Thursday, 4 September 2014

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு கடிதம்

நண்பா,

(இப்படி விளிப்பது சரியாக இருக்கிறதா என்று தெரியவில்லை, மன்னிக்கவும்).

நலமாக இருக்கிறீர்களா ? நான் இங்கு நலம். பேஸ்புக்கில் இல்லாததால் கொஞ்ச காலம் வெளியுலகம் காணாத பிள்ளை போல் இருக்கிறேன். ஆனால் படிப்பதற்கும் எழுதுவதற்கும் நிறைய நேரம் கிடைத்திருக்கிறது. எழுதுவதை விட நிறைய படிக்க பிடித்திருக்கிறது. அவ்வப்பொழுது என்னுடைய வாசிப்பனுபவங்களை Goodreadsசிலும், அலுவலக வலைபக்கத்திலும் பதிந்து வருகிறேன்.

திருமண வேலைகளும் அதை ஒட்டிய குழப்பங்களும், திருமணத்திற்கேயுரிய பிரச்சனைகளையும் கடந்த சில நாட்களாக சூழ்ந்து இருக்கின்றது. எல்லாவற்றையும் சரி செய்துவிடக்கூடிய திராணி இருக்கிறதா என்று அடிக்கடி சந்தேகம் ஏற்படுகின்றது

படிப்பது ஒன்று தான் இத்தகைய வாதைகளிலிலிருந்து இப்பொழுதைக்கு மீட்சி தருவதாக இருக்கின்றது. புத்தகங்கள் நிரம்பியிருக்கும் இந்த வீட்டில் இன்னது தான் என்று இல்லாமல் தோன்றிய புத்தகங்களை எடுத்து வாசித்துக் கொண்டிருக்கின்றேன் (யாரும் பரிந்துரைக்கும் புத்தகங்களை தேடி படிக்கும் பழக்கம் இன்னும் வாய்க்கவில்லை).

புது வீட்டில் குடியேறி இரண்டு மாதங்கள் முடிவடைந்துவிட்டது. இங்கு பூனைகள் ஏதுமில்லை என்று போன வாரம் வரை நினைத்திருந்தேன். ஆனால் சென்ற வாரம், கொடியில் காய்ந்து கொண்டிருந்து துணிகளை எடுப்பதற்காக சென்றிருந்தபொழுது கொழுத்த மஞ்சள் நிற பூனையை பார்த்தேன். நான் அதை பயப்படுத்த வேண்டாம் என்று நினைத்தபொழுதும் அது என்னைக் கண்டதும் சுவர்மேல் ஏறி பாய்ந்தோடி விட்டது.

இன்னொரு முக்கியமான விசயம் இங்கு பக்கத்து வீட்டில் ஒரு கிணறிருக்கிறது. சென்னையில் கிணறுகளை நான் பார்த்ததில்லை. அது வெகு ஆச்சிரியமாக இருந்தது. மார்வாடிகளும் பிராமணர்களும் நிறைந்த பழய வீடுகளை கொண்ட தெரு இது. இந்த இடம் கொஞ்சம் ஆசுவாசம் அளிப்பதாக இருக்கிறது.

வாசலில் ஒரு தாய் நாயும் அதனுடைய இரண்டு குட்டிகளும் காலை வேளைகளில் சோம்பலாக படுத்துக் கிடக்கும். பெரும்பாலும் மாலை நேரங்களில் அவற்றை பார்க்க முடிவதில்லை. எப்பொழுதாவது மீதமிருக்கும் பாலும் சோறும் போடுவேன். எங்களுக்கிடையேயான நட்பு இந்த அளவிலேயே முடிந்துவிடுகின்றது.

இப்பொழுது வியாழக்கிழமை விரதங்கள் அடிக்கடி இருப்பதில்லை.
பெரும்பாலும் பசி எடுத்துவிடுகின்றது அல்லது மனநிலை சரியில்லாமல் இருக்கிறது.

என்னளவில் பேச்சு குறைந்திருக்கிறது, வெளியே செல்வது குறைந்திருக்கிறது. படிப்பதும் எழுதுவதுமாக நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றேன். அடுத்து என்ன என்கிற கேள்வி வரும்பொழுது தான் பெருங்குழப்பம் ஆட்கொள்கிறது. ஒரு குடும்பத்தை நிர்வாகிக்க தேவையான திறமை என்னிடம் குறைவாக உள்ளதாகவே உணர்கிறேன். அதனால் தான் திருமணம் என்பது என்னுடைய மனநிலைக்கு ஏற்று தான் செய்கிறேனா என்று அடிக்கடி குழம்பி போய்விடுகிறேன்.

நிறைய படிப்பதும் சில சமயம் வாதையாக இருக்கிறது, அதாவது உடல் வாதை. ஒரு கண்ணில் தூரப் பார்வை வந்தது போலிருக்கிறது. பேருந்திலும் படித்துக்கொண்டே செல்வதினால் இருக்கலாம். படிப்பதையும் விட்டால் என்னால் தூங்க தான் முடிகின்றது. வேறிதிலும் மனம் ஈடுபதுவதில்லை.

இப்பொழுதெல்லாம் கோபம் வந்தால் அடக்கிக் கொள்ள பழகிவிட்டேன். பெரும்பாலும் கோபம் வருவதில்லை, அதற்கு பதில் சலிப்பு தான் மிஞ்சுகிறது. இந்த கடித்ததிலேயே உங்களுக்கு தெரிந்திருக்கும் எந்த அளவிற்கு சலித்து புலம்பியிருக்கிறேன் என்று. சரி அது போகட்டும் விடுங்கள்.

உங்களுக்கு இன்னமும் பக்கத்து வீட்டிலிருந்து உணவு வருகின்றதா? நெடுநாட்களாக உங்களிடம் நான் கேட்க நினைத்து தவற விட்ட கேள்வியை எந்த வித தயக்கமும் இல்லாமல் கேட்கலாம் என்று தான் நம்புகிறேன். இந்த தனிமை நீங்களாக விரும்பி ஏற்படுத்திக் கொண்டதுதானா? தனிமை சில சமயம் கொடுமையானதாகவும் பிறிதொரு சமயம் விரும்பி ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் விசித்திரமாக இருப்பதும் விளங்க முடியாததாக இருக்கிறது இல்லையா?

தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டியதாக நான் நினைக்கும் ஒரே ஒரு விசயம், நீங்கள் Responsibilities எடுத்துக்கொள்ள வேண்டும். அது உங்களிடம் குறைவாக இருக்கிறது என்றே எண்ணுகிறேன். பிறருடைய வாழ்க்கைகான responsibilities பற்றி இங்கு நான் கூறவில்லை. At least உங்கள் வாழ்க்கைக்கானதை நீங்கள் கொஞ்சமாவது பொருட்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறேன்.

இன்னும் நிறைய பேச வேண்டும் என்று நினைக்கிறேன், உங்களிடமிருந்து பதில் வரும்பட்சத்தில் இன்னும் பேசலாம்.

இரண்டு கேள்விகள்,

’மிர்தாத்தின் புத்தகம்’ வாசித்திருக்கிறீர்களா ?

ஏதோவொரு பழமையான சிவன் கோவிலின் கருவறை வாசத்தை சமீபத்தில் சுமந்தீர்களா ?

பேரன்புடன்,
கார்கி

No comments:

Post a Comment