Friday, 27 February 2015

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்




பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில், எப்பொழுதும் அடைத்துக் கிடக்கும் ஒரு கடையின் முன் வராந்தாவில் ஒரு அட்டை பெட்டி ஷீட்டை தரையோடு விரித்த அதில் அமர்ந்திருப்பார். அந்தக் கடைக்கும் பக்கத்துக்கும் கடைக்கும் இடையில் குட்டி சுவர் ஒன்று உண்டு. அந்த மூலையில் தான் பாட்டியினுடைய மாத்திரை டப்பா, ஒரு குவளை, ஒரு தட்டு மற்றும் ஒரு மூட்டை (துணி மூட்டை?) இருக்கும். காலை வேளைகளில் பாட்டி அங்கு இருக்க மாட்டார். ஆனால் பொருட்கள் அங்கேயே தான் இருக்கும்.

இரவு அலுவலகத்தில் இருந்து திரும்பி வரும் நேரத்தில் தான் அமர்ந்திருப்பார். பெரும்பாலும் எதையாவது யோசித்துக் கொண்டோ அல்லது சாப்பிட்ட தட்டை கழுவிக் கொண்டோ இருப்பார். பல நாட்கள் நான் பாட்டியை கவனித்தும் கவனிக்காதது போல் சென்றுகொண்டிருந்தேன். எப்பொழுதாவது பாட்டியும் என்னை எதேர்ச்சையாக பார்ப்பார். ஒருபொழுதும் புன்னகைத்துக் கொண்டதில்லை நாங்கள், ஒருபொழுதும் பாட்டி என்னிடம் எதையும் யாசித்ததில்லை.

இரண்டு நாட்களுக்கு முன் எப்பொழுதும் போல் எதேர்ச்சையாக பாட்டியை கவனித்தேன், என்னையே பார்த்துக் கொண்டிருந்த பாட்டி “ம்மா ம்மா பசிக்கிது மா எதுனா குடுமா” என்று சொன்னார். நிற்கவும் முடியாமல் தொடர்ந்து நடக்கவும் முடியாமல் தள்ளாடினேன். என்னிடம் சில்லறைகள் இல்லை. சில்லறையாக கொடுக்கவும் விருப்பமில்லை. ஏடிஎமிலிருந்து எடுத்த கடைசி மூன்று நூறு ரூபாய் தாள்கள் மட்டுமே இருந்தது. இதை வைத்து தான் மூன்று நாட்களை ஓட்ட வேண்டும். நூறு ரூபாயை கொடுக்க எப்பொழுது மனமிருந்திருக்கிறது. “சில்லறை இல்லை பாட்டி” என்று கூறிவிட்டு விடுவிடுவென்று அந்த இடத்தை விட்டு அகன்று நேரே வாழைப் பழ கடையில் சென்று நின்றேன். பெரிய பழம் நான்கை வாங்கிக் கொண்டு பக்கத்திலிருந்த ஹோட்டலில் இட்லியும் கட்டிக்கொண்டேன்.

பாட்டி இருக்கும் இடத்திற்கு திரும்பவும் சென்று பழத்தையும், சாப்பாட்டையும் கொடுத்த பொழுது அவர் உணவை வாங்க மறுத்து “காசா குடும்மா காலைக்கு நாஷ்டாக்கு ஆவும்” என்று சொன்னபொழுது தான் உரைத்தது பாட்டி சாப்பிட்டிருக்கலாமென்று, மணி அப்பொழுதே ஒன்பதரை ஆகியிருந்து. யாசகம் கேட்கும் சில பாட்டிகள் மது வாங்கி குடிப்பதை செய்திதாள்களிலும், பிறர் கூறும்பொழுதும் அறிந்திருக்கிறேன். அதற்காக தான் பாட்டி காசு கேட்கிறாரோ என்று அபத்தமான நினைவு வந்து தொலைத்தது, அதற்காக என்னால் சாப்பாட்டையும் திரும்பி எடுத்து செல்ல முடியாது. ”பரவாயில்லை பாட்டி, கொஞ்சமா சாப்பிடுங்க” என்று வாழைப்பழத்தையும் கையில் திணித்தேன். “உனக்கேன்ம்மா சிரமம்” என்றபடி வாங்கிக் கொண்டவர் எதோ சொல்ல வந்ததை சொல்ல முடியாதபடி அமைதியாக பார்த்தார். எனக்கு அதற்கு மேல் சில்லறை கொடுக்கவும் விருப்பமில்லாமல் இருந்ததால் ”சரி சாப்பிடுங்க” என்று கூறி கிளம்பிவிட்டேன்.

சரவ் ஓட்ஸ் பாக்கெட் வாங்கி வர சொல்லியிருந்தான். அதை வாங்க முடியாதில் வருத்தமொன்றும் இருக்கவில்லை. ஓட்ஸ் இல்லையெனில் இட்லி அவித்து சாப்பிட்டுக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இருக்கப்போவதில்லை என்று மாவு வாங்கி சென்றுவிட்டேன்.

நேற்றைக்கு முந்தைய தினம் இரவில் பாட்டியை பார்த்து அருகில் சென்று நின்றபொழுது முதலில் அவர் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. “சாப்பாடு வாங்கிட்டு வரவா பாட்டி” என்று கேட்ட பின்னர் தான் தெரிந்துகொண்டு “உன்னைய பத்தி தான்ம்மா சொல்லிக்கிட்டு இருந்தேன்” என்று கூறினார். யாரிடம் என்று தெரியவில்லை. “நேத்து வாங்கி கொடுத்த இட்லில இரண்டு வச்சிருந்தேன் ம்மா அதை சாப்பிட்டுக்கிட்டேன்” என்றார். என்னால் அதை சகித்துக் கொள்ளவே இயலவில்லை, முந்தய இரவின் இட்லியை அடுத்த நாள் காலையில் கூட நான் சாப்பிட்டதில்லை அதை அடுத்த இரவு வரைக்கு வைத்திருந்து சாப்பிடும் அவலம் கொடுமையாக இருந்தது. பையில் இருந்து இருபது ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டேன்.

நேற்றிரவு தூரத்தில் வரும்பொழுதே பாட்டி அடையாளம் கண்டு கொண்டார். பக்கத்தில் சென்று “சாப்டீங்களா” என்று கேட்டபொழுது சங்கடத்துடன் தலையை ஆம் என்றும் இல்லையென்றும் ஆட்டினார். புரிந்துகொள்ள முடிந்தது. சாப்பாடு வாங்கிட்டு வரவா என்று மறுமுறை கேட்டபொழுது தான் தயக்கத்துடன் சரிம்மா என்று சொன்னார். சாப்பாடு பொட்டலத்தை கையில் கொடுக்கும்பொழுதே அவருக்கு கண்ணெல்லாம் கலங்கி விட்டது. எனக்கும் ரொம்பவும் சங்கடமாக ஆகிவிட்டது. கைகளை தொட்டு சாப்பிடுங்க நாளைக்கு வரேன் பாட்டி என்று சொன்னதும் அழுதே விட்டார். ஒரு தொடுதலுக்கு அவ்வளவு சக்தியிருக்கிறது. எந்தவித அருவருப்பும் இல்லாமல் தோளோடு அணைத்துக் கொண்டேன். என் பாட்டியின் முகத்தை தவிர எதுவுமே நினைவில் வரவில்லை(என் பிரியமான பாட்டி இறந்து மூன்று வருடங்களாகிவிட்டது). ”சரிம்மா சரிம்மா, நேரமாச்சு நீ கெளம்பு” என்று தனக்கும் எனக்குமாய் சமாதானம் சொல்லிக் கொண்டார்.

நேற்றிரவு அவர் நிம்மதியாக உறங்கியிருக்க கூடும் என்று கூட என்னால் நினைத்துக் கொள்ள முடியவில்லை. நான்கு அடக்கமான சுவர்களுக்குள் படுத்துக்கொள்ளும் எனக்கு போர்வை தேவையாக இருக்கிறது. இன்று சம்பளம் வந்தவுடன் பாட்டிக்கு ஒரு போர்வை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

பசி தான் மனிதனை இயங்கச் செய்கிறது. அதே பசி தான் மனிதனின் ஆகப்பெரும் துயரமும் கூட. தினம் தினம் மூன்று வேளையோ அல்லது அதற்கும் மேலோ உணவு கிடைப்பவர்களுக்கு பசி வெறும் உணர்ச்சியாக இருக்கலாம். ஆனால் சிலருக்கு அது தான் ஆதாரம். 
யாரோ ஒருவர் பசியோடு இருப்பதை தெரிந்தே என்னால் சாதாரணமாக 
கடந்து செல்ல முடியவில்லை. என்னால் முடிந்ததை நான் பகிர்ந்துண்டு வாழ்கிறேன். ஆக,

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
இங்கும் வாழும் மனிதர்க்கெல்லாம்.... (பாரதி)


No comments:

Post a Comment