் சல்லீவன் ஊட்டியை கண்டறிந்தது 1800களின் ஆரம்பம். இராணுவத் தளவாடம் ஆரம்பிக்கபட்டது கிட்டத்தட்ட 1800களின் மத்தியில். ஆக, குத்துமதிப்பாக மக்களுக்கும் மலைக்குமான நூறு வருட பிணைப்பு இவ்வளவு அழுத்தமாக வேரூன்றி இருப்பது ஆச்சரியமானது.

இந்த முதல் எழுபது பக்கங்களிலேயே வெல்லிங்டனின் கதை முடிந்துவிட்டது. மீதி இருநூற்றி எண்பது பக்கங்களும் நாவலுக்காக இழுக்கப்பட்டவை. அதன் பின் வெல்லிங்டனுக்கும் கதைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை, வெல்லிங்டன் திருநெல்வேலியை போல கும்பகோணத்தை போல ஒரு வசிப்பிடம் அவ்வளவே. மீதி கதையை சமதளத்தில் நடக்கும் கதையாக விவரித்தாலும் இதே வித அனுபவத்தினை தான் கொடுக்கும் என்பது திண்ணம்.

பாபு என்கிற சிறுவனின் பார்வையில் கதை விரிகிறது. ஜகதளா ஹட்டியில் இருந்த, இடம்பெயர்ந்த மனிதர்களுக்கும் பாபுவுக்கும் இருந்த உறவை விவரிப்பதே மீதி கதை. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அத்தனை காலமாக உடன் வசித்து வந்த ஒவ்வொருவரும் மெதுவாக விலகி செல்லும்போது (இடம்பெயர்ந்து செல்கின்றனர்) பாபுவிற்கு இருக்கும் மனநிலையை நாவலாசிரியர் விளக்க முற்படுகிறார் ! பல இடங்களில் கதை தொய்வு கொண்டு நகர மறுக்கின்றது. உறவுகளுக்கிடையே இருக்கும் சிக்கல்களை தான் பெரும்பாலான கதைகள் பேசி வருகின்றன. அப்படியிருக்கையில் வெல்லிங்டன் என்ற வலுவான அடித்தளத்தை கையில் எடுத்துக்கொண்டு கோரைப் புற்களைக் கொண்டு வீடு கட்டியிருக்கிறார் சுகுமாரன். வெல்லிங்டன் (ஜகதளா) பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடி மக்களின் இடம்பெயர்ச்சிக்கான வலுவான அரசியல் பின்னணிகளை வெளிக்கொணர ஆசிரியர் முற்படவில்லை. ஒரு சராசரி கதையை மட்டுமே ஆசிரியர் கூறியிருக்கிறார். அதனால் கதை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்களின் வாழ்வாதாரங்களை மருந்துக்கு கூட எங்கேயும் விவரிக்கவில்லை, ஏனெனில் அதெல்லாம் முதல் நூறு பக்கங்களிலேயே சுருக்கமாக முடிந்துவிடுகிறது.

பாபுவுக்கும் கௌரிக்குமான உறவோ அல்லது பாபுக்கும் சகுந்தலாவிற்குமான உறவோ மேலோட்டமாகவே கூறியிருப்பது நாடகத்தன்மையை தான் அதிகரிக்கிறதே தவிர அதில் எந்தவொரு ஒட்டுதலும் இல்லை. இடையிடையே சர்க்கஸை பற்றிய இடைச்செருகல்கள் பெரும் அயர்ச்சியை கொடுக்கிறது. இந்நாவல் ஊர்வரலாறாக இல்லாமல் தன்வரலாறாகவே இருக்கிறது.
ஒரு நேர்காணலில் சுகுமாரன் இவ்வாறாக கூறியிருக்கிறார் ,
“பாபுவும் அவன் நண்பர்களும் புழங்கும் உலகத்தை சல்லிவன் உருவாக்கிய ஊரின் உருவாக்கக் கதையுடன் ஒப்பிட்டு பார்க்க முடியுமானால் நாவலின் இன்னொரு பரிமாணம் புரிபடலாம்”

சல்லீவன் ஒரு இயற்கை ஆர்வலர், சல்லீவனின் வரலாறு கண்டெடுத்த நீலகிரியை எந்தவித்திலும் பாபு ஆராய்ந்தாகவே தெரியவில்லை. பாபுவும் நண்பர்களும் விளையாடுகிறார்கள், பள்ளிக்கு செல்கிறார்கள், ஒரு படுகர் திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள், பட்டம் விடுகிறார்கள், திண்பண்டம் வாங்கி உண்ணுகிறார்கள், அக்கம்பக்கத்தில் நடக்கும் சண்டைகளை கவனிக்கிறார்கள், உதவிகளை செய்து கொள்கிறார்கள். அவ்வளவே ! இதை வேறு பரிணாமத்தில் எந்தவிதத்திலும் பார்க்க இயலவில்லை.

நாவலாசிர்களுக்கு தனக்கான வாசகர்களை தேர்ந்தெடுக்க எல்லாவிதமான உரிமையும் இருக்கிறது. எல்லா வாசகர்களுக்குமான கதை என்று எதுவே இல்லை. ஒரு சாராரை திருப்திபடுத்தும் கதை மற்றொரு சாராருக்கு அலுப்பூட்டுவதாக இருக்கின்றது. அதனால் இன்ன மாதிரி தான் கதையிருக்க வேண்டும் என்று வாசகர் எதிர்ப்பார்ப்பதை தவறென்றும் சொல்ல முடியாத சரியென்றும் சொல்ல முடியாத இரண்டும்கெட்டான் நிலை தான் வாய்த்திருக்கிறது. ஆனால் ஏதோவொரு விதத்தில் வாசகனை குறைந்தபட்சமாகவேனும் திருப்திபடுத்துவதாக இருக்க வேண்டும். அந்த அளவுகோலில் வெல்லிங்டனின் பின்னணி அரசியல் பற்றியும், பெருவாரியான மலை கிராமங்கள் அழிப்பும் பற்றியும், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டு அவர்கள் இடம்பெயர்ந்ததை பற்றியும் சிறிதும் விமர்சிக்காமல் சுய வரலாற்றை போல் நாவல் விரிந்திருப்பதினால் என்னளவில் இந்நாவல் திருப்தியளிக்கவில்லை.

பதிப்பகம் – காலச்சுவடு
விலை – ரூ. 275

Tuesday, 9 September 2014

நண்பரின் மூன்று கடிதங்களுக்கான பதில்

தோழருக்கு,

வணக்கம். தங்களுடைய மூன்று இமெயில்களும் அடுத்தடுத்து கிடைக்கப் பெற்றும் என்னால் உடனடியாக பதில் எழுத முடியாமைக்கு வருந்துகிறேன். முன்பே சொன்னது போல படிப்பத்தை தவிர மற்றதில் ஈடுபாடு குறைந்து வருகிறது. சொல்லப் போனால் சோம்பேறித்தனம் மிகுதியாகிவிட்டது.

தங்களுடைய பதில்கள் கிடைக்கப்பெற்றதில் மகிழ்ச்சி. தங்களுக்கான பதிலை நான் ரொம்பவும் பொறுமையாக எழுதிக்கொண்டிருக்கின்றேன். உங்களுடைய பதில் கடிதம் ஒரு நாள் தாமதித்தே வந்ததில் மிகுந்த பதற்றமடைந்திருந்தேன், என் மீது உங்களுக்கு எந்தவித கோபமும் இருக்காது என்பதை அறிந்தும் கூட.

நான் – லீனியர் பாணியில் நீங்கள் அனுப்பியிருந்த கடிதம் எனக்கு பிடித்திருந்தது. நானும் அதே நான் – லீனியர் பாணியில் பதிலளிக்க முயன்று பார்க்கிறேன்.

வியாழக்கிழமை விரதம் குறித்து உங்களுக்கு அனுப்பியிருந்தேனா என்றே மறந்துவிட்டேன். மாதமொரு முறையாவது அதைக் கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பதட்டம் , குழப்பம் , கோபம்…இதை இயல்பான சுழற்சி என்று கூறியிருக்கிறீர்கள். கோபம் வருவதை இயல்பாக எடுத்துக் கொள்ளலாம் நண்பா, ஆனால் எனக்கு சலிப்பு தான் மிஞ்சுகிறது என்று கூறினேன். இயல்புக்கு மாறி இவ்வாறு நான் இருப்பது தான் எனக்கு கவலை அளிக்கிறது.

அந்த கவிதை நிகழ்வில் நீங்கள் என்னைப் பார்த்தும் பேசாது சென்றது வருத்தத்தை அளிக்கிறது. நான் அன்று கோபமாக இருக்கவில்லை. நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அன்றைய இரவு நான் மழையில் முழுவதுமாக நனைந்துவிட்டிருந்தேன். குளிரினால் உடல் விறைப்புற்று சுரணையற்றதாகியிருந்தது. அதனால் என் முகம் அப்படி தோற்றமளித்திருக்கலாம்.

திருவண்ணாமலைக்கு சென்றிருந்ததை குறிப்பிட்டிருந்தீர்கள். மிகுந்த மகிழ்ச்சி. திருவண்ணாமலைக்கு சென்று வருடங்களாகின்றது. பவுர்ணமி கிரிவலத்திற்கும் ஒவ்வொரு புத்தாண்டிற்கும் குடும்பத்தோடு திருவண்ணாமலை கோவிலுக்கு செல்வது வழக்கம். எனக்கு கிரிவலம் போவதை காட்டிலும் மலை ஏறுவது தான் பிடித்தமானது. கந்தராசிரமத்திற்கும் விருப்பாக்‌ஷியார் குகைக்கும் தவறாமல் சென்று விடுவோம். மூலிகை வாசம் காற்றில் நிறைந்திருக்கும் இந்த மலை பெரும் ரகசியங்களை விழுங்கி நிசப்தமாய் காலங்காலமாய் நின்றிருக்கிறது. இப்பொழுதெல்லாம் குடும்பத்தோடு வெளியே, முக்கியமாக கோவிலுக்கு செல்வதே அரிதாகிவிட்டது. பழமையான ஆலயங்களை தேடி தேடி சென்ற காலமெல்லாம் முடிந்தது என்றே அச்சப்படுகிறேன் நண்பா.

சித்தர்கள் மீது எனக்கு பெருநம்பிக்கை உண்டு. ஒருமுறையேனும் அந்த மலைவனத்தில் அவர்களை காணக் கூடும் என்று நம்பி வருகிறேன். கல்லறை தினத்தை பற்றி மேலும் சில தகவல்களை கூற இயலுமா. எனக்கு கல்லறை என்றால் பயம் அதிகம்.

முகநூலில் இருந்து எடுத்துக்கொண்ட விடுப்பு ஆரோக்கியமானது என்றா சொல்கிறீர்கள். சிரிப்பு தான் வருகிறது. இந்த விடுப்பு என்னை இன்னமும் தனிமை படுத்திவிட்டது. வெளியுலக தொடர்பற்றவள் போல் இருந்துவருகிறேன். இதைப் பற்றி அங்கு மீண்டும் வரும்பொழுது விரிவாக எழுதுகிறேன்.

தனித்திருத்தலை பற்றி நீங்கள் கூறியவை ஏற்புடையதாக இல்லை. நம்மை சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் ஒரு நொடி வந்து போகும் தனிமை உணர்வை பற்றி தான் நான் கூறினேன். மற்றபடி செல்போன் இல்லாமலோ முகநூல் இல்லாமலோ இருக்கும் தனித்திருத்தல் அல்ல. இது நம்முள்ளே எப்பொழுதும் வியாபித்திருக்கும் தனிமையை பற்றியது. சிலருக்கு அது தெரியவதற்கு காலம் எடுத்துக்கொள்ளலாம். நம்மை விட இந்த உலகத்தில் யார் நமக்கு சிறந்த துணை ?

செயல்படும் எல்லாவற்றிலும் இருந்தேகூட மனதளவிலான விலகல் நல்லது என்றா சொல்கிறீர்கள். அய்யா நான் சாமியார் ஆக விரும்பவில்லை. ஏதோ ஒன்றில் எப்பொழுதும் பற்றுடனே தான் இருந்து வருகிறேன். பற்றற்ற வாழ்க்கைக்கான பக்குவத்தை அடைய இன்னும் பலகாலம் இருக்கிறது.
ஜே.கே புத்தங்களை படிக்க ஆரம்பிக்க வேண்டும். இதுவரை படித்ததில்லை. ஆனால் நீங்கள் பலமுறை ஜே.கேவை பற்றி என்னிடம் கூறியிருக்கிறீர்கள். மேலும் நான் எழுதுவது எல்லாவற்றையுமே என்னுடைய வலைதளத்தில் பதிந்து தான் வருகிறேன். Including இதற்கு முந்தய இமெயிலும் கூட. முன்பு சொன்னது போல கைக்கு கிடைக்கும் புத்தகமெல்லாம் படித்து வருகிறேன். பெரும்பாலும் மொழிப்பெயர்ப்புகள். தற்போதைய இலக்கியத்தில் தமிழில் சிறப்பாக மொழிப்பெயர்ப்பதாக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள். ஜி.குப்புசாமியை கூறினால், ‘என் பெயர் சிவப்பு’ உங்களுக்கு இப்படிப்பட்ட வாசிப்பனுபவத்தை தான் தந்ததா என்று நான் உங்களை கிண்டல் செய்ய நேரிடலாம்.

சமீபத்தில் பெயரே இல்லாத ஒரு பழைமையான கோயிலுக்கு சென்றதாக கூறியிருந்தீர்கள். உடன் படமும் இணைத்திருந்தீர்கள். திருச்சிராப்பள்ளியில் நான் சுற்றாத இடம் இல்லை. ஆனால் இந்த கோவிலை நான் அறிந்திராதது. உங்களுடைய பதிலில் இது எந்த கோவில் என்று குறிப்பிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

இறுதியாக,

மீண்டும்,

மிர்த்தாதின் புத்தகம் பற்றி, நீங்கள் அனுப்பிய சுட்டியில் உங்கள் வாசிப்பனுபவத்தை படிததேன். வாசிப்பில் உங்கள் அளவிற்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது என்றாலும் என்னளவில் இந்த புத்தகம் வாழ்நாள் முழுவதற்குமான புத்தகம் என்பதை மறுக்க முடியாதது. உண்மையில் இது ஒரு முறை வாசிப்போடு நின்றுவிடக் கூடிய புத்தகமன்று; வாசித்துக் கொண்டே இருக்க வேண்டிய புத்தகம் தான்.

நட்புடன்,
கார்கி

Thursday, 4 September 2014

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு கடிதம்

நண்பா,

(இப்படி விளிப்பது சரியாக இருக்கிறதா என்று தெரியவில்லை, மன்னிக்கவும்).

நலமாக இருக்கிறீர்களா ? நான் இங்கு நலம். பேஸ்புக்கில் இல்லாததால் கொஞ்ச காலம் வெளியுலகம் காணாத பிள்ளை போல் இருக்கிறேன். ஆனால் படிப்பதற்கும் எழுதுவதற்கும் நிறைய நேரம் கிடைத்திருக்கிறது. எழுதுவதை விட நிறைய படிக்க பிடித்திருக்கிறது. அவ்வப்பொழுது என்னுடைய வாசிப்பனுபவங்களை Goodreadsசிலும், அலுவலக வலைபக்கத்திலும் பதிந்து வருகிறேன்.

திருமண வேலைகளும் அதை ஒட்டிய குழப்பங்களும், திருமணத்திற்கேயுரிய பிரச்சனைகளையும் கடந்த சில நாட்களாக சூழ்ந்து இருக்கின்றது. எல்லாவற்றையும் சரி செய்துவிடக்கூடிய திராணி இருக்கிறதா என்று அடிக்கடி சந்தேகம் ஏற்படுகின்றது

படிப்பது ஒன்று தான் இத்தகைய வாதைகளிலிலிருந்து இப்பொழுதைக்கு மீட்சி தருவதாக இருக்கின்றது. புத்தகங்கள் நிரம்பியிருக்கும் இந்த வீட்டில் இன்னது தான் என்று இல்லாமல் தோன்றிய புத்தகங்களை எடுத்து வாசித்துக் கொண்டிருக்கின்றேன் (யாரும் பரிந்துரைக்கும் புத்தகங்களை தேடி படிக்கும் பழக்கம் இன்னும் வாய்க்கவில்லை).

புது வீட்டில் குடியேறி இரண்டு மாதங்கள் முடிவடைந்துவிட்டது. இங்கு பூனைகள் ஏதுமில்லை என்று போன வாரம் வரை நினைத்திருந்தேன். ஆனால் சென்ற வாரம், கொடியில் காய்ந்து கொண்டிருந்து துணிகளை எடுப்பதற்காக சென்றிருந்தபொழுது கொழுத்த மஞ்சள் நிற பூனையை பார்த்தேன். நான் அதை பயப்படுத்த வேண்டாம் என்று நினைத்தபொழுதும் அது என்னைக் கண்டதும் சுவர்மேல் ஏறி பாய்ந்தோடி விட்டது.

இன்னொரு முக்கியமான விசயம் இங்கு பக்கத்து வீட்டில் ஒரு கிணறிருக்கிறது. சென்னையில் கிணறுகளை நான் பார்த்ததில்லை. அது வெகு ஆச்சிரியமாக இருந்தது. மார்வாடிகளும் பிராமணர்களும் நிறைந்த பழய வீடுகளை கொண்ட தெரு இது. இந்த இடம் கொஞ்சம் ஆசுவாசம் அளிப்பதாக இருக்கிறது.

வாசலில் ஒரு தாய் நாயும் அதனுடைய இரண்டு குட்டிகளும் காலை வேளைகளில் சோம்பலாக படுத்துக் கிடக்கும். பெரும்பாலும் மாலை நேரங்களில் அவற்றை பார்க்க முடிவதில்லை. எப்பொழுதாவது மீதமிருக்கும் பாலும் சோறும் போடுவேன். எங்களுக்கிடையேயான நட்பு இந்த அளவிலேயே முடிந்துவிடுகின்றது.

இப்பொழுது வியாழக்கிழமை விரதங்கள் அடிக்கடி இருப்பதில்லை.
பெரும்பாலும் பசி எடுத்துவிடுகின்றது அல்லது மனநிலை சரியில்லாமல் இருக்கிறது.

என்னளவில் பேச்சு குறைந்திருக்கிறது, வெளியே செல்வது குறைந்திருக்கிறது. படிப்பதும் எழுதுவதுமாக நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றேன். அடுத்து என்ன என்கிற கேள்வி வரும்பொழுது தான் பெருங்குழப்பம் ஆட்கொள்கிறது. ஒரு குடும்பத்தை நிர்வாகிக்க தேவையான திறமை என்னிடம் குறைவாக உள்ளதாகவே உணர்கிறேன். அதனால் தான் திருமணம் என்பது என்னுடைய மனநிலைக்கு ஏற்று தான் செய்கிறேனா என்று அடிக்கடி குழம்பி போய்விடுகிறேன்.

நிறைய படிப்பதும் சில சமயம் வாதையாக இருக்கிறது, அதாவது உடல் வாதை. ஒரு கண்ணில் தூரப் பார்வை வந்தது போலிருக்கிறது. பேருந்திலும் படித்துக்கொண்டே செல்வதினால் இருக்கலாம். படிப்பதையும் விட்டால் என்னால் தூங்க தான் முடிகின்றது. வேறிதிலும் மனம் ஈடுபதுவதில்லை.

இப்பொழுதெல்லாம் கோபம் வந்தால் அடக்கிக் கொள்ள பழகிவிட்டேன். பெரும்பாலும் கோபம் வருவதில்லை, அதற்கு பதில் சலிப்பு தான் மிஞ்சுகிறது. இந்த கடித்ததிலேயே உங்களுக்கு தெரிந்திருக்கும் எந்த அளவிற்கு சலித்து புலம்பியிருக்கிறேன் என்று. சரி அது போகட்டும் விடுங்கள்.

உங்களுக்கு இன்னமும் பக்கத்து வீட்டிலிருந்து உணவு வருகின்றதா? நெடுநாட்களாக உங்களிடம் நான் கேட்க நினைத்து தவற விட்ட கேள்வியை எந்த வித தயக்கமும் இல்லாமல் கேட்கலாம் என்று தான் நம்புகிறேன். இந்த தனிமை நீங்களாக விரும்பி ஏற்படுத்திக் கொண்டதுதானா? தனிமை சில சமயம் கொடுமையானதாகவும் பிறிதொரு சமயம் விரும்பி ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் விசித்திரமாக இருப்பதும் விளங்க முடியாததாக இருக்கிறது இல்லையா?

தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டியதாக நான் நினைக்கும் ஒரே ஒரு விசயம், நீங்கள் Responsibilities எடுத்துக்கொள்ள வேண்டும். அது உங்களிடம் குறைவாக இருக்கிறது என்றே எண்ணுகிறேன். பிறருடைய வாழ்க்கைகான responsibilities பற்றி இங்கு நான் கூறவில்லை. At least உங்கள் வாழ்க்கைக்கானதை நீங்கள் கொஞ்சமாவது பொருட்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறேன்.

இன்னும் நிறைய பேச வேண்டும் என்று நினைக்கிறேன், உங்களிடமிருந்து பதில் வரும்பட்சத்தில் இன்னும் பேசலாம்.

இரண்டு கேள்விகள்,

’மிர்தாத்தின் புத்தகம்’ வாசித்திருக்கிறீர்களா ?

ஏதோவொரு பழமையான சிவன் கோவிலின் கருவறை வாசத்தை சமீபத்தில் சுமந்தீர்களா ?

பேரன்புடன்,
கார்கி

Monday, 1 September 2014

அமேசான் காடுகளில் வளரும் அரிய வகை மூலிகை

முன்னெச்சரிக்கை: சற்றே நீண்ட குறுங்கதை.  அலுப்பூட்டும் விதமாக அமைந்திருந்தால் அதற்கு காரணம் மதிய உணவு வேளை.
குஞ்சாயிக்கு எதுவுமே நறுக்கென்று இருக்க வேண்டும். அதாவது சின்னதாக. எல்லாமுமேவா என்று கேட்டால் அது எனக்கு தெரியாது. அதனால் தான் ஒவ்வொரு மாதமும் நகரத்தில் இருக்கிற பெரிய சலூனிற்கு சென்று தோள்பட்டையை தொடுமளவு முடிவெட்டிக் கொள்ளுவாள்.

(எனக்கு மட்டும் தெரிந்த ரகசியத்தை உங்களுக்கு சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொள்கிறேன்)

ஊரெல்லாம் தேடி இவன் தான் நமக்கு சரியான ஜோடி என்று மிஸ்டர் பெருமாளுடன் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டாள்; மிஸ்டர் பெருமாளின் பெற்றோர்களிடமும் தான். பெருமாளுக்கு குஞ்சாயியின் முடி காற்றில் அலைபாய்ந்து முகத்தை கூச செய்யாமல் இருந்தால் சரி என்பதால் குஞ்சாயியின் முடியை பற்றி கவலையேதுமில்லாமல் இருந்தது.

வெட்டியான ஒரு வார இறுதியில் ஆட்டுக்கால் சூப் குடிப்பதற்கென்றே மிஸ்டர் பெருமாளின் வீட்டுக்கு சென்ற குஞ்சாயியின் முடியை பார்த்ததுமே பெருமாளின் அம்மா முகம் சுளித்தாள் ’இதென்ன முடியை குட்டையா வெட்டிக்கிட்டு”

பெருமாள் தான் சமாதானப்படுத்தினான் ‘வெயில் காலமில்லையா தல கசகசப்பு தாங்கல… அதெல்லாம் கல்யாணதுக்குள்ள வளத்திடலாம்’

பெருமாளின் அம்மா ஊருக்கு வரும்பொழுதெல்லாம் ‘மண்டய பாரு.. மண்டைய பாரு..’ என்று இடித்துக் காட்டிக்கொண்டே இருந்தாள். அதுவுமில்லாமல் குஞ்சாயியின் மேல் வீட்டில் குடியிருந்த பல் டாக்டருக்கு குஞ்சாயியை விட கொஞ்சம் முடி ஜாஸ்தியாக இருந்தது பிரச்சனையாகிவிட்டது. மாதா மாதம் மேல்வீட்டிற்கு மல்லிக்கைப்பூ பந்து போக ஆரம்பித்தது.

குஞ்சாயிக்கு பெரும் மண்டைக் குடைச்சலாகிவிட்டது. அலுவலக நண்பர்களிடமும் பேஸ்புக்கிலும், முடி வெட்டிக்கொள்ள போகும் சலூனிலும் கூட முடி வளர்க்கும் டிப்ஸ் கேட்டு கலர் கலராக கண்டிசனரும் , ஷாம்பூவும் மாற்றி மாற்றி தேய்க்க ஆரம்பித்தாள். ஒரே மாதத்தில், தலையில் கையை உள்ளே விட்டு இழுத்தால் கையோடு ஒரு கொத்து முடி வரும்படி ஆகியிருந்தது குஞ்சாயி மண்டை.

ஆக கடைசியாக இது தான் வழி என்ற முடிவுக்கு வந்தவள்அமேசான் காடுகளில் வளரும் அரிய வகை மூலிகையை தேடி சென்றாள்.

இரண்டே மாதத்தில் முட்டுக்கு கீழே பின்னல் தொங்கியது. தலையில் இருந்து அடித்த ஆட்டுப் புழுக்கை நாற்றத்தை மறைக்க விதவிதமான ஃப்ளேவரில் ஹேர் ஸ்ப்ரே வாங்கி அடுக்கி வைத்தாள். கல்யாணத்திற்காக வாங்கிய ஆயிரம் ரூபாய் சவுரி முடி வீணாய் போனதே என்று குஞ்சாயி அம்மா அலுத்துக் கொண்டாள்.

சீரும் சிறப்புமுமாக கல்யாணம் முடிந்தது. இரண்டாவது வாரத்தில் தோளுக்கும் தொடாமல் முடியை வெட்டி விட்டு வந்தாள் குஞ்சாயி.

முடிந்தது.

பி.கு. அந்த ரகசியத்தைப் பற்றி நீங்கள் அதிகம் அலட்டிக் கொள்ள தேவையில்லை.

தாரணி குட்டி - 2

வீட்டிற்கு வந்து கதவை திறக்கும் முன் தாரிணி கதவை திறக்கவிடாமல் கையை பிடித்துக்கொண்டு சிரித்தாள். நானும் சிரித்தபடி விரலை கோர்த்துக்கொண்டேன்.
கண் சிமிட்டாமல் என்னை பார்த்து "நீ ஏன் ஷால் போடல ? " என்றாள் (மூன்றரை வயது குழந்தையிடம் ஷால் போட வேண்டும் என்று யார் சொல்லி கொடுத்திருப்பார்கள் !)
"இல்ல நான் மறந்து வச்சிட்டு போய்ட்டேன்" என்று துணிகள் காய்ந்து கொண்டிருந்த கொடியை சுட்டிக் காட்டிவிட்டு கதவை திறக்க முற்பட்டேன். 

"எங்க இன்னொரு அக்கா ?" என்று மறுபடியும் கையை பிடித்துக்கொண்டாள்.

"அவ ஊருக்கு போய்ட்டா " ஒற்றைக் கையில் கதவை திறக்க முயற்சி செய்தேன்.

"தனியாவா இருக்க ? " தலையாட்டலை பதிலாக எடுத்துக்கொண்டு தொடர்ந்தாள் , "பயமாயில்ல உனக்கு ? பேய் வந்து பிடிச்சிக்காதா ? "

"சாமி இருக்கு பேய் வந்து பிடிச்சிக்காது" என்று பூட்டை விலக்கி தாழை திறந்தேன்.

"அப்போ சாமி வந்து பிடிச்சிக்காதா ?" என் பதிலுக்கு காத்திராமல் கதவை பட்டென்று திறந்து உள்ளே நுழைந்தாள்.

நான் சிரித்துகொண்டே "சாமி நல்லது தான் பண்ணும் , பிடிச்சிக்காது " என்றேன்.

"சாமி எங்க இருக்கு? நீ காமி. உன்னை பிடிச்சிக்க வேண்டாம்ன்னு நான் சொல்லிட்டு போறேன்"

"........."

சாமிப்படங்கள் அடுக்கி வைத்திருந்த செல்ஃப் அருகே போனவள் இரண்டு வினாடி அங்கே நின்று பார்த்துவிட்டு என்னருகே மீண்டும் வந்தாள். "நாளைக்காச்சும் பைஃவ் ஸ்டார் வாங்கி கொடு நீ மறந்துட்ட.. " 
தலையசைத்தேன்,

"சரி கதவை பூட்டிக்கோ... பை"

ஆமென்!

சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிற
இயேசு
இதோ பிறப்பெடுக்கிறார்

இந்த நாய்கள் இன்னும் 
ஊளையிட்டுக்கொண்டே
இருக்கின்றன 

இறுக்கி போர்த்திய போர்வையின் விளிம்பில் சாத்தானை பிடித்துக் கொள்கிறேன் 

இதோ
சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிற
இயேசு
பிறப்பெடுக்கிறார்

Saturday, 23 August 2014

ஜி.நாகராஜன் நினைவோடை - சுந்தர ராமசாமி



தமிழ் இலக்கிய உலகில் ஜி.நாகராஜனை தவிர்த்து செல்ல ஒருவரால் கண்டிப்பாக முடியாது, வாசகர்களாகட்டும் அல்லது எழுத்தாளர்களாகட்டும். ஜி.நாகராஜனை கொண்டாடும் எந்தவொரு வாசகனுக்கும் இலக்கிய உலகிற்கு அப்பாலான அவரது உலகத்தை அறிந்துக்கொள்ள நேரும்பொழுது ஏற்படும் துக்கம் சொல்லி மாளாதது.

சுந்தர ராமசாமியின் நினைவோடை வரிசைகளில் கடைசியாக வந்த புத்தகம் “ஜி. நாகராஜன் நினைவோடை”. சுந்தர ராமசாமி சொல்லக் கேட்டு அரவிந்தன் இந்த நூலை தொகுத்துள்ளார். புத்தகத்தை படித்து முடிக்கும்பொழுது வாழ்ந்து கெட்ட மனிதனை பற்றிய கதையை கேட்டது போன்றதொரு அனுபவத்தினை தருகிறது.

இந்த நினைவோடை முழுவதிலும் ஜி.நாகராஜனுடைய ஆக்கங்களைப் பற்றியோ அல்லது இலக்கியத்தை பற்றியோ எந்தவொரு இடத்திலும் சு.ரா விவரிக்கவில்லை. தனி ஒரு மனிதனின் வாழ்வையும் வீழ்ச்சியையும் நேரிருந்து பார்த்த அனுபவத்தினையே கூறியிருக்கிறார். ஜி.நாகராஜனை எந்த அளவிற்கு ஆச்சரியமாக பார்த்திருக்கிறாரோ பின்னாளில் அதே அளவு வெறுப்பும் கொண்டிருக்கிறார் சு.ரா.

புத்தகத்தின் பின்னட்டையில் இவ்வாராக இருக்கிறது ”ஜி. நாகராஜனின் அற்புதமானதும் அதிசயமானதுமான’ ரகசிய உலகம் பற்றிய சுவாரஸ்யமான நினைவுகளைப் பதிவு செய்துள்ளார் சுந்தர ராமசாமி”. ஜி. நாகராஜனை பின்னாளில் வெறுத்தாலும் சு.ராவால் அவரை தவிர்க்க முடியாமல் தான் இருந்திருக்கிறது.

ஜி.நாகராஜனின் மற்றவர்களிடத்து பழகும் விதம், உடை வழக்கம், மிக அதிகமான உண்ணும் அவருடைய உணவுப் பழக்கம், அபாரமான அவருடைய ஆங்கிலப் புலமை, மற்றவர்களுக்கு அவர் ஏற்படுத்திய அசௌகரியங்கள், அதைப் பற்றி அவர் குற்றவுணர்ச்சி கொள்ளாதிருத்தல், இறுதியாக அவரை இறப்புக்கு இழுத்துச் சென்ற குடிப்பழக்கம் இதைப் பற்றி மட்டுமே இந்த நூறு பக்கங்களில் சு.ரா பேசுகிறார்.
ஜி.நாகராஜனின் எழுத்துக்களைப் பற்றி அவர் விரிவாக எழுதாதற்கு காரணம் தெரியவில்லை. புத்தகத்தில் ஓரிடத்தில் இவ்வாறாக ஒரு கேள்வி சு.ரா விடம் கேட்கப்பட்டு இருக்கிறது “இலக்கியம் பற்றியாவது பேசுவாரா ?”

இலக்கியத்தை பற்றியெல்லாம் ஜி.நாகராஜன் சு.ராவிடம் பேசியதேயில்லை என்றொரு ஆச்சரியமான பதிலை தருகிறார்.
மற்றபடி ஜி.நாகராஜனின் ஆச்சரியப்படும் பண்புகளையும், சிறு சிறு விசயங்களையும் ஞாபகத்திலிருப்பதை நினைவு கூர்ந்திருக்கிறார். சில விசயங்களை கூறாமல் தவிர்த்திருப்பதும் வெளிப்படையாக தெரிகின்றது.

ஜி.நாகரஜனுடைய வாழ்க்கையை பற்றி இவ்வாறு சொல்கிறார், “விளம்புநிலை வாழ்க்கை மீது அவருக்கு இருந்தது ஒரு fascination” என்று. மேலும் அவருடைய எழுத்தைப் பற்றி சு.ரா சொல்வதெல்லாம் இதுதான், “அவர் தொடர்ந்து எழுதி வந்தபோது கூட தான் ஒரு எழுத்தாளர் என்று நினைத்ததில்லை. அவரது எழுத்து பலருக்குப் பிடித்துப்போய்விட்டிருந்தது. வாசகர்கள் தான் அவரை எழுத்தாளராக ஆக்கியிருக்கிறார்கள்”

எழுத்து சார்ந்து அவரை கொஞ்சமாவது இயங்க வைத்தது அவர் விளிம்பு நிலை வாழ்க்கையின் மீது கொண்டிருந்த ஆர்வம் தான் என்பது புலப்படுகின்றது. ஆனால் அதுவே தான் அவரது வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கின்றது. ஒவ்வொரு விசயம் சார்ந்தும் பல அடிப்படையான நுட்பமான விசயங்கள் அவருக்கு இயல்பிலேயே கைவந்திருக்கின்றது.

அவருடைய குடும்ப வாழ்க்கையை பற்றி பெரிதும் குறிப்பிடவில்லை. முதல் மனைவி இறந்த பின்னர் இரண்டாம் மணம் புரிந்துகொள்கிறார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ள தேவையில்லை என்று கருதி சு.ரா அதை நாகராஜனிடம் வெளிப்படையாகவும் கூறுகிறார். அவருடைய வித்தியசமான வாழ்க்கை முறை குடும்ப வாழ்க்கைக்கு ஒவ்வாதது என்பதை எண்ணியே அவ்வாறு கூறியிருக்கிறார் என்பது புரிகின்றது.

பின்னாளில் நாகராஜன் சு.ராவிற்கு எழுதிய கடிதமொன்றின் கடைசி வரியில் தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் தன்னுடைய மனைவி தான் என்று எழுதியிருக்கிறார். இதனால் கோபமடைந்த சு.ரா நாகராஜனை திட்டி பத்துப் பக்கங்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவரை பார்க்க வந்த நாகராஜனை தவிர்த்திருக்கிறார். தவிர்க்க முடியாமல் போன ஒரு கட்டத்தில் நாகராஜன் இவ்வாறாக சொல்கிறார், “ அந்த கடித்ததில் நாகலட்சுமியைப் பற்றி சொல்வது ஒருவிதமான கிண்டல் தான். யார்  ஒரு காரியத்துக்குச் சற்றும் பொறுப்பில்லையோ அவர் தான் முழுவதற்கும் காரணம் என்று சொல்வது ஒருவித Satire தான்”.

சு.ரா ஜி.நாகராஜனை பற்றி பெரிதும் கவலைக் கொண்ட விசயம், “அவரால் பிறருக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறித்து அவர் கவலைப்படவும் மாட்டார், அதைப் பற்றி எந்தவொரு குற்றவுணர்ச்சியும் கொள்ள மாட்டார்” என்பது தான்.

அவருடைய உணவுப் பழக்கத்தைப் பற்றி தான் பெரிதும் வியப்புற்று அடிக்கடி சொல்கிறார். ‘ஹோட்டல் சர்வர்களே ஆச்சரியப்படும் விதத்தில் எக்கச்சக்கமாக சாப்பிட்டவர் அவர் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் ஒரே ஒரு சிறிய லட்டை மட்டுமே உண்டு வந்திருக்கிறார். அவர் இப்படி அதிகமாக உணவு உண்ணும் பழக்கம் மிலிட்டரியில் சேர்ந்த பொழுது வந்திருக்கிறது. சிறு வயதில் வீட்டை விட்டு ஓடி மிலிட்டரியில் சேர்ந்திருக்கிறார் அங்கு தான் அவருக்கு தாரளமாக அசைவ உணவும், மதுவும் கிடைத்திருக்கின்றது. அதே போல அதிகார மனப்பான்மையும் !
ஆனால் சு.ராவிடம் அந்த அதிகார மனப்பான்மையை எந்தவொரு சமயத்திலும் அவர் காட்டியதில்லை என்றே தெரிகின்றது.

நாகராஜன் மற்றவர்களுக்கு கொடுத்து வந்த சங்கடங்களைக் குறித்து சு.ரா கொண்டிருந்த அதிருப்தி புத்தகத்தில் ஆங்காங்கே தெரிகின்றது. அதனாலேயே பலகாலம் பொறுத்துக் கொண்ட நட்பை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் துண்டிக்க நினைக்கிறார். ஆனால் இதைப் பற்றியெல்லாம் ஜி.நாகராஜன் எப்பொழுதும் கவலைக் கொள்வதில்லை என்று அவரே குறிப்பிடுகின்றார்.

ஜி.நாகராஜனுடைய கடைசி காலத்தில் தெரிந்தவர்கள் அனைவரும் அவரை விலக்கியே வைத்திருக்கிறார்கள். சு.ரா உட்பட. அதனாலேயே அவர் கொண்டிருந்த குற்றவுணர்ச்சி கடைசி பக்கத்தில் தெளிவாகவே தெரிகின்றது.

தான் ஆதர்சமாக கொண்ட எழுத்தாளனுடைய நசிந்த வாழ்க்கைப் பற்றி தெரிந்து கொள்ளும் வாசகனுடைய நிலைமை துக்ககரமானது. இந்த எழுத்தாளனுடைய ஆக்கங்களை கடந்து வருவது அவ்வளவு எளிதானதல்ல, அதே போல அவனுடைய வாழ்க்கையையும்.

ஜி.நாகராஜன் நினைவோடை - சுந்தர ராமசாமி
காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ.60

Thursday, 8 May 2014

மார்ஷலுக்கு - 5


பிரியத்திற்குரிய மார்ஷல்,
பேரன்பின் கடலில் என்றும் நாம் திளைத்திருக்க கர்த்தர் நம்மை ஆசிர்வதிப்பாராக. இது கடைசி கடிதம் இல்லை மார்ஷல். அப்படியானதொரு கடிதத்தை என்னால் உனக்கு எழுதிட முடியாது. அப்படியானதொரு கடிதம் இருக்கும்பட்சத்தில் நீ எனக்கு பதில் கடிதம் எழுதக் கூடிய சாத்தியமில்லாமல் போயிருக்கும்.

வெளிச்சத்தில் நடந்து பல நாட்கள் ஆகிவிட்டது மார்ஷல். இந்த கோடை அத்தனை சிறப்பானதாக இல்லை. நாமொன்றும் கோடையை கொண்டாடுபவர்கள் இல்லையே ! தனிமைக்கும் இருட்டுக்கும் பழகியவர்களுக்கு கோடை அத்தனை சிறப்பானது இல்லை தான் மார்ஷல்.விலகியிருப்பது உனக்கு விருப்பமானது இல்லை என்பதை நாம் அறிவேன். கோடை முடியும் நாளுக்காக நான் காத்திருப்பேன் மார்ஷல். மழைநாளின் குடைக்காக காத்திருப்பவள் இல்லை. மழையை பருகி வளர்ந்தவர்கள் நாம். மழை உன்னை என்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் நம்பிக்கை இருக்கிறது மார்ஷல்.

தனிமையை பழகியவளுக்கு இப்பொழுதெல்லாம் ஒரு நிமிட தனிமை கூட பெரும் வாதையாக இருக்கிறது மார்ஷல். இந்த வீடெங்கும், இதன் அறைகளெங்கும், இதன் சுவர்களிலும், சாளரங்களிலும், வீடெங்கும் நிறைந்திருக்கும் புத்தகங்களிலும் லாஷ்லியின் மணம் எப்பொழுதும் வீசிக்கொண்டே இருக்கிறது. மிச்சமிருக்கும் வாழ்க்கையை வாழ இந்த மணம் ஒன்று போதும். பேரன்பின் மணம்.

லாஷ்லியுடனானதாக தொடங்கும் பகல்களும் முடியும் இரவுகளும் முடிவற்றதாக நீண்டு கொண்டே இருக்கிறது. இந்த காதல் என்னை புதிதாக்கியிருக்கிறது மார்ஷல். வாழ்க்கை புதிதாக இருக்கிறது என்று சொல்வதற்கில்லை. வாழ்வது புதிதாக இருக்கிறது அல்லது வாழ்க்கையின் புது அத்தியாயத்தில் வாழ்கிறேன் மார்ஷல். நம்பிக்கை அளிக்ககூடியதாக இருக்கிறது மார்ஷல் இந்த வாழ்க்கை. இது உனக்கு சந்தோசம் அளிக்க கூடியதாகவே இருக்கும். இறந்தகாலத்தின் நீட்சியை போலில்லை இந்த வாழ்க்கை. ஆனால் எதையோ உணர வேண்டி இந்த நீட்சி தேவைப்படுகிறது. நாம் பேரன்பில் திளைத்திருக்கிறோம் மார்ஷல்.

சாத்தான் இப்பொழுதெல்லாம் நம்மை வெறுப்பதை கண்டு சிரித்துக்கொள்கிறோம் இல்லையா மார்ஷல் ? சாத்தனை போல் ஒரு பைத்தியக்காரன் இவ்வுலகில் இல்லை மார்ஷல். பெருங்காதலில் அவன் சுற்றி அலைகிறான் மார்ஷல். தேவதைகளை நீ சந்தித்து வருகிறாய் தானே.? தேவதை தானே அவள் ? சாத்தானை காதலிப்பவள் தேவதையாக தான் இருக்க முடியும். சாத்தானும் தேவதையும் தேவக்குமாரனும் …………பூனையும்; எவ்வளவு இடைவெளி பார்த்தாயா மார்ஷல். இப்பொழுது அழுவது போன்ற பாவனையுடைய உன் முகத்தை பார்க்க வேண்டும் மார்ஷல்.

இங்கு பூனைகள் இல்லை மார்ஷல். பூனைகளை தொலைத்தவளாகியிருக்கிறேன். தனித்திருக்கும் செந்நிற குட்டி பூனையும் என்னைத் தேடி வருவதில்லை மார்ஷல். அவன் வளர்ந்துவிட்டான். இனி அவனுக்கு நான் தேவையில்லை. அவனுக்கான உணவை அவனே தேடிக்கொள்வான். இது உலக நியதியில்லையா மார்ஷல் ? தனக்கு தேவையானதை தனித்து தேடிக்கொள்ளும் பக்குவம் வரும்பொழுது விலகி நடப்பது குற்றமில்லை மார்ஷல்.

எப்பொழுதும் எனக்கான கடிதத்தை நான் உன்னிடம் கோரியதில்லை. நீ தூரமாகயிருக்கிறாய் என்பதை அடிக்கடி உணர்த்த தேவையில்லை. தூரத்தை விளக்கிவிடும் ஆற்றல் ஒரு பதில் கடிதத்தில் இருக்கிறது மார்ஷல்.

வானம் நிறைந்த நட்சத்திரங்களை ஆசுவாசமாக பார்க்கும் நாள் வெகு அருகில் உள்ளது என்று நம்புகிறேன் மார்ஷல்.
முத்தங்களுடன்,
ஜெனி

Monday, 7 April 2014

அன்பின் சாண்ட்ரா


அந்த பெண்ணின் கண்களில் சோகம் இருக்கிறது. கண்டிப்பாக இருக்கிறது. யாருடைய பொருளையே பறித்துக் கொண்ட பதற்றம் என்னை பெரும் பாரமென அழுத்துகிறது. சாண்ட்ரா, இந்த பகலை மட்டும் கடத்தி விடு ! இரவு என்னை பூனையாக்கிவிடும்.



இந்த பகல் பூனைகளால் நிறைந்திருக்கிறது சாண்ட்ரா.. திரும்பும் இடமெங்கும் பூனை.. பூனைகள். நான் எப்பொழுதும் பூனையாகவே இருந்து வந்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது ஆக நிஜமாய் ஒரு பூனையாய் மாறுவதை உணர்கிறேன். நான் பூனையாகும் ஒரு நாளில் இது போல் என்னை அள்ளியெடுத்து அணைத்துக் கொள்வாயா சாண்ட்ரா ?



யாரோ ஒருவர் நம்மை வெறுத்துவிடும் கணம் எப்பொழுதும் நமக்காக காத்திருக்கிறது. வெறுப்பு அளிக்கும் பயம் ஒரு பூனையாய் உன் மேல் சுருண்டு கொள்ள செய்கிறது. அணைத்துக்கொள், இந்த அணைப்பு தரும் கதகதப்பு போதும். வெறுப்பு அளிக்கும் பயத்தை யாருக்கும் நாம் கொடுத்திட வேண்டாம் சாண்ட்ரா


உன்னை விட சிறப்பாக பூனைகளை பற்றி கதை சொல்ல யாரால் இயலும் சாண்ட்ரா. பூனைகளுக்கு சொல்வதற்கென்றே என்னிடமும் சில கதைகள் இருக்கின்றது சாண்ட்ரா. பூனைகளுக்காக சில கதைகளும் ; கதைகளுக்காக சில பூனைகளும். தொலைந்த போன பூனைகளை உன் கதைகளின் வழியே தேடிக்கொண்டிருக்கின்றேன் சாண்ட்ரா




உனக்கு ஏன் பூனைகளை பிடித்திருக்கிறது சாண்ட்ரா? பூனைகள் மீட்பராய் இருப்பதை நீயும் அறிந்திருக்கிறாயா ? தொலைந்து போன தன் பூனை ஒன்றை தேடி அலையும் தேவகுமாரனின் கதையை நீ அறிந்திருக்க மாட்டாய் சாண்ட்ரா. அந்த பூனை மீட்பராய் இருந்தது என்று பூனையை தவிர அனைவரும் நம்பினர். பூனை தான் ஒரு சாதாரண பூனை என்றே பல காலமாய் நம்பியிருந்தது. அது ஒரு பூனை போல வாழ்வதற்கே விரும்பியிருந்தது. ஆனால் தேவகுமாரன் தேடுவதும் அச்சாதாரண பூனையை தான் சாண்ட்ரா. தேவகுமாரனுக்கு எஞ்சியிருப்பது அற்புதங்களை நிகழ்த்திய பூனையின் தடங்கள் மட்டுமே. சாதாரண பூனை அற்புதங்களை நிகழ்த்த முடியுமா சாண்ட்ரா?



பூனைகளை காதலிக்காத ஒரு நாளில் நானும் பூனையாகிவிடுவேன்.


லவ் யூ Sandra Bierman


ஓவியங்கள் - Sandra Bierman

Sunday, 6 April 2014

ஆர்னிக்கா (மலைகள்.காம்)


ஏபல் முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தாள். அதற்குள் அவ்வளவு தொலைவு நடந்து சென்று விட்டாள். எனக்கு பின்னால் நடந்து வந்தவர்களும் என்னை தாண்டி போய்க்கொண்டிருந்தனர். நான் மெதுவாக நடக்கிறேனா இல்லை இவர்கள் எல்லாரும் வேகமாக நடக்கிறார்களா என்று குழப்பமாக இருந்தது. ஜூர வேகத்தில் கால்கள் பின்னிக் கொண்டு நடக்க மறுத்தன. கிளம்பும் முன் குடித்த பாலை மீறி கசப்பு தொண்டையில் அடர்ந்திருந்தது. ஏபல் கண்களில் இருந்து மறைந்துவிட்டிருந்தாள்.
இரண்டு ஆண்டுகளில் லூட்டன் நகரத்து தெருக்கள் பரிச்சயமாகி இருந்தன. பெருநகரத்திற்குரிய காலை நேரத்து பரபரப்பு சாலைகளை நிரப்பிக்கொண்டிருந்தன. டவுன் சென்டரை தாண்டும் பொழுது கால்கள் கொஞ்சம் ஒத்துழைத்தன. டோவர் செல்லும் ரயிலுக்காக காத்திருந்தேன். இன்னொரு கிளாஸ் பால் குடித்திருக்க வேண்டும். இரவு முழுவதும் பசியுடன் சேர்ந்து இருமலும் வயிற்றை இறுக்கிப் பிடித்திருந்தது இப்பொழுது தான் வலியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
ஏபல் வந்திருக்காவிட்டால் இன்னும் இரண்டு நாட்களுக்கு சீண்ட ஆளின்றி ஜன்னல்கள் அடைத்து கிடக்கும் அந்த இருட்டு அறையில் மயங்கி கிடந்திருப்பேன். அவளுக்கு கதவை திறந்துவிட்டபொழுதே ஜூரத்தில் அருகில் இருந்த நாற்காலியில் மயங்கி சரிந்தேன். கெட்டிலை அவசர அவசரமாக எடுத்து வந்து தண்ணீரை வாயில் புகட்டினாள். தண்ணீரை அருகில் கிடந்த என் டிஷர்டில் ஊற்றி முகத்தை அழுந்த தேய்த்த பொழுது தான் எனக்கு சிறிது உணர்வு வந்தது. ரக்பி செல்லும் ரயில் நினைவுகளை கலைத்து சென்றது.


நான் டோவர் கண்டிப்பாக செல்ல வேண்டுமா என்கிற குழப்பம் மீண்டும் தலைதூக்கியது
ஜெர்கினுள் நுழைத்திருந்த க்ளவுஸ் கைகளை தாண்டி குளிர் ஊசியாய் ஊடுருவிக் கொண்டிருந்தது. ஆர்னிக்காவை இன்று எப்படியாவது பார்த்தே ஆக வேண்டும். ஆர்னிக்காவின் பெயரை உச்சரித்தபொழுதே மனது தகிக்கத் தொடங்கியது. கொஞ்சம் வலுப்பெற்றிருந்த கால்கள் மீண்டும் நடுக்கம் கண்டன. நல்லவேளையாக டோவர் செல்லும் ரயில் வந்து சேர்ந்தது.


உட்காரத் தோன்றவில்லை. ஸ்காட்டிஷ்தனமான பெண்ணொருத்தி என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு பத்திரிக்கையினுள் மூழ்கிவிட்டாள். குனிந்து என்னை ஒருமுறை பார்த்துக்கொண்டேன். நான்கு நாட்களாக ஒரே உடையை அணிந்திருக்கிறேன். ஏபல் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன் செண்ட் பாட்டிலை தேடி எடுத்து மேசையின் மீது வைத்துவிட்டு தான் சென்றாள்.
அவளை அசட்டையாக நானும் ஒரு பார்வை பார்த்துவிட்டு காலியாக இருந்த எதிர் இருக்கையில் சென்று அமர்ந்தேன். இன்றாவது ஆர்னிக்காவை பார்த்துவிட வேண்டும். பனிப்பொழிவு கொஞ்சம் குறைந்திருந்து. கண்டிப்பாக வீட்டிலிருக்க மாட்டாள். பள்ளியிலிருந்து அவள் திரும்பும் வரை வீட்டிற்கு வெளியே காத்திருக்க வேண்டியது தான்.
ஜூலியா கண்டிப்பாக வீட்டிலிருப்பாள், கூடவே கேல்வினும். எனக்கு வீட்டுக்கு செல்ல விருப்பமில்லை. ஜூலியாவிற்கு நான் செல்வதில் வெறுப்பேதும் இருக்காது ஆனால் தேவையில்லாமல் தர்மசங்கட சூழ்நிலையை உருவாக்க எனக்கு விருப்பமில்லை. இன்னும் ஒரு மணி நேரம் ஆகும், ஏதாவது புத்தகமாவது எடுத்து வந்திருக்கலாம். நாக்கு வறண்டு ஒட்டிக்கொண்டது. இந்த ரயில் ஆஷ்போர்டிலும் நின்றது. மக்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். எல்லார் முகத்திலும் சிறு புன்னகை படர்ந்திருந்தது போல தோன்றியது. ஆர்னிக்காவின் புன்னகை நினைவிற்கு வந்தது. தெற்றுப்பல் தெரிய விரித்து சிரிக்கும் அந்த மெல்லிய உதடுகளுடன் கண்களும் சிரிப்பை பிரதிபலிப்பது போல மின்னிடும்.
ஆர்னிக்காவின் புன்னகையை நினைத்து சிரித்துக்கொண்டபொழுது அந்த ஸ்காட்டிஷ் பெண் மீண்டும் ஒரு முறை கண்களை உயர்த்தி என்னை பார்த்துவிட்டு பத்திரிக்கையினுள் தலையை புதைத்துக்கொண்டாள். இன்று அவளை பார்க்கும் வாய்ப்பிருந்தால் என்னை பார்த்து புன்னகைப்பாளா ? சிறு புன்னகைக்கான பாரம் பெரும் சுமையென நெஞ்சில் எழுந்தடங்கியது.


டோவர் நிலையத்தில் ரயில் நின்றபோது மணி பத்துக்கும் மேல் ஆகியிருந்தது. ஆர்னிக்காவின் பள்ளி வெஸ்ட் மார்ஷில் இருந்தது. பலமுறை ஒன்றாக பயணம் செய்த பள்ளிக்கு இன்று தனியே அவளை காண செல்ல வேண்டும். மங்கிய சூரிய ஒளி ரோட்டில் சீராக பரவியிருந்த பனியை ஒளிரச் செய்து கொண்டிருந்தது. உதடுகள் உலர்ந்து போயிருந்தன. எதாவது குடித்தால் பரவாயில்லை. பையில் கை விட்டு பார்த்துக்கொண்டேன். காஃபி குடிக்கும் அளவுக்கு பணமிருக்க வேண்டும். சர்ச் ரோட்டில் இருக்கும் காஃபி கடையை நோக்கி நடந்தேன். மனம் முழுக்க ஆர்னிக்காவின் நினைவுகள் ஆக்ரோஷம் கொண்ட கடலைப் போல கொந்தளித்துக் கொண்டிருந்தன.
கேஃபில் கூட்டமில்லை. ஒரு ப்ளாக் காஃபி வாங்கி வந்து ஒரு மூலையில் அமர்ந்தேன். ஆர்னிக்காவுக்கு கார்னர் கபேயில் கிடைக்கும் லேட்டே காஃபி மிகவும் பிடித்தமானது. விலை அதிகமானது என்றாலும் ஆர்னிக்காவிற்காக செலவழிப்பதில் நான் என்றும் யோசித்ததேயில்லை. வீட்லிருந்து நடந்து செல்லும் தூரத்தை விட கொஞ்சம் அதிகமான தூரம் தான். கைகளை கோர்த்துக் கொண்டு பனி கொட்டத் துவங்கியிருக்கும் முன் மாலையில் ஷூவினால் தரையில் படந்திருக்கும் பனியை நிரடிக்கொண்டே பேசி செல்வோம்.
லூட்டன் வந்ததிலிருந்து எந்த ஒரு கேஃபிற்கும் நாங்கள் செல்வதில்லை. அவள் குறிப்பாக எங்கேயும் வெளியே செல்வதை விரும்பி இருக்கவில்லை. ஏபலின் வீட்டிற்கு மட்டும் அவ்வப்பொழுது கூட்டிச் செல்வேன். அமைதியாகவே இருப்பாள். இந்த இரண்டு ஆண்டுகளின் தனிமை அவளை அமைதியாக மாற்றி விட்டிருந்தது. ஜன்னல்களை எப்பொழுதும் அடைத்தே வைத்திருக்கும்படி வீட்டு ஓனர் கூறியிருந்தாள். சுத்த மிடில்செக்ஸ் ஊர்க்காரி என்று அடிக்கடி பீற்றிக்கொள்பவள் எதற்கு லூட்டனில் வீடு வைத்திருக்கிறாள் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன். ஆர்னிக்காவிற்கு அந்த வீடு சுத்தமாக பிடித்தமில்லை. ஆனால் குறைந்தபட்சம் நான் ஒரு நிரந்த வேலை தேடிக்கொள்ளும் வரையிலாவது அந்த குறைந்த வாடகை வீட்டில் இருந்தாக வேண்டிய கட்டாயத்தை புரிந்துகொண்டிருந்தாள். . இருளுக்கும் தனிமைக்கும் மெதுவாக தன்னை பழக்கபடுத்திக்கொண்டிருந்தாள். எனக்காக ஆர்னிக்கா இவ்வளவு பொறுத்துக்கொண்டு இருக்க வேண்டிய நிலை என்னுடைய இயலாமையை குத்திக் காட்டிக்கொண்டே இருந்தது
காலி கோப்பையை கொஞ்ச நேரம் உருட்டிக்கொண்டிருந்தேன். மதிய உணவு இடைவேளையில் அவளை சந்திக்க் முடியுமா என்று பார்க்க வேண்டும். பேருந்திற்காக காத்திருக்காமல் நடக்கத் தொடங்கினேன். டோவரில் நாங்களிருந்தபொழுது சைக்கிளிலேயே சென்றுவிடுவாள். லூட்டனுக்கு உடனே மாற்றல் வாங்குவது அவ்வளவு எளிதல்ல என்பதால் இத்தனை நாள் லூட்டனிலிருந்து டோவருக்கு மாதாந்திர ரயில் பாசில் வந்து கொண்டிருந்தாள். இந்த வாரம் முழுவதும் அவளுடைய பழைய சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றிருந்திருப்பாள் என்பதை நினைத்த பொழுது கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. ஜூலியாவிடம் கேட்டுக்கொண்டு எப்படியாவது அந்த சைக்கிளை லூட்டனுக்கு அனுப்பிவிட சொல்ல வேண்டும். ஊருக்குள்ளேயாவது ஆர்னிக்காவுக்கு உபயோகமாக இருக்கும்.
பள்ளியை அடைந்தபொழுது சரியாக உணவு இடைவேளை முடியும் மணி அடித்தது. உணவை உண்டு முடித்த பிள்ளைகள் பாதி உண்டு முடித்திருந்த நண்பர்களை அவசரப்படுத்திக்கொண்டிருந்தனர். மரத்தடியில் ஹைட் அண்ட் சீக் விளையாடிக்கொண்டிருந்த சிலர் அப்படியே வகுப்பிற்கு ஓடினர். சில நிமிடங்களில் வளாகமே அமைதியானது. ஆர்னிக்காவின் வகுப்பிற்கு போகலாமா ? தயக்கமாக இருந்தது. மெதுவாக நடை வைத்தேன். இரண்டாவது திருப்பத்தில் அவள் வகுப்பு இருந்தது.
நேரெதிரே நிற்பதற்கு கூச்சமாக இருந்ததால் வலது ஓரமாக ஒதுங்கி நின்றேன். ஒரு நிமிடத்திற்கு பின் ஆர்னிக்கா தலையை குனிந்தபடி வெளியே வந்தாள். சீருடை அணிந்திருக்கவில்லை. ஒரே சீருடையுடன் தான் வீட்டிற்கு சென்றிருந்தாள். அங்கிருந்த அவளுடைய உடைகள் எல்லாவற்றையும் லூட்டனுக்கு வரும்பொழுது எடுத்து வந்துவிட்டோம். கையுறைகளும் அழுக்காக இருந்தன. ஒரே வாரத்தில் மெலிந்திருந்தாள். சோர்வுற்றிருந்த கண்களுக்கு கீழ் மெலிதாக கருவளையம்.
”ஆர்னிக்கா..” நான் அழைத்தது அவளை எட்டாமலேயே காற்றில் கரைந்து போனது. முகத்தை வெளிப்பக்கமாய் திருப்பிக்கொண்டாள். நான் அவளையே உற்று பார்த்துக்கொண்டிருந்தேன். கைகளை மெதுவாக பற்றினேன். கைகளை வலுவாக உதறிவளுக்கு ஏதுவாக நான் பிடியை தளர்த்தினேன். அவளின் வகுப்பாசிரியை என்ன என்பது போல் ஒரு பார்வை பார்த்து வெளியே வந்தாள்.
”பார்க்கு பக்கம் கூட்டிப் போங்கள்” என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் திரும்பி சென்றாள். ஆர்னிக்கா எனக்காக காத்திருக்காமல் விடுவிடுவென்று முன்னால் நடக்கத் துவங்கினாள்.
பெஞ்சில் ஈரம் படிந்திருந்தது, அதில் உட்காரலாமா வேண்டாமா என்று தவிப்போடு பார்த்துக்கொண்டு நின்றாள். ஜெர்கினை கழற்றி பெஞ்சின் மீது போட்டேன். “உட்காரு ஆரூ” திரும்பி என்னை முறைத்தவள் எதுவும் சொல்லாமல் எனக்கு முகம் காட்டாமல் அமர்ந்தாள்.
“இன்னும் கோவம் தீரலயா ஆரூ”
“…” பதிலேதும் பேசாமல் என்புறம் மெதுவாக திரும்பியவள் தயக்கத்தோடும் உரிமையோடும் என் கழுத்தில் புறங்கையை வைத்தாள். பிறகு நெற்றியிலும் வைத்தாள். ஒரு வாரத்திற்கு பின் ஆர்னிக்காவின் ஸ்பரிசம் என் மீது பட்டதும் உடல் சிலிர்த்தடங்கியது. அப்படியே அவள் கைகளை கோர்த்து முத்தமிட்டேன்.
“நீ வீட்டுக்கு போ… நான் சாயந்திரம் வந்திடுவேன்” நடுக்கமான குரலில். ஆர்னிக்கா அழுதுவிடுவாளோ என்று எனக்கு பயமாக இருந்தது. மெதுவாக அவள் முதுகுபுறமாக அணைத்தேன். எதிர்ப்பேதும் காட்டாமல் அமைதியாய் இருந்தவளின் முன் தரையில் அவள் முகம் நோக்கி மண்டியிட்டு அமர்ந்தேன்.
“ஆர்னிக்கா ஒரு நிமிஷம் என்னைப் பாரு” அவள் முகத்தை என்னை நோக்கி திருப்பினாள். அவள் கைகளை என் கைகளினுள் புதைத்துக்கொண்டு , “ஆரூ, நீ வருத்தப்பட தேவையில்லை. தப்பு என்மேல தானே. நான் உனக்குன்னு எதுவுமே பண்ண முடியல அந்த இயலாமைல தான் அப்படி பேசினேன். ஜூலியாகிட்ட நீ இருந்தா உனக்கு கொஞ்சம் சவுகரியமா இருக்கும்னு நினைச்சேன். உனக்கு தேவையானத என்னால சரியான நேரத்துல என்னால வாங்கி தர முடியலேயேங்குற குற்றவுணர்ச்சி எனக்கு எப்பவும் வந்துட கூடாதேங்குற சுயநலமும் அதுல இருந்துச்சு. இந்த வயசுல உனக்கு ஏன் இவ்வளவு தெளிவு, இவ்வளவு பொறுமை. எனக்கு இதுதான் வேணும்னு எதையாவது கேட்டு அடம் பிடிக்க மாட்டியான்னு மனசு ஏங்கும். தனிமையை தவிர உனக்கு வேற என்ன கொடுத்திருக்கேன் ஆர்னிக்கா. ஆனா இந்த ஒரு வாரம், நீயில்லாத ஒவ்வொரு நாளும் நீ அனுபவிச்ச மொத்த தனிமையோட வலியையும் எனக்கு கொடுத்திருச்சு ஆரூ. அந்த வீடு முழுக்க உன்னோட வாசம் விரவியிருக்கு ஆரூ. நீ நம்ப மாட்ட, இந்த ஒரு வாரம் முழுசும் உன்னோட அறையில உனக்கு பிடித்தமான பொருள்களுக்கிடையில தான் நான் தூங்கி எழுந்தேன். அங்கிருந்த எல்லா பொருளும் நீ எங்க நீ எங்கன்னு என்னை கேள்வி கேட்டுக்கிட்டே இருந்துச்சு. பயமா இருந்துச்சு. எதாவது ஒரு பொருளை நீ தொலைச்சிட்டு ஜூலியாக்கிட்ட நீ சொல்ல பயப்படுவியே, அதே பயம். அந்த அறையெங்கும் நிரம்பியிருந்தது உன் உணர்வுகள் தான் ஆர்னிக்கா”
கைகளைக் கடந்து கண்ணீர் ஓடியது.
”சரி. அப்பாவை நீ மன்னிக்க மாட்டியா ஆரூ ?” அவள் முகத்தை கையில் ஏந்தி பிடித்துக் கொண்டு கேட்டேன்.
கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆர்னிக்கா அழ ஆரம்பித்தாள், “அப்பா .. ஸாரி ப்பா….நீ பாவம்ல தனியா என்னை பார்த்துக்க முடியாதுன்னு தானே அப்படி சொன்ன…..நான் தான் என்னை விரட்டுறன்னு கோவப்பட்டுட்டேன்…..இனிமே போக மாட்டேன் ப்பா.. “
முதுகை தடவிக்கொடுத்து முகத்தை நிமிர்த்தி இருவரும் மாறி மாறி முத்தித்துக் கொண்டோம். இலைகள் உதிர்ந்த மரக்கிளைகளினூடே பொழிந்த பனி தலையை ஈரமாக்கிக்கொண்டிருந்தது.

Thursday, 20 February 2014

மார்ஷலுக்கு - 4


பேரன்புமிக்க மார்ஷல்,

கர்த்தரின் பெருங்கருணையில் வாழும் நம்மையும் நம் அன்பிற்குரியவர்களையும் வாதை என்றும் அணுகாதிருக்க என் பிரார்த்தனைகள் எப்பொழுதும்.

வார்த்தைகள் குறைந்து போயிருக்கின்றன மார்ஷல், சந்திப்புகள் குறைந்து போயிருக்கின்றன. தனிதனியாக பயணம் செய்கின்றோம். விலகி இருப்பது உனக்கு பிடித்தமானதுதானா மார்ஷல் ? பிடித்தமில்லாத ஒன்றை நாம் எப்பொழுதும் செய்வதில்லையே. 

பிரிவை பற்றி எது உன்னை யோசிக்க வைக்கிறது மார்ஷல் ? நான் உன்னை எப்பொழுதும் கைவிடுவதில்லை என்பதாக முடிந்த நம் முதல் கடிதம் உனக்கு நினைவிருக்கிறதா மார்ஷல் ? வார்த்தைகளால் விளையாடுபவர்களா நாம் ? அப்படி பல மனிதர்களை நாம் கடந்து வந்துவிட்டோம் மார்ஷல். "எப்பொழுதும்" என்பது குறிப்பிடத்தகும் நேரமா ? பொம்மையை அணைத்து நீ உறங்கிய ஒரு நாளில், எப்பொழுதோ உன்னை கருவில் சுமந்த நினைவு வருகிறது மார்ஷல்.

வன்மம் நிறைந்த இந்த உலகை பார்த்து நான் பயந்த நொடிகளிலெல்லாம் நான் ஆதரவு கொண்ட தோள்களை இனி தேட வேண்டாம் என்று நான் எப்பொழுதும் எண்ணியதில்லையே மார்ஷல். ஜென்னி என்று யார் என்னை அழைத்தாலும் மார்ஷல் தானே இந்த ஜென்னியை கண்டெடுத்தவன். மார்ஷலை மறந்து போகக் கூடியவள் என்றா ஜென்னியை எண்ணுகின்றாய் ?

"என்ன பெயர் வைக்கலாமென

யோசித்து குழம்பினேன்

வழிப்போக்கனாய் வந்த கடவுள் சொன்னான்

உன் பெயர் ஜெனஸிஸ் என

ஜெனீ ஜெனீ ஜெனீ ஜெனீ

ஜெனீ ஜெனீ ஜெனீ ஜெனீ

ஜெனீ

உச்சி முதல் பாதத்தின் விளிம்பு வரை

முத்தித்து கதறினேன்" (ஸீரோ டிகிரி)

இது நினைவிற்கு வருகிறது மார்ஷல் (அழுகிறேன்). உன்னை விட்டு நான் விலக நீயும் நானும் வேறில்லை மார்ஷல் . இனியொரு முறை இதே வார்த்தையை என்னை கூற வைக்காதே.

ஒவ்வொரு முறையும் என் முன் அழுது நீ பலமற்றவன் என்று நிரூப்பித்துக்கொண்டே இருக்கிறாய். ஒவ்வொரு முறையும் நான் சோர்ந்து விழும்போதெல்லாம் ஆறுதலாக தாங்கிய கைகள் பலமற்றவை இல்லை என்பதை நான் எப்பொழுதும் நம்பிக்கொண்டிருக்கின்றேன். இனியொரு முறை என் முன் அழாதே மார்ஷல், இனியொருமுறை அழவே அழாதே, ஆண்கள் அழுவதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது என்பதை அறிந்தவன் நீ. பலமற்றவனாக இருக்கும்பொழுதிலும் நீ விழும்வரை நான் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. தாங்குவதற்கு கைகள் இருக்கும் வரை வீழலாம் ஆனால் அழ மட்டும் செய்யாதே மார்ஷல்.

பொய் உரைத்துவிட்டேன் மார்ஷல். சிறியதோ பெரியதோ, பொய் பொய் தானே. இதை நீ மறந்து சென்றாலும் நான் எப்பொழுதும் சுமந்து கொண்டே திரிகிறேன். உண்மையை நாம் சுமந்து செல்ல தேவையேயில்லை மார்ஷல். பொய் தான் எவ்வளவு கனம். என்றென்றைக்குமான வலியாய் ஒரு பொய் மனதில் நின்றிருக்கும். அந்த பொய்யை நீயும் மறக்க தேவையில்லை மார்ஷல். எல்லாவற்றையும் தாண்டி மறைப்பதற்கு என்று நம்மிடையே நுழைந்த தடமாக இந்த பொய் ஒன்றேனும் இருந்துவிட்டு போகட்டும். மிட்டாய்களை சுற்றி இருக்கும் சரிகைத்தாளை போல தான் மார்ஷல் நினைவுகளும், பிடித்தவர்கள் தரும்பொழுது சேமித்துவைத்துக்கொள்கிறோம் இன்பமாயினும் துன்பமாயினும். பிடிக்காதவர்கள் தரும்பொழுது புறக்கணிக்கின்றோம்.

இந்த வாழ்வு நமக்கான எல்லாவற்றையும் தந்திருக்கிறது மார்ஷல். நமக்கு சரியானவற்றை தான் நாம் தேர்ந்தெடுக்கின்றோம், இருந்தும் மதிப்பீடுகளுக்கிடையே தான் நாம் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம்முடைய தேவைகள் எதுவென்று எப்பொழுதும் நமக்கு புரிந்திருக்கின்றது. மற்றவர்களுக்கு ஏன் மார்ஷல் நாம் புரிய வைக்க முற்பட வேண்டும். ஆனால் இவ்வுலகம் நம்மை அவ்வாறு வாழ விடாது மார்ஷல். இவர்களிடையே எவ்வளவு கவனமாக இருக்க வேண்டியுள்ளது மார்ஷல். ஒரு நொடியில் எல்லாவற்றையும் கலைத்துப்போடும் திறமையானவர்களிடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் மார்ஷல்.

யாரையும் இதுவரை நாம் வெறுத்ததில்லை மார்ஷல். அப்படி ஒரு வன்மம் தோன்றியிருந்தாலும் உடனே மறுதலிக்கின்றோம், ஏனெனில் வெறுப்பதில் நாம் தான் தோற்றுப்போகிறோம் இல்லயா மார்ஷல் ? ஒரு நொடியிலும் கூட வெறுப்பு மறைந்து அது குறித்து குற்றவுணர்ச்சி கொள்கிறோம். நம்மால் யாரையுமே வெறுக்க முடியாது மார்ஷல். பூனைகள் போல விலகி தான் செல்கிறோம், உண்மை தான் மார்ஷல் பூனைகள் யாரையும் வெறுப்பதில்லை. காயப்படுவோம் என்கிற பயம் தான் விலகி ஓட வைக்கிறது மார்ஷல்.

எல்லாருக்கும் பிரியமானவர்களாய் நாம் எப்பொழுதும் வாழந்துவிட முடியாது என்பதை நான் எப்பொழுது மார்ஷல் நம்பபோகிறேன். என்னவொரு ஒரு பேராசை அது ? ஏங்கி நிற்பதெல்லாம் பணம் பசியை தாணடி அன்பிற்காக என்பதை உலகமும் எப்பொழுதும் நம்பபோவதில்லை மார்ஷல். இந்த நகரம் நம்மை அச்சப்படுத்துகிறது, இந்த நகரத்து மனிதர்கள் அச்சமூட்டுகிறார்கள். மனிதர்கள் யாருமற்ற தீவிற்கு என்றாவது ஒரு நாள் சென்றுவிட வேண்டும் என்று பல முறை பேசியிருக்கிறோமே மார்ஷல். இந்த மனிதர்கள் அத்தனை பேர் மீதும் காட்ட வைத்திருக்கிற அன்பை கடலினடியில் கொண்டு புதைக்க வேண்டுமா மார்ஷல் ?

வரைய முடியாத தூரங்களிலேயே இந்த உலகம் வாழ விரும்புகிறது. ஒருவர் வாழ முடியாத வாழ்வை நாம் வாழ்ந்துவிட்டாலே நம்மை சுற்றி அசூயை சூழந்துகொள்கிறது இல்லயா மார்ஷல் ? இங்கிருந்து எடுத்து செல்வதற்கும் இங்கே விட்டு செல்வதற்கும் நினைவுகளை தவிர என்ன இருக்கிறது நம்மிடம்?

மார்ஷல், உலகை போல் நாம் வாழ வேண்டுமா ? இல்லை நம்மைப் போல்.... ?

ப்ரியங்களுடன்,
ஜென்னி

Tuesday, 18 February 2014

லாஷ்லிக்கு


பேரன்புமிக்க லாஷ்லி,

நான் சந்தோஷமாக இருக்கிறேன், மிகவும். இதை நீ உணர்கிறாயா லாஷ்லி ? எனக்கு எல்லாவும் மறந்து போயிருக்கிறது லாஷ்லி, எல்லா துன்பங்களும் எல்லா துரோகங்களும். நாம் இருவருமே ஒருவருக்கொருவர் மீட்பராகியிருக்கிறோம் இல்லையா ? இதற்காக தான் இத்தனையையும் கடந்து வந்திருக்கிறோம் லாஷ்லி. எல்லாமே பழகியிருந்தபோதிலும் இந்த நொடி இன்பமாக இருக்கிறது, எனக்காக நீயும் உனக்காக நானும் என்கிற இந்த நொடி அத்தனை இன்பமாக இருக்கிறது லாஷ்லி.

நீ எப்பொழுதும் நம்மை பற்றியே பேசுகிறாய்.. நான் மற்றவர்களை பற்றியும். நம்மை பற்றி பேச என்ன இருக்கிறது லாஷ்லி. நீயும் நானும் எப்பொழுதும் பிரிந்திருந்தோம் ? இந்த உறவு காலம்காலமாய் தொடர்ந்து வந்திருப்பது போல எது நினைக்கச் செய்கிறது ? விலகி நின்று ஒருவரை ஒருவர் பார்க்க இனி ஒன்றுமே இல்லை. நீ விரும்புகின்றவற்றை நானும் விரும்புகின்றேன், எந்த ஒரு கட்டாயமுமின்றி. நீ காதலிப்பவர்களை நானும் காதலிக்கிறேன் லாஷ்லி, இதை சொல்லிக்கொள்வதில் என்க்கொன்றும் வெட்கமில்லை. இந்த வெளிப்படையான காதலை தானே நாம் இருவரும் விரும்புகின்றோம், எல்லாவற்றையும் தாண்டி கட்டுப்பாடுயில்லாத இந்த வெளிப்படையான அன்பு தானே நம்மை பிணைத்திருக்கிறது.

பூனைக்குட்டியாய் உன் கால்களை உரசி சுற்றி வர வேண்டும் லாஷ்லி. உன்னுடன் இருக்கும்பொழுது தான் நான் என்னை சுதந்திரமானவளாக உணர்கிறேன், பூனையைப்போல. இரு பூனைகளிடைய படுத்துறங்கிய ஒரு இரவில், கருப்பையில் சுருண்டு ஒளிந்துகொள்வது போல் அவ்வளவு பாதுகாப்பாய் உண்ர்ந்தேன். பூனையாய் வாழ விதிக்கப்பட்டிருப்பது பெரும் பாவம் என்று எப்பொழுதும் நினைத்துக்கொண்டிருந்தேன். சாத்தானின் விரல்கள் இந்த பூனையை தீண்டும் வரையிலும் கூட அவ்வாறே நினைத்திருந்தேன். சாத்தானால் மீட்பராகிய இந்த பூனையின் வாழ்வு ஆசிர்வதிக்கப்பட்டது லாஷ்லி.

இந்த பிறந்தநாளில் மட்டுமில்லாமல் இனி எல்லா நாளின் முதல் நொடியிலிருந்து முடிவுறும் நொடிவரை நீ என்னை நிறைத்திருக்க வேண்டும், நான் உன்னை நிறைந்திருக்க வேண்டும். வேறெதுவும் ஒரு துளியேனும் நம்மை நிறைக்கக் கூடாது. 'நம்மிடையே' என்றொரு வார்த்தையும் இனி வேண்டாம். விலகி இருப்பது எனக்கு பிடித்தமானது இல்லை. பிடித்தமில்லாத ஒன்றை நான் எப்பொழுதும் செய்வதில்லை. எவரிடமிருந்தும் விலகியிருப்பதை நான் விரும்புவதேயில்லை. மற்றவர்களை பற்றி நினைக்கும்பொழுது விலகுவது ஒரு சாத்தியமாகவாவது இருக்கிறது. ஆனால் நம்மிடையே அந்த வார்த்தை நுழைவதை கூட எனக்கு விருப்பமானதாக இல்லை லாஷ்லி.

உன்னுடைய வாசனை என் மீது எப்பொழுதும் பரவியிருக்கிறது லாஷ்லி. என் குரலும் கூட உன் குரலாகத் தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. நீயும் நானும் வேறில்லை லாஷ்லி.. வேறில்லை. இப்பொழுது ஒன்றாக இருக்கின்றோம். இனி எப்பொழுதுமே. இந்த இரவில் இதுகாறும் நினைவுகளை மட்டுமாவது கிளறிக்கொண்டிருந்த மைக்கேலின் புகைப்படத்தை கிழித்தெறிந்துவிட்டேன். ஜூலியா என்று யாருமே உலகில் இல்லை லாஷ்லி. ஜென்னி மட்டும் தான், நம்க்கான உலகத்தில் 'லாஷ்லியும் ஜென்னியும்' மட்டும் தான். ஜென்னி.. ஜென்னி.. என்று என் பெயரை நானே உரக்க கூவிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஜென்னியை என்றுமே நீ கைவிட மாட்டாய் லாஷ்லி. ஜூலியாவைப் போல் ஜென்னி என்றுமே தொலைந்து போக முடியாது.

இது நாள் வரை கடவுளிடம் வேண்டிக்கொள்ள பெரிதாய் ஒன்றுமே இருந்ததில்லை லாஷ்லி. ஆனால் எப்பொழுதும் நம்பிக்கை இருந்திருக்கிறது. இந்த வாழ்வு நமக்கானது லாஷ்லி, இதை நாம் கொண்டாடப் போகிறோம். தனியாக பயணம் செய்ய நீயோ நானோ எப்பொழுதும் முடிவெடுத்ததில்லை. ஒரு தொலைதூர பயணத்திற்காக எப்பொழுதுமே நாம் காத்திருக்கிறோம், இல்லயா ? லாஷ்லி, இனி வேதனைகள் இல்லை, வலிகள் இல்லை, கண்ணீர் இல்லை. புன்னகையை மட்டுமே என்றென்றும் சுமந்து செல்லப் போகிறோம்.

கைகளை கோர்த்துக்கொள் லாஷ்லி, இந்த இரவு நீள வேண்டும் .

என்றும் தீரா முத்தங்களுடன்,
உன் ஜென்னி

Monday, 10 February 2014

மோக்லி


மோக்லி அசைவில்லாமல் ஒரே இடத்தில் இருந்தது. பல நேரம் இப்படி ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. மீன் தொட்டியை விரல்களால் சுண்டினேன். "அது தூங்கிட்டு இருக்கும் விடேன்டீ கொஞ்ச நேரம் அதை" பப்பி சலித்துக்கொண்டாள். ஒரு நாளுக்கு நூறு முறை சாப்பாடு போட்டியா அவனுக்கு என்று கேட்டுக்கொள்கிறேன். அடிக்கடி மீன் தொட்டியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு மீன் தொட்டியை தடவிக் கொடுக்கிறேன். நடு இரவில் பாத்ரூம் போகஎழுந்தால் கூட மீன் தொட்டியை சென்று ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன். மோக்லியின் தொட்டியும், அதன் அடியில் பரப்பியிருக்கும் நீலமும் பச்சையும் கலந்த கற்களின் பிரதிபலிப்பும் இந்த இரவை அவ்வளவு அழகாகிக் கொண்டிருக்கிறது.

ஏன் எனக்கு ஃபைட்டர் ஃபிஷ் பிடித்தது ? குறிப்பாக நீல நிற ஃபைட்டர் ஃபிஷ் ? காரணம் தெரியவில்லை. ஆனால் நீல நிறம் காரணம் இல்லை. நீல நிறத்தில் வேற எந்த மீன் எனக்கு கிடைத்திருந்தாலும் அதை இவ்வளவு ரசித்திருக்க மாட்டேன். காரணம் தெரியாமல் பிடித்திருக்கும் சில விஷயங்கள் சில நேரம் சுவாரசியமாகவே இருக்கிறது. இதற்கு முன் மீன் வளர்ப்பு அனுபவம் எதுவும் எனக்கு இல்லை. வீட்டில் பெரிய மீன் தொட்டி ஒன்று இருக்கிறது. அதற்குள் ஆரஞ்சு, வெள்ளை நிற ஏஞ்சல் மீன்களும், சில்வர் மோளிகளும், கண்கள் வெளியே துருத்திக் கொண்டிருக்கும் கருப்பு நிற டெலஸ்கோஃப்களும் கொச கொசவென்று அங்கும் திரிந்து கொண்டிருக்கும். அவை மீது எப்பொழுதும் பெரியதொரு ஈர்ப்பு எனக்கு இருந்ததே இல்லை. தொட்டியில் இருக்கும் நீரை இரண்டு நாட்களுக்குள் கலங்கடித்துக்கொண்டும் சண்டையிட்டுக்கொண்டும், ரொம்ப சாதாரணமாக நீந்திக்கொண்டு அலையும் அந்த மீன்கள் என்னை எப்பொழுதும் கவர்ந்ததில்லை.

தொட்டியில் இருக்கும் தண்ணீரை அடிக்கடி மாற்றுவதான் பெரிய வேலை. முதலில் ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை பிடித்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு மீனாக வலையில் பிடித்து பக்கெட்டினுள் விட வேண்டும். சில மீன்கள் பிடித்துக் கொண்டிருக்கும்பொழுதே வெளியே எகிறி குதித்துவிடும். அகலமான பாத்திரத்தில் விடவில்லை என்றாலும் பெரும்பாலும் சண்டையிட்டுக்கொண்டு எம்ப ஆரம்பித்துவிடும். பின்னர் அவ்வளவு பெரிய தொட்டியிலிருந்து நீரை முழுவதுமாக வெளியேற்ற வேண்டும். டியூப் போட்டு வெளியேற்றவும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். நீரை மொண்டு வேறெதிலாவது ஊற்றிவிட்டு பின்னர் அடியில் பரப்பியிருக்கும் கற்களையும் கழுவ வேண்டும். கொஞ்சமும் அசைக்க முடியாத கனமான தொட்டி. அந்த இடத்தில் நின்று கொண்டே அதை சுத்தம் செய்ய வேண்டும். அம்மாவிற்கு மீன் தொட்டியை கழுவுவதில் எந்த ஒரு உதவியும் நான் செய்ததே இல்லை. கழுவி முடிக்கும் வரை வாயைக் கூட திறக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பேன். தண்ணீர் கொண்டு வந்து தருவது மட்டும் தான் என் வேலை. அவ்வளவு அசுத்தமான நீரை பார்ப்பதற்கே அருவெறுப்பாக இருக்கும் சில நேரம். அம்மா பொறுமையாக கழுவி முடித்துவிட்டு மீன்களை எடுத்து அந்த தெளிவான நீரில் விடும்பொழுது மட்டும் மீன் தொட்டி அழகாக தெரியும்.

ஒரு நாள் கூட நான் மீன்களுக்கு உணவிட்டதில்லை. சிறுசிறு கலர் உருண்டைகள் அடைத்திருக்கும் பாக்கெட்டை பார்த்திருக்கிறேன் அவ்வளவு தான். இரவில் தான் அந்த உணவை அம்மா போடுவாள். அம்மா மீன் தொட்டியின் அருகே சும்மா போய் நின்றால் கூட அம்மா நிற்கும் இடத்தில் எல்லா மீன்களும் வந்து குழுமிவிடும். இவ்வளவு அடையாளம் இந்த மீன்களுக்கு தெரியுமா என்று ஆச்சரியமாக இருக்கும். மீன்கள் எப்பொழுதாவது நம்மை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்திருக்கிறேன். சிறு வாயை அசைத்துக்கொண்டு எதோ சொல்வது போலவே இருக்கும். நடனமாடும் ஆரஞ்சு நிற மீனை சென்ற முறை ஊருக்கு சென்றபொழுது கவனித்தேன். மொபைலில் பாட்டு போட்டு கேட்டுக்கொண்டிருந்தேன். முதலில் நான் மீன் தொட்டியை கவனிக்கவே இல்லை. ஒரே ஒரு ஆரஞ்சு நிற மீன் மட்டும் மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தது கவனத்தை மெதுவாக ஈர்த்தது. கொஞ்சம் நெருங்கி உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். கன்னம் கொழுத்த அந்த மீனின் நடனம் சந்தோஷம் மிகுந்திருக்கும் ஒரு பெண்ணின் மெல்லிய நடனம் போல அவ்வளவு அழகாக இருந்தது. முட்டாள்தனமாக பாட்டை நிறுத்திவிட்டு அதை கவனித்தேன். ஒரு நொடி அமைதியாக அசந்து என்னை வெறித்து பார்த்துவிட்டு வேறு பக்கம் சென்றுவிட்டது. குற்றவுணர்ச்சி அந்த இரவை நிறைத்திருந்தது. ஊருக்கு சென்றிருந்தபொழுது தான் ஒரு ஃபைட்டர் ஃபிஷ் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அடிக்கடி நெட்டில் நீல நிற ஃபைட்டர் ஃபிஷ் படங்களை தேடி தேடி பார்த்துக்கொண்டிருந்தேன்.

என்னுடைய தோழி ஒருத்தி இரண்டு மீன்கள் வளர்த்துக் கொண்டிருந்தாள். உடல்நிலை சரியில்லாமல் ஒரு மீன் இறந்தபொழுது இன்னொரு மீனை நினைத்து தான் எனக்கு ரொம்பவும் கவலையாக இருந்தது. இரண்டும் அந்த குட்டி தொட்டியில் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு சந்தோஷமாக சுற்றி வந்ததை நானே பார்த்திருக்கிறேன். இன்னொரு மீனும் சில நாட்களில் இறந்துவிட்டதை தோழி அந்த முறை அழாமல் வெறுமையான குரலில் சொன்னாள். அதன் பிறகு அவள் மீன் வாங்கவேயில்லை.

இப்பொழுதெல்லாம் மோக்லியை பற்றிய கவலை என்னை பெரிதும் ஆக்ரமித்திருக்கிறது. முதல் நாள் மோக்லியை தனியாக விட்டுவிட்டு அலுவலகம் சென்ற நாளில் பகல் முழுதும் அவன் என்ன பண்ணிக்கொண்டிருப்பான், தனியாக இருப்பானா என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். தங்கை கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்து தொலைபேசியில் என்னை அழைத்தபொழுது ஹலோ கூட சொல்லாமல் மோக்லி என்ன பண்ணிக்கிட்டு இருக்கான் என்று கேட்டேன். "யடீ அதுக்கு ஒரு வேளை சாப்பாடு போட்டா போதும்டீ , நிறைய தின்னா மண்டை வீங்கி செத்து போய்டும்" என்று அடிக்கடி அவள் சொன்னாலும் போதுமா அவனுக்கு என்று உணவு குறித்த பயம் எப்பொழுதும் இருக்கிறது. ஊருக்கு சென்றுவிட்டால் யார் மோக்லியை பார்த்துக்கொள்வார்கள். இட மாற்றங்களை எப்படி ஏற்றுக்கொள்ளும் போன்ற குழப்பங்கள் நிரம்பி வழிந்தாலும் தற்காலிகமாக நானே அந்த நினைவுகளை ஒதுக்கிக்கொள்கிறேன்.

நேற்றே தண்ணீர் மாற்ற வேண்டும் என்று நினைத்திருந்து மறந்துவிட்டேன். இன்று பப்பி தான் நினைவுபடுத்தினாள். தண்ணீரை மாற்ற வேண்டும் என்று நினைத்தபொழுதே திக்கென்றிருந்து. ரொம்பவும் சின்ன தொட்டி தான். மோக்லி ரொம்பவும் குட்டி. தண்ணீரை மாற்ற வேண்டுமானால் வேறொரு பாத்திரத்தில் முதலில் அவனை விட வேண்டும். எப்படி அவனை எடுத்து போடுவது என்று பப்பியிடம் கேட்டவுடன், "டீ வடிகட்டுறதுல எடுத்து பக்கெட்ல போட்டுடலாம்டீ" ரொம்ப சாதரணமாக சொன்னாள். எனக்கு தான் பயமாகவே இருந்தது. தொட்டியை எடுத்து கீழே வைத்துவிட்டு முழித்துக்கொண்டிருந்ததை பார்த்துவிட்டு அவளே வடிக்கட்டியை எடுத்து வந்து ஒரு நொடியில் பிடித்து இன்னொரு பாத்திரத்தில் போடும்வரை பதற்றத்தில் என் முழி பிதுங்கிக்கொண்டிருந்தது. "ஸ்ஸ் பார்த்து பார்த்துடீ" , திரும்பி என்னை முறைத்துப் பார்த்தாள். நான் அமைதியாக மீன் தொட்டியை கழுவ எடுத்து சென்றுவிட்டேன். தண்ணீர் மாற்றியவுடன் அவளே மறுபடியும் எடுத்துப்போட்டாள், இம்முறை உடல் குலுக்கி மெதுவாக அது துடித்ததை என்னால் பார்க்கவே முடியவில்லை.

மோக்லி தனியாக தான் இருக்கிறான். முதல் நாளிலிருந்து. ஒரு மீனுக்கு எந்த மாதிரியான ஆளுமை உணர்வு இருக்க முடியும் ? எதனால் இப்படி காலம் முழுவதும் தொட்டியில் இவன் தனியாக நீந்திக்கொண்டிருக்க வேண்டும் ? பூனைகளை போல மீன் சுதந்திரமாக இருக்க விரும்புமா ? தெரியவில்லை. சில நேரம் அமைதியாக ஒரே இடத்தில் இருக்கிறான், சில நேரம் சுற்றி சுற்றி வருகிறான். இப்பொழுதெல்லாம் என் விரல்களின் அடையாளம் அவனுக்கு தெரிந்திருக்கிறது. தொட்டியில் சுண்டும்பொழுது அருகில் வருகிறான். மோக்லி மோக்லி என்று நூறு முறையாவது அவனை அழைத்துக்கொண்டே இருக்கிறேன். தனிமையை இவ்வளவு அழகாக எதிலும் நான் பார்த்திருக்கவில்லை.

கொஞ்சம் நேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு மெதுவாக தொட்டியை அதன் இடத்தில் வைத்தேன். மறுபடியும் தெளிந்த நீர், அதே பச்சை நீல கற்கள், தனியாக மோக்லி; மெதுவாக நீந்தினான்.