Wednesday, 4 September 2013

ஒரு பார்வை ஒரு புன்னகை ஒரு மௌனம்



யாருமறியாமல் ரகசியமாய்
நீ தரும் 
கைக்குட்டைகளில் 
புதைத்து தருகிறேன்
என் வாசனைகளை 


--------------------------------------------------------------------------------------------

காரப்பொறிகளில் இருக்கும்
நிலக்கடலைகள் 
எனக்கு பிடித்தமானவை தான்
அதை உனக்கு
பொறுக்கித் தருவது 
அதைவிட பிடித்தமானதாக இருக்கிறது

--------------------------------------------------------------------------------------------

கையெழுத்திடும் போதெல்லாம்
நீ தட்டிவிட்டு 
கோணல்மாணலான எழுத்துக்களோடு 
நிறைந்திருக்கும் கையொப்ப ஏடு
நீ இல்லாத ஒரு நாளில் 
வெறுமையாய் 
என்னைக் கடந்து சென்றது


--------------------------------------------------------------------------------------------

கடைசியாக 
நாம் மௌனமாய் 
அமர்ந்திருந்த இடத்தை 
இன்று நான்
தனியே கடக்கும்பொழுது
நாம் விட்டுச்சென்ற மௌனம்
பல பாஷைகளில் 
பேசி சென்றது

--------------------------------------------------------------------------------------------


நம்மிடையேயான
புரிதல்களின் இடைவெளிகளில்
நிரம்பி வழிகிறது
ஒரு பார்வை
ஒரு புன்னகை
ஒரு மௌனம்