Thursday, 20 February 2014

மார்ஷலுக்கு - 4


பேரன்புமிக்க மார்ஷல்,

கர்த்தரின் பெருங்கருணையில் வாழும் நம்மையும் நம் அன்பிற்குரியவர்களையும் வாதை என்றும் அணுகாதிருக்க என் பிரார்த்தனைகள் எப்பொழுதும்.

வார்த்தைகள் குறைந்து போயிருக்கின்றன மார்ஷல், சந்திப்புகள் குறைந்து போயிருக்கின்றன. தனிதனியாக பயணம் செய்கின்றோம். விலகி இருப்பது உனக்கு பிடித்தமானதுதானா மார்ஷல் ? பிடித்தமில்லாத ஒன்றை நாம் எப்பொழுதும் செய்வதில்லையே. 

பிரிவை பற்றி எது உன்னை யோசிக்க வைக்கிறது மார்ஷல் ? நான் உன்னை எப்பொழுதும் கைவிடுவதில்லை என்பதாக முடிந்த நம் முதல் கடிதம் உனக்கு நினைவிருக்கிறதா மார்ஷல் ? வார்த்தைகளால் விளையாடுபவர்களா நாம் ? அப்படி பல மனிதர்களை நாம் கடந்து வந்துவிட்டோம் மார்ஷல். "எப்பொழுதும்" என்பது குறிப்பிடத்தகும் நேரமா ? பொம்மையை அணைத்து நீ உறங்கிய ஒரு நாளில், எப்பொழுதோ உன்னை கருவில் சுமந்த நினைவு வருகிறது மார்ஷல்.

வன்மம் நிறைந்த இந்த உலகை பார்த்து நான் பயந்த நொடிகளிலெல்லாம் நான் ஆதரவு கொண்ட தோள்களை இனி தேட வேண்டாம் என்று நான் எப்பொழுதும் எண்ணியதில்லையே மார்ஷல். ஜென்னி என்று யார் என்னை அழைத்தாலும் மார்ஷல் தானே இந்த ஜென்னியை கண்டெடுத்தவன். மார்ஷலை மறந்து போகக் கூடியவள் என்றா ஜென்னியை எண்ணுகின்றாய் ?

"என்ன பெயர் வைக்கலாமென

யோசித்து குழம்பினேன்

வழிப்போக்கனாய் வந்த கடவுள் சொன்னான்

உன் பெயர் ஜெனஸிஸ் என

ஜெனீ ஜெனீ ஜெனீ ஜெனீ

ஜெனீ ஜெனீ ஜெனீ ஜெனீ

ஜெனீ

உச்சி முதல் பாதத்தின் விளிம்பு வரை

முத்தித்து கதறினேன்" (ஸீரோ டிகிரி)

இது நினைவிற்கு வருகிறது மார்ஷல் (அழுகிறேன்). உன்னை விட்டு நான் விலக நீயும் நானும் வேறில்லை மார்ஷல் . இனியொரு முறை இதே வார்த்தையை என்னை கூற வைக்காதே.

ஒவ்வொரு முறையும் என் முன் அழுது நீ பலமற்றவன் என்று நிரூப்பித்துக்கொண்டே இருக்கிறாய். ஒவ்வொரு முறையும் நான் சோர்ந்து விழும்போதெல்லாம் ஆறுதலாக தாங்கிய கைகள் பலமற்றவை இல்லை என்பதை நான் எப்பொழுதும் நம்பிக்கொண்டிருக்கின்றேன். இனியொரு முறை என் முன் அழாதே மார்ஷல், இனியொருமுறை அழவே அழாதே, ஆண்கள் அழுவதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது என்பதை அறிந்தவன் நீ. பலமற்றவனாக இருக்கும்பொழுதிலும் நீ விழும்வரை நான் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. தாங்குவதற்கு கைகள் இருக்கும் வரை வீழலாம் ஆனால் அழ மட்டும் செய்யாதே மார்ஷல்.

பொய் உரைத்துவிட்டேன் மார்ஷல். சிறியதோ பெரியதோ, பொய் பொய் தானே. இதை நீ மறந்து சென்றாலும் நான் எப்பொழுதும் சுமந்து கொண்டே திரிகிறேன். உண்மையை நாம் சுமந்து செல்ல தேவையேயில்லை மார்ஷல். பொய் தான் எவ்வளவு கனம். என்றென்றைக்குமான வலியாய் ஒரு பொய் மனதில் நின்றிருக்கும். அந்த பொய்யை நீயும் மறக்க தேவையில்லை மார்ஷல். எல்லாவற்றையும் தாண்டி மறைப்பதற்கு என்று நம்மிடையே நுழைந்த தடமாக இந்த பொய் ஒன்றேனும் இருந்துவிட்டு போகட்டும். மிட்டாய்களை சுற்றி இருக்கும் சரிகைத்தாளை போல தான் மார்ஷல் நினைவுகளும், பிடித்தவர்கள் தரும்பொழுது சேமித்துவைத்துக்கொள்கிறோம் இன்பமாயினும் துன்பமாயினும். பிடிக்காதவர்கள் தரும்பொழுது புறக்கணிக்கின்றோம்.

இந்த வாழ்வு நமக்கான எல்லாவற்றையும் தந்திருக்கிறது மார்ஷல். நமக்கு சரியானவற்றை தான் நாம் தேர்ந்தெடுக்கின்றோம், இருந்தும் மதிப்பீடுகளுக்கிடையே தான் நாம் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம்முடைய தேவைகள் எதுவென்று எப்பொழுதும் நமக்கு புரிந்திருக்கின்றது. மற்றவர்களுக்கு ஏன் மார்ஷல் நாம் புரிய வைக்க முற்பட வேண்டும். ஆனால் இவ்வுலகம் நம்மை அவ்வாறு வாழ விடாது மார்ஷல். இவர்களிடையே எவ்வளவு கவனமாக இருக்க வேண்டியுள்ளது மார்ஷல். ஒரு நொடியில் எல்லாவற்றையும் கலைத்துப்போடும் திறமையானவர்களிடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் மார்ஷல்.

யாரையும் இதுவரை நாம் வெறுத்ததில்லை மார்ஷல். அப்படி ஒரு வன்மம் தோன்றியிருந்தாலும் உடனே மறுதலிக்கின்றோம், ஏனெனில் வெறுப்பதில் நாம் தான் தோற்றுப்போகிறோம் இல்லயா மார்ஷல் ? ஒரு நொடியிலும் கூட வெறுப்பு மறைந்து அது குறித்து குற்றவுணர்ச்சி கொள்கிறோம். நம்மால் யாரையுமே வெறுக்க முடியாது மார்ஷல். பூனைகள் போல விலகி தான் செல்கிறோம், உண்மை தான் மார்ஷல் பூனைகள் யாரையும் வெறுப்பதில்லை. காயப்படுவோம் என்கிற பயம் தான் விலகி ஓட வைக்கிறது மார்ஷல்.

எல்லாருக்கும் பிரியமானவர்களாய் நாம் எப்பொழுதும் வாழந்துவிட முடியாது என்பதை நான் எப்பொழுது மார்ஷல் நம்பபோகிறேன். என்னவொரு ஒரு பேராசை அது ? ஏங்கி நிற்பதெல்லாம் பணம் பசியை தாணடி அன்பிற்காக என்பதை உலகமும் எப்பொழுதும் நம்பபோவதில்லை மார்ஷல். இந்த நகரம் நம்மை அச்சப்படுத்துகிறது, இந்த நகரத்து மனிதர்கள் அச்சமூட்டுகிறார்கள். மனிதர்கள் யாருமற்ற தீவிற்கு என்றாவது ஒரு நாள் சென்றுவிட வேண்டும் என்று பல முறை பேசியிருக்கிறோமே மார்ஷல். இந்த மனிதர்கள் அத்தனை பேர் மீதும் காட்ட வைத்திருக்கிற அன்பை கடலினடியில் கொண்டு புதைக்க வேண்டுமா மார்ஷல் ?

வரைய முடியாத தூரங்களிலேயே இந்த உலகம் வாழ விரும்புகிறது. ஒருவர் வாழ முடியாத வாழ்வை நாம் வாழ்ந்துவிட்டாலே நம்மை சுற்றி அசூயை சூழந்துகொள்கிறது இல்லயா மார்ஷல் ? இங்கிருந்து எடுத்து செல்வதற்கும் இங்கே விட்டு செல்வதற்கும் நினைவுகளை தவிர என்ன இருக்கிறது நம்மிடம்?

மார்ஷல், உலகை போல் நாம் வாழ வேண்டுமா ? இல்லை நம்மைப் போல்.... ?

ப்ரியங்களுடன்,
ஜென்னி

Tuesday, 18 February 2014

லாஷ்லிக்கு


பேரன்புமிக்க லாஷ்லி,

நான் சந்தோஷமாக இருக்கிறேன், மிகவும். இதை நீ உணர்கிறாயா லாஷ்லி ? எனக்கு எல்லாவும் மறந்து போயிருக்கிறது லாஷ்லி, எல்லா துன்பங்களும் எல்லா துரோகங்களும். நாம் இருவருமே ஒருவருக்கொருவர் மீட்பராகியிருக்கிறோம் இல்லையா ? இதற்காக தான் இத்தனையையும் கடந்து வந்திருக்கிறோம் லாஷ்லி. எல்லாமே பழகியிருந்தபோதிலும் இந்த நொடி இன்பமாக இருக்கிறது, எனக்காக நீயும் உனக்காக நானும் என்கிற இந்த நொடி அத்தனை இன்பமாக இருக்கிறது லாஷ்லி.

நீ எப்பொழுதும் நம்மை பற்றியே பேசுகிறாய்.. நான் மற்றவர்களை பற்றியும். நம்மை பற்றி பேச என்ன இருக்கிறது லாஷ்லி. நீயும் நானும் எப்பொழுதும் பிரிந்திருந்தோம் ? இந்த உறவு காலம்காலமாய் தொடர்ந்து வந்திருப்பது போல எது நினைக்கச் செய்கிறது ? விலகி நின்று ஒருவரை ஒருவர் பார்க்க இனி ஒன்றுமே இல்லை. நீ விரும்புகின்றவற்றை நானும் விரும்புகின்றேன், எந்த ஒரு கட்டாயமுமின்றி. நீ காதலிப்பவர்களை நானும் காதலிக்கிறேன் லாஷ்லி, இதை சொல்லிக்கொள்வதில் என்க்கொன்றும் வெட்கமில்லை. இந்த வெளிப்படையான காதலை தானே நாம் இருவரும் விரும்புகின்றோம், எல்லாவற்றையும் தாண்டி கட்டுப்பாடுயில்லாத இந்த வெளிப்படையான அன்பு தானே நம்மை பிணைத்திருக்கிறது.

பூனைக்குட்டியாய் உன் கால்களை உரசி சுற்றி வர வேண்டும் லாஷ்லி. உன்னுடன் இருக்கும்பொழுது தான் நான் என்னை சுதந்திரமானவளாக உணர்கிறேன், பூனையைப்போல. இரு பூனைகளிடைய படுத்துறங்கிய ஒரு இரவில், கருப்பையில் சுருண்டு ஒளிந்துகொள்வது போல் அவ்வளவு பாதுகாப்பாய் உண்ர்ந்தேன். பூனையாய் வாழ விதிக்கப்பட்டிருப்பது பெரும் பாவம் என்று எப்பொழுதும் நினைத்துக்கொண்டிருந்தேன். சாத்தானின் விரல்கள் இந்த பூனையை தீண்டும் வரையிலும் கூட அவ்வாறே நினைத்திருந்தேன். சாத்தானால் மீட்பராகிய இந்த பூனையின் வாழ்வு ஆசிர்வதிக்கப்பட்டது லாஷ்லி.

இந்த பிறந்தநாளில் மட்டுமில்லாமல் இனி எல்லா நாளின் முதல் நொடியிலிருந்து முடிவுறும் நொடிவரை நீ என்னை நிறைத்திருக்க வேண்டும், நான் உன்னை நிறைந்திருக்க வேண்டும். வேறெதுவும் ஒரு துளியேனும் நம்மை நிறைக்கக் கூடாது. 'நம்மிடையே' என்றொரு வார்த்தையும் இனி வேண்டாம். விலகி இருப்பது எனக்கு பிடித்தமானது இல்லை. பிடித்தமில்லாத ஒன்றை நான் எப்பொழுதும் செய்வதில்லை. எவரிடமிருந்தும் விலகியிருப்பதை நான் விரும்புவதேயில்லை. மற்றவர்களை பற்றி நினைக்கும்பொழுது விலகுவது ஒரு சாத்தியமாகவாவது இருக்கிறது. ஆனால் நம்மிடையே அந்த வார்த்தை நுழைவதை கூட எனக்கு விருப்பமானதாக இல்லை லாஷ்லி.

உன்னுடைய வாசனை என் மீது எப்பொழுதும் பரவியிருக்கிறது லாஷ்லி. என் குரலும் கூட உன் குரலாகத் தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. நீயும் நானும் வேறில்லை லாஷ்லி.. வேறில்லை. இப்பொழுது ஒன்றாக இருக்கின்றோம். இனி எப்பொழுதுமே. இந்த இரவில் இதுகாறும் நினைவுகளை மட்டுமாவது கிளறிக்கொண்டிருந்த மைக்கேலின் புகைப்படத்தை கிழித்தெறிந்துவிட்டேன். ஜூலியா என்று யாருமே உலகில் இல்லை லாஷ்லி. ஜென்னி மட்டும் தான், நம்க்கான உலகத்தில் 'லாஷ்லியும் ஜென்னியும்' மட்டும் தான். ஜென்னி.. ஜென்னி.. என்று என் பெயரை நானே உரக்க கூவிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஜென்னியை என்றுமே நீ கைவிட மாட்டாய் லாஷ்லி. ஜூலியாவைப் போல் ஜென்னி என்றுமே தொலைந்து போக முடியாது.

இது நாள் வரை கடவுளிடம் வேண்டிக்கொள்ள பெரிதாய் ஒன்றுமே இருந்ததில்லை லாஷ்லி. ஆனால் எப்பொழுதும் நம்பிக்கை இருந்திருக்கிறது. இந்த வாழ்வு நமக்கானது லாஷ்லி, இதை நாம் கொண்டாடப் போகிறோம். தனியாக பயணம் செய்ய நீயோ நானோ எப்பொழுதும் முடிவெடுத்ததில்லை. ஒரு தொலைதூர பயணத்திற்காக எப்பொழுதுமே நாம் காத்திருக்கிறோம், இல்லயா ? லாஷ்லி, இனி வேதனைகள் இல்லை, வலிகள் இல்லை, கண்ணீர் இல்லை. புன்னகையை மட்டுமே என்றென்றும் சுமந்து செல்லப் போகிறோம்.

கைகளை கோர்த்துக்கொள் லாஷ்லி, இந்த இரவு நீள வேண்டும் .

என்றும் தீரா முத்தங்களுடன்,
உன் ஜென்னி

Monday, 10 February 2014

மோக்லி


மோக்லி அசைவில்லாமல் ஒரே இடத்தில் இருந்தது. பல நேரம் இப்படி ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. மீன் தொட்டியை விரல்களால் சுண்டினேன். "அது தூங்கிட்டு இருக்கும் விடேன்டீ கொஞ்ச நேரம் அதை" பப்பி சலித்துக்கொண்டாள். ஒரு நாளுக்கு நூறு முறை சாப்பாடு போட்டியா அவனுக்கு என்று கேட்டுக்கொள்கிறேன். அடிக்கடி மீன் தொட்டியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு மீன் தொட்டியை தடவிக் கொடுக்கிறேன். நடு இரவில் பாத்ரூம் போகஎழுந்தால் கூட மீன் தொட்டியை சென்று ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன். மோக்லியின் தொட்டியும், அதன் அடியில் பரப்பியிருக்கும் நீலமும் பச்சையும் கலந்த கற்களின் பிரதிபலிப்பும் இந்த இரவை அவ்வளவு அழகாகிக் கொண்டிருக்கிறது.

ஏன் எனக்கு ஃபைட்டர் ஃபிஷ் பிடித்தது ? குறிப்பாக நீல நிற ஃபைட்டர் ஃபிஷ் ? காரணம் தெரியவில்லை. ஆனால் நீல நிறம் காரணம் இல்லை. நீல நிறத்தில் வேற எந்த மீன் எனக்கு கிடைத்திருந்தாலும் அதை இவ்வளவு ரசித்திருக்க மாட்டேன். காரணம் தெரியாமல் பிடித்திருக்கும் சில விஷயங்கள் சில நேரம் சுவாரசியமாகவே இருக்கிறது. இதற்கு முன் மீன் வளர்ப்பு அனுபவம் எதுவும் எனக்கு இல்லை. வீட்டில் பெரிய மீன் தொட்டி ஒன்று இருக்கிறது. அதற்குள் ஆரஞ்சு, வெள்ளை நிற ஏஞ்சல் மீன்களும், சில்வர் மோளிகளும், கண்கள் வெளியே துருத்திக் கொண்டிருக்கும் கருப்பு நிற டெலஸ்கோஃப்களும் கொச கொசவென்று அங்கும் திரிந்து கொண்டிருக்கும். அவை மீது எப்பொழுதும் பெரியதொரு ஈர்ப்பு எனக்கு இருந்ததே இல்லை. தொட்டியில் இருக்கும் நீரை இரண்டு நாட்களுக்குள் கலங்கடித்துக்கொண்டும் சண்டையிட்டுக்கொண்டும், ரொம்ப சாதாரணமாக நீந்திக்கொண்டு அலையும் அந்த மீன்கள் என்னை எப்பொழுதும் கவர்ந்ததில்லை.

தொட்டியில் இருக்கும் தண்ணீரை அடிக்கடி மாற்றுவதான் பெரிய வேலை. முதலில் ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை பிடித்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு மீனாக வலையில் பிடித்து பக்கெட்டினுள் விட வேண்டும். சில மீன்கள் பிடித்துக் கொண்டிருக்கும்பொழுதே வெளியே எகிறி குதித்துவிடும். அகலமான பாத்திரத்தில் விடவில்லை என்றாலும் பெரும்பாலும் சண்டையிட்டுக்கொண்டு எம்ப ஆரம்பித்துவிடும். பின்னர் அவ்வளவு பெரிய தொட்டியிலிருந்து நீரை முழுவதுமாக வெளியேற்ற வேண்டும். டியூப் போட்டு வெளியேற்றவும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். நீரை மொண்டு வேறெதிலாவது ஊற்றிவிட்டு பின்னர் அடியில் பரப்பியிருக்கும் கற்களையும் கழுவ வேண்டும். கொஞ்சமும் அசைக்க முடியாத கனமான தொட்டி. அந்த இடத்தில் நின்று கொண்டே அதை சுத்தம் செய்ய வேண்டும். அம்மாவிற்கு மீன் தொட்டியை கழுவுவதில் எந்த ஒரு உதவியும் நான் செய்ததே இல்லை. கழுவி முடிக்கும் வரை வாயைக் கூட திறக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பேன். தண்ணீர் கொண்டு வந்து தருவது மட்டும் தான் என் வேலை. அவ்வளவு அசுத்தமான நீரை பார்ப்பதற்கே அருவெறுப்பாக இருக்கும் சில நேரம். அம்மா பொறுமையாக கழுவி முடித்துவிட்டு மீன்களை எடுத்து அந்த தெளிவான நீரில் விடும்பொழுது மட்டும் மீன் தொட்டி அழகாக தெரியும்.

ஒரு நாள் கூட நான் மீன்களுக்கு உணவிட்டதில்லை. சிறுசிறு கலர் உருண்டைகள் அடைத்திருக்கும் பாக்கெட்டை பார்த்திருக்கிறேன் அவ்வளவு தான். இரவில் தான் அந்த உணவை அம்மா போடுவாள். அம்மா மீன் தொட்டியின் அருகே சும்மா போய் நின்றால் கூட அம்மா நிற்கும் இடத்தில் எல்லா மீன்களும் வந்து குழுமிவிடும். இவ்வளவு அடையாளம் இந்த மீன்களுக்கு தெரியுமா என்று ஆச்சரியமாக இருக்கும். மீன்கள் எப்பொழுதாவது நம்மை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்திருக்கிறேன். சிறு வாயை அசைத்துக்கொண்டு எதோ சொல்வது போலவே இருக்கும். நடனமாடும் ஆரஞ்சு நிற மீனை சென்ற முறை ஊருக்கு சென்றபொழுது கவனித்தேன். மொபைலில் பாட்டு போட்டு கேட்டுக்கொண்டிருந்தேன். முதலில் நான் மீன் தொட்டியை கவனிக்கவே இல்லை. ஒரே ஒரு ஆரஞ்சு நிற மீன் மட்டும் மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தது கவனத்தை மெதுவாக ஈர்த்தது. கொஞ்சம் நெருங்கி உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். கன்னம் கொழுத்த அந்த மீனின் நடனம் சந்தோஷம் மிகுந்திருக்கும் ஒரு பெண்ணின் மெல்லிய நடனம் போல அவ்வளவு அழகாக இருந்தது. முட்டாள்தனமாக பாட்டை நிறுத்திவிட்டு அதை கவனித்தேன். ஒரு நொடி அமைதியாக அசந்து என்னை வெறித்து பார்த்துவிட்டு வேறு பக்கம் சென்றுவிட்டது. குற்றவுணர்ச்சி அந்த இரவை நிறைத்திருந்தது. ஊருக்கு சென்றிருந்தபொழுது தான் ஒரு ஃபைட்டர் ஃபிஷ் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அடிக்கடி நெட்டில் நீல நிற ஃபைட்டர் ஃபிஷ் படங்களை தேடி தேடி பார்த்துக்கொண்டிருந்தேன்.

என்னுடைய தோழி ஒருத்தி இரண்டு மீன்கள் வளர்த்துக் கொண்டிருந்தாள். உடல்நிலை சரியில்லாமல் ஒரு மீன் இறந்தபொழுது இன்னொரு மீனை நினைத்து தான் எனக்கு ரொம்பவும் கவலையாக இருந்தது. இரண்டும் அந்த குட்டி தொட்டியில் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு சந்தோஷமாக சுற்றி வந்ததை நானே பார்த்திருக்கிறேன். இன்னொரு மீனும் சில நாட்களில் இறந்துவிட்டதை தோழி அந்த முறை அழாமல் வெறுமையான குரலில் சொன்னாள். அதன் பிறகு அவள் மீன் வாங்கவேயில்லை.

இப்பொழுதெல்லாம் மோக்லியை பற்றிய கவலை என்னை பெரிதும் ஆக்ரமித்திருக்கிறது. முதல் நாள் மோக்லியை தனியாக விட்டுவிட்டு அலுவலகம் சென்ற நாளில் பகல் முழுதும் அவன் என்ன பண்ணிக்கொண்டிருப்பான், தனியாக இருப்பானா என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். தங்கை கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்து தொலைபேசியில் என்னை அழைத்தபொழுது ஹலோ கூட சொல்லாமல் மோக்லி என்ன பண்ணிக்கிட்டு இருக்கான் என்று கேட்டேன். "யடீ அதுக்கு ஒரு வேளை சாப்பாடு போட்டா போதும்டீ , நிறைய தின்னா மண்டை வீங்கி செத்து போய்டும்" என்று அடிக்கடி அவள் சொன்னாலும் போதுமா அவனுக்கு என்று உணவு குறித்த பயம் எப்பொழுதும் இருக்கிறது. ஊருக்கு சென்றுவிட்டால் யார் மோக்லியை பார்த்துக்கொள்வார்கள். இட மாற்றங்களை எப்படி ஏற்றுக்கொள்ளும் போன்ற குழப்பங்கள் நிரம்பி வழிந்தாலும் தற்காலிகமாக நானே அந்த நினைவுகளை ஒதுக்கிக்கொள்கிறேன்.

நேற்றே தண்ணீர் மாற்ற வேண்டும் என்று நினைத்திருந்து மறந்துவிட்டேன். இன்று பப்பி தான் நினைவுபடுத்தினாள். தண்ணீரை மாற்ற வேண்டும் என்று நினைத்தபொழுதே திக்கென்றிருந்து. ரொம்பவும் சின்ன தொட்டி தான். மோக்லி ரொம்பவும் குட்டி. தண்ணீரை மாற்ற வேண்டுமானால் வேறொரு பாத்திரத்தில் முதலில் அவனை விட வேண்டும். எப்படி அவனை எடுத்து போடுவது என்று பப்பியிடம் கேட்டவுடன், "டீ வடிகட்டுறதுல எடுத்து பக்கெட்ல போட்டுடலாம்டீ" ரொம்ப சாதரணமாக சொன்னாள். எனக்கு தான் பயமாகவே இருந்தது. தொட்டியை எடுத்து கீழே வைத்துவிட்டு முழித்துக்கொண்டிருந்ததை பார்த்துவிட்டு அவளே வடிக்கட்டியை எடுத்து வந்து ஒரு நொடியில் பிடித்து இன்னொரு பாத்திரத்தில் போடும்வரை பதற்றத்தில் என் முழி பிதுங்கிக்கொண்டிருந்தது. "ஸ்ஸ் பார்த்து பார்த்துடீ" , திரும்பி என்னை முறைத்துப் பார்த்தாள். நான் அமைதியாக மீன் தொட்டியை கழுவ எடுத்து சென்றுவிட்டேன். தண்ணீர் மாற்றியவுடன் அவளே மறுபடியும் எடுத்துப்போட்டாள், இம்முறை உடல் குலுக்கி மெதுவாக அது துடித்ததை என்னால் பார்க்கவே முடியவில்லை.

மோக்லி தனியாக தான் இருக்கிறான். முதல் நாளிலிருந்து. ஒரு மீனுக்கு எந்த மாதிரியான ஆளுமை உணர்வு இருக்க முடியும் ? எதனால் இப்படி காலம் முழுவதும் தொட்டியில் இவன் தனியாக நீந்திக்கொண்டிருக்க வேண்டும் ? பூனைகளை போல மீன் சுதந்திரமாக இருக்க விரும்புமா ? தெரியவில்லை. சில நேரம் அமைதியாக ஒரே இடத்தில் இருக்கிறான், சில நேரம் சுற்றி சுற்றி வருகிறான். இப்பொழுதெல்லாம் என் விரல்களின் அடையாளம் அவனுக்கு தெரிந்திருக்கிறது. தொட்டியில் சுண்டும்பொழுது அருகில் வருகிறான். மோக்லி மோக்லி என்று நூறு முறையாவது அவனை அழைத்துக்கொண்டே இருக்கிறேன். தனிமையை இவ்வளவு அழகாக எதிலும் நான் பார்த்திருக்கவில்லை.

கொஞ்சம் நேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு மெதுவாக தொட்டியை அதன் இடத்தில் வைத்தேன். மறுபடியும் தெளிந்த நீர், அதே பச்சை நீல கற்கள், தனியாக மோக்லி; மெதுவாக நீந்தினான்.

Tuesday, 4 February 2014

ஹ்ம்ம்ம்



ப்ரீத்தி தூரத்தில் நான் வரும்போதே பார்த்துவிட்டாள் என்னைப் பார்த்ததும் முகம் விரிய சிரித்தாள். சரியான பல்வரிசை இல்லை, ஒரு தெற்றுப்பல்லும். ஆனாலும் சிரிக்கும்பொழுது அழகி தான். கைகளில் கத்தையாக கல்யாண பத்திரிக்கை. அருகில் சென்றதும் "கார்கீகீகீ" கட்டிக் கொண்டாள். 

"இப்ப தான் வழி தெரியுதா தங்கம்"

"அவ்வ் செல்லம், சரி சரி விடு. வா கேஃபிடேரியா போகலாம் இங்க வெயில் தாங்கல"

அவள் கைகளில் இருந்த பைகளை வாங்கிக் கொண்டேன். ஒரு சுற்று இளைத்திருக்கிறாள். ஹேர்ஸ்டைலையும் மாத்திவிட்டிருக்கிறாள். கண்களை சுற்றி மெலிதாக கருவளையம். கைகளை கோர்த்துக் கொண்டேன்.

"எவ்வளவு நாள்" சிரித்தேன்.

"ம்ம்ம், ஒரே அலைச்சல்டீ இல்லனா முன்னமே வந்திருப்பேன்"

"ம்ம் ம்ம் வீட்ல இப்ப எல்லாம் ஓகே தானே"

"எங்க ? அப்பாவ பத்தி பிரச்சனையே இல்லடி, உனக்கு தான் தெரியுமே. அம்மா தான் இன்னும் புலம்பிக்கிட்டே இருக்காங்க"

"அம்மான்னா அப்படி தான்"

"...."

"ப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் கொடுக்க ஆரம்பிச்சிட்டியா"

"ம்ம் அப்படியே ஒவ்வொருத்தரா பார்த்து கொடுத்துட்டே வரேன். ரொம்ப அலைச்சலா தான் இருக்கு.. பாப்போம்"

"என்ன சொல்றாரு என் மாமா " நாக்கை கடித்துக் கொண்டு சிரித்தேன்.

"அவரு என்னத்த சொல்றாரு.. "

கொஞ்சம் பொறாமையாக இருந்தது. இரண்டு வருட சலிப்பில்லாத போராட்டம். நியாயமாக நான் சந்தோஷப்பட வேண்டும். பலமுறை நானே ப்ரீத்தியின் அம்மாவை சமாதானப்படுத்தியிருக்கிறேன். தீபக்கை பற்றியும் கவலைப்பட தேவையில்லை, ப்ரீத்தியை ரொம்ப நன்றாகவே பார்த்துக்கொள்வான். என்ன, எனக்குத்தான் 'தீபக்' என்கிற பெயர் பிடிக்கவே பிடிக்காது. ப்ரீத்தியிடமே நேரடியாக பலமுறை இதை கூறியிருக்கிறேன். "டீ என் மாமாவை கார்த்திக் இல்லனா அருண் ன்னு பேர் மாத்திக்க சொல்லுடீ" அவள் நீயே சொல்லிக்கம்மா என்று சலித்துக்கொள்வாள். ப்ரீத்திக்கு எல்லாமே சலிப்பு தான். அடிக்கடி பெருமூச்சும் விட்டுக்கொள்வாள். எனக்கு எல்லாவற்றையும் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும். அவள் சலிப்புறும் வேளைகளில் வம்பிழுத்து வாங்கிக்கட்டிக்கொள்வது எப்பொழுதும் நடப்பது தான்.

ப்ளாக் காஃபியை எடுத்துக்கொண்டு வெளியே பெஞ்சில் அமர்ந்தோம். ஒரு பத்திரிக்கையை எடுத்து சிரித்துக்கொண்டே நீட்டினாள். 'மிஸ். பூனைக் காதலி அண்ட் பூனை ஃபேமிலி", அழகான கையெழுத்து. தடவிப்பார்த்து சிரித்துக்கொண்டேன். கொஞ்சம் சத்தமாக சிரித்தேன்.

"ஏன்டீ சிரிக்கிற"

"காலேஜ் பத்தி நினைச்சேன்... எண்ணை வழிய தலைய படிய சீவி.. ம்ம்.. இப்ப ஆளையும் ஹேர்ஸ்டைலையும் பாரு" தலையைக் கலைத்துவிட்டேன்.

"ஏய்ய்.. " தலையை சரிப்படுத்திக் கொண்டாள்.

பத்திரிக்கையை பிரித்து பார்த்தேன். "கார்கி".. என்ன என்பது போல திரும்பி பார்த்தேன். நடுவில் இருந்த பையை எடுத்து மறுபக்கம் வைத்துவிட்டு கிட்ட நெருங்கி அமர்ந்து கைகளை கோர்த்துக்கொண்டாள். தலையை கவிழ்த்து அமர்ந்திருந்தாள். ஏதோ சொல்ல வந்து வாயை திறந்தவள் உடனே மூடிக்கொண்டாள். நான் எதுவும் பேசாமல் கட்டடத்தை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தேன்.

"அந்த ஒரு கில்டினெஸ் இன்னும் என்னை கஷ்டப்படுத்திக்கிட்டே இருக்குடீ"

"..... ஹ்ம்ம்ம்"

"பயமா இருக்குடீ"

"ச்சீ நீயென்ன லூசா, என்ன பயம் உனக்கிப்போ" அவள் எதைப் பற்றி பேசுவாள் என்று தெரியும்.

"தப்பு தான்டி அது .. புரியுது.. ஆனா ஐ ஆம் ஹெல்ப்லெஸ்"

"லூசு எனக்கு தெரியும்டீ ஆனா இன்னும் அதை ஏன் மறக்காம இருக்க ? அஞ்சு வருஷமாகிடுச்சு. அவளே மறந்திருப்பா. சொல்லப்போனா உன்னையே அவளுக்கு ஞாபகம் இருக்காது. அண்ட்ஒன் மோர் திங் அவங்களே பிரிஞ்சிட்டாங்க"

"உனக்கு தெரியுமா? நீ பார்த்தியா" அவள் குரலில் கொஞ்சம் கடுகடுப்பு ஏறியிருந்தது.

"தெரியாது, ஆனா சொல்லிக்கிட்டாங்க. சரி உனக்கு பயப்பட என்ன இருக்கு இதுல ? சின்னப்புள்ளதனமா இருக்கு"

"தெரியல.. ஹ்ம்ம்ம்"

கொஞ்சம் கைகளை இறுக்கிக்கொண்டேன். இருவரும் எதுவுமே பேசவில்லை. ஒவ்வொரு நிகழ்வும் மனதிற்குள் மங்கலாக வந்து சென்றது. அவளுக்கும் அதே தான் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ப்ரீத்தி படிகளில் அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு அழுதது மட்டும் தெளிவாக நினைவிருக்கிறது. என்னால் கல்லூரி படிகளில் அமர்ந்துகொண்டு அவ்வாறு அழுதிருக்கவே முடியாது.

அன்று ஜெபாவை நிம்மி தாங்கிப்பிடித்து நின்றுக்கொண்டிருந்தாள். அவளும் அழுதழுது களைத்திருந்தாள். ஜெபா ப்ரீத்தியை விட்டு தனித்திருந்து நான் பார்த்ததேயில்லை. அவர்களுடன் பழகிய ஒன்றரை வருடங்களில் இருவரும் ஒருமுறைக்கூட சண்டை போட்டுக்கொண்டதில்லை. ப்ரீத்திக்கும் எனக்குமாவது அடிக்கடி சண்டை வரும். ஜெபாவை போல் அவ்வளவு பொறுமையாக என்னால் ப்ரீத்தியிடம் இருக்கவே முடியாது. ஜெபாவுடன் என்னை பேசவே விடமாட்டாள். கொஞ்சம் அதிகமாக பேசி சிரித்துவிட்டால் போதும், ஜெபா அழுது தீர்த்து கெஞ்சும் வரை ப்ரீத்தி பேசவே மாட்டாள்.

ஜெபாவின் நோட்டுப் புத்தங்களில் பல இடங்களில் 'ஜெ.பி' என்று கிறுக்கியிருக்கும். சில நாட்களாக ஜெ.பி 'ஜெ.கி' தான் பல இடங்களில் கண்ணில் பட்டது. கிரண் ஆந்திரா பையன். கொச்சை தமிழில் பேசுவான். ஜெபா சொன்னபொழுது ப்ரீத்தி தான் அவளை கட்டிப்பிடித்து முத்தியெடுத்து விட்டாள். அதன் பிறகு பெரும்பாலான நேரம் என்னுடைய அறையிலேயே ப்ரீத்தி இருக்கத் தொடங்கினாள். எதையுமே நான் கேட்டுக்கொண்டத்தில்லை. நண்பர்களுக்கிடையில் சண்டை இருக்கும் பொழுது மூன்றாவது நபராக உள்நுழைவதை நான் எப்பொழுதும் விரும்பியதே இல்லை.

ஜெபா ஒருமுறை அவள் வீட்டிற்கு எங்களை அழைத்து சென்றாள். ப்ரீத்தியை அடிக்கடி அழைத்து செல்வாள். முதல்முறையாக என்னையும் அழைத்து சென்றாள். அவளுடைய வீடில்லை, பெரியப்பாவின் வீடு அது. பணம் வலுத்த இடம். காலை உணவிற்கு இடியாப்பமும் பாயாவும் சாப்பிட்டது நன்றாக நினைவிலிருக்கிறது, அதற்குமுன் நான் பாயா சாப்பிட்டதேயில்லை. மாலை பீச்சிற்கு எல்லாரும் சென்றோம். ப்ரீத்தி கடலில் இறங்கவேயில்லை, ஜெபாவின் அண்ணருகே நின்று கொண்டாள். அன்றிரவு வெகு நேரம் நானும் ஜெபாவும் மெதுவான குரலில் பேசிக்கொண்டிருந்தோம். ப்ரீத்தி எப்பொழுதோ தூங்கிவிட்டிருந்தாள்.

அதன் பிறகான செமஸ்டர் லீவிற்கு நான் ஊருக்கு கிளம்பிவிட்டேன். ப்ரீத்தி ஜெபா வீட்டிலேயே இரண்டு நாட்கள் இருந்து விட்டுதான் கிளம்பினாள். ஊரிலிருந்து திரும்பி வந்ததும் அவர்களின் அறைக்கு சென்றேன். ஜெபா கட்டிலில் குப்புற படுத்திருந்தாள். ப்ரீத்தியை அறையில் இல்லை. நிமிர்ந்து என்னை பார்த்த ஜெபா விசும்பியபடி தோளில் வந்து சாய்ந்துகொண்டாள். "பாருடி இந்த **** எங்க அண்ணன் கிட்ட எல்லாத்தையும் சொல்லீட்டாடீ" குழறி குழறி வந்து விழுந்த வார்த்தைகள் எனக்கு முதலில் புரியவேயில்லை "என்னாச்சு ஜெபா" தோளை பிடித்து நிமர்த்தினேன். ஓவென்று அழத் துவங்கிவிட்டாள். கட்டிலுக்கு அழைத்து சென்று அமரவைத்து தலையை தடவிக் கொடுத்தேன். இடுப்போடு என்னை அணைத்துக்கொண்டவள் அழுகையை நிறுத்தவில்லை. கொஞ்ச நேரத்தில் அழுகை அடங்கி கேவலெடுத்தது. நான் அவளிடமிருந்து விடுவித்துக்கொண்டு தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து கொடுத்தேன்.

தண்ணிரை மடமடவென்று கவிழ்ந்துக் கொண்டவள் என்னை நிமர்ந்து பார்க்காமலேயே "அவ இனிமே இந்த ரூம்ல இருக்க கூடாது கார்கி, இல்ல வார்டன்ட பேசி எனக்கு வேற ரூம் வாங்கிக்கொடு"

"ஜெபா அவசரப்படாத அவ வந்ததும் பேசிக்கலாம்"

"இனி அவ என் மூஞ்சிலேயே முழிக்க கூடாது, அவட்ட ஒரு மயிரும் பேச முடியாது. எல்லாத்தையும் போன்லயே கேட்டுட்டேன்."

"...."

அன்றிரவு ப்ரீத்தி அறைக்கு வந்தபொழுது ஜெபா பைத்தியம் மாதிரி கத்திக்கொண்டு ப்ரீத்தியின் புத்தங்களையும் பெட்டியையும் வெளியே விசிறியடித்தாள். ப்ரீத்தி அவளையே வெறித்துப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். வார்டன் வந்து கத்தியவுடன் எல்லாரும் கலைந்து சென்றனர். நான் ப்ரீத்தியின் பைகளையும் புத்தகங்களையும் எடுத்துபோய் உள்ளே வைத்தேன். ப்ரீத்தி அங்கேயே நின்று கொண்டிருந்தாள். ப்ரீத்தி என்னுடைய அறையில் தரையில் படுத்துக்கொண்டாள். யாரும் அவளுடன் பேசியிருக்கவில்லை. சாப்பிடவும் வரவில்லை. என்னுடைய தட்டிலேயே அவளுக்கு உணவு எடுத்து வந்து கொடுத்துவிட்டு படுத்துவிட்டேன். ஊரிலிருந்த வந்த களைப்பும், இந்த ஆர்ப்பாட்டங்களும் தந்த சோர்வில் நானும் உறங்கிவிட்டேன்.

காலையில் சீக்கிரமே முழிப்பு வர , தட்டுத்தடுமாறி எழுந்து டியூப் லைட்டை போட்டுவிட்டு கட்டிலில் வந்து அமர்ந்தேன். ப்ரீத்தி ஒருமாதிரி ஒருக்களித்து படுத்திருந்தாள். அருகில் கருஞ்சிவப்பில்.. கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு அருகில் சென்று குனிந்து பார்த்தேன். இடது கை மணிக்கட்டில் பிளந்து ஒரு மாதிரி கொழகொழவென்று ரத்தம் காய்ந்திருந்தது. தலை ஒரு மாதிரி சுற்றியது. எப்படி வார்டன் அறைக்கு சென்றேன் எப்படி ஆஸ்பத்திரிக்கு சென்றோம் எதுவுமே நினைவில்லை. ரூமுக்குள் நுழையவே பயமாக இருந்தது. கூட்டுகிற அக்காவை கூப்பிட்டு அறையை கழுவிட சொல்லியிருந்தார் வார்டன். கடிதங்கள் செல்போன் எல்லாம் வார்டனுடைய ரூமில் இருந்தது. பத்து மணி போல் கிளம்பி சாவியை எதற்கும் வார்டனிடம் கொடுக்கலாம் என்ற சென்றபொழுது ப்ரீத்தி அங்கே சாய்ந்து படுத்திருந்தாள்.

"அம்மா வராங்களாம் ப்ரீத்தி.. இந்தா சாவி""

"...."

"சாப்ட்டிய்யா"

"...."

அதற்குள் உள்ளே வந்த வார்டன் "என்னம்மா"

"ஒன்னுமில்ல மேம், சாவி கொடுக்க வந்தேன்". அவளை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு வெளியே வந்தேன்.

ப்ரின்சிபால், டீசி, வார்னிங் என எல்லாம் முடிந்து ப்ரீத்தி வந்தபொழுது க்ளாசிலும் ஹாஸ்டலிலும் யாரும் பேசவில்லை. ரொம்ப நாள் தனியாகவே தான் இருந்தாள். அடுத்த இரண்டு வருடங்களும் ஜெபாவிடமும் ப்ரீத்தியிடமும் பேசுவதை குறைத்துக்கொண்டேன். வேறு சில டேஸ்காலர் தோழிகள் நெருக்கமாகி இருந்தார்கள். ஹாஸ்டலை காலி செய்வதற்கு முதல் நாள் மஹியிடம் ஒரு கடிதத்தை கொடுத்து ஜெபாவிடம் கொடுக்க சொல்லியிருந்தாள் ப்ரீத்தி.

"ஓய்...பழசையெல்லாம் விடுடீ." அவள் கைகளை திருப்பி பார்த்தேன். தழும்பு கொஞ்சம் மறைந்திருந்தது.

"ஹ்ம்ம்ம்"

"....."

"சரிடீ நான் கொரட்டூர் வரை போகனும், கெளம்புறேன். அப்புறம் பாப்போம் என்ன ?"

"ம்ம் ஓகே டீ"

பையிலிருந்து இன்னொரு பத்திரிக்கையை எடுத்தாள் "ஜெபா கிரண்" அதே அழகான எழுத்தில் எழுதியிருந்தது. அவள் முகத்தை ஆராய முடியவில்லை. குனிந்து யோசித்தபடி இருந்தவள் பத்திரிக்கையை மறுபடி பைக்குள் வைத்தாள்.

"அவங்க மாமா பையன் ஒருத்தன் இருந்தான்ல .. ம்ம் கல்யாணம் ஆகிடுச்சுடீ அவளுக்கு"

"ஹ்ம்ம்ம்"

தாரணி குட்டி - 1

கதவை கஷ்டப்பட்டு தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் தாரணி குட்டி. அம்மா தான் கதவை திறந்து வைத்திருக்க வேண்டும், இந்த நேரத்தில் ப்ளாடில் எந்த வீட்டிலும் கதவு திறந்திருக்காது. ஓடி வந்து மடியில் புதைந்து கொண்டாள். நான் அவளின் கைகளைக் கோர்த்துக்கொண்டேன். 

உள்ளறையில் இருந்து வந்த அம்மா "என்ன கொஞ்சல் உரசல்லாம் பலமா இருக்கு" என்று கேட்டார்.

"உன் பேர் என்னடி" 

"தாடனி" 

"என்னது"

"தாஆஆடனி" இம்முறை கொஞ்சம் உரக்க கூறினாள்.

நான் தாரணியின் வாயசைப்பை ரசித்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அம்மா நகரும் வரை அவளையே பார்த்துக் கொண்டு நின்றவள் என் கால்களில் ஏறி நின்றாள். நான் கால்களை தூக்கி நெற்றியோடு முத்தமிட்டு அவளை கொஞ்சிக்கொண்டிருந்தேன். கால்களில் ஏறி நின்று குதிக்க ஆரம்பித்தாள். அப்பாவின் ஞாபகம் வந்தது. அப்பா எப்பொழுது வீட்டிற்குள் நுழைந்தாலும் ஓடி சென்று தொப்பையோடு அணைத்துக்கொண்டு கால்களில் ஏறி நிற்பேன். அப்பா அப்படியே என்னை கால்களில் ஏந்திக்கொண்டு வீடு முழுக்க நடந்து வருவார்.

தாரணியை கீழே இறக்கிவிட்டு உள்ளறையில் இருந்து சொப்பு ஜாமான் இருந்த ஒரு அட்டையை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தேன். முன்னெப்பொழுதோ ஒரு குழந்தைக்கு கொடுக்க வாங்கி வைத்திருந்தது.

அட்டையை திருப்பி திருப்பிப் பார்த்தவள் "எனக்கா ?" என்று கேட்டாள்.

"ம்ம் உனக்கு தான் "

"பிரிச்சிக் கொடு"

பிரிக்க ஆரம்பித்தபொழுது அம்மா வந்து என் கையில் இருந்ததை வாங்கி அவளிடம் கொடுத்து "உன் அம்மாக் கிட்ட போய் பிரிச்சிக் கொடுக்க சொல்லு" என்று சொன்னாள்

"அம்மா வேண்டாம் நீயே பிரிச்சிக் கொடு" என்னிடம் நீட்டினாள்.

"அம்மா தான் நல்லா பிரிச்சி தருவாங்க, அம்மாட்டயே கொடு"

தலையசைக்க கூட இல்லை. அமைதியாக அட்டையை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டு வெளியே போய்விட்டாள்.

"அம்மா கதவை திறம்மா.. அம்ம்ம்மா கதவை திறம்மா" தாரணி வீட்டுக் கதைவை தட்டிக்கொண்டிருந்தது கேட்டது.

தற்கொலைக் குறிப்புகள் - 4



சந்தோஷமாக தற்கொலை செய்து கொள்ள முடியுமா ? ஆசிர்வாதங்களும், ப்ரிய முத்தங்களும், அணைப்புகளும் நிறைந்த ஒரு நாளில் தற்கொலை செய்து கொள்ள முடியுமா ? நேசிப்பவர்களே! இதோ சந்தோஷமான இந்நாளில் தண்டவாளங்களை தேடிச் செல்கிறேன். தற்கொலை, மிகவும் சந்தோஷமான தற்கொலை. மிச்சமிருக்கும் எல்லா நாளுக்குமான சிரிப்புகளை இன்றே முழுமையாக செலவழித்துவிட்டேன். இருந்தும் இது சந்தோஷமான தற்கொலை என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறேன். 

மூன்று மாதங்களாக பேசாமலிருந்த தோழி இன்று ஏன் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். எல்லாரும் வெறுத்து ஒதுக்கிய ஒரு இரவில் என்மீதொரு ஏளனப் புன்னகையை நானே வீசிக்கொண்டு முகம் தெரியாத ஒருவனுக்கு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அனுப்பிய குறுஞ்செய்தி நினைவிற்கு வந்தது. அலைபேசியில் இருந்த எண்கள் ஒவ்வொன்றாக அழித்துக் கொண்டே வந்தேன். ப்ரியமானவர்களின் எண்களை அழிக்கும் போதுமட்டும் கைகளில் இருந்த நடுக்கத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

வாங்கிய எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்திட வேண்டும். நிர்பந்தம் இல்லை. ஆனால் சுமையோடு இந்த தற்கொலையை நிகழ்த்திட இயலாது. வெறுப்புகளை சுமந்து தான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை. "உன்னை எனக்கு பிடிக்கவேயில்ல டீ" சிரித்துக்கொண்டே சொன்ன இந்த வார்த்தைகளையும் சுமந்து தான் செல்ல வேண்டும். வெறுப்பு சுமையாக இல்லை. ப்ரியங்கள் தான் சுமையாக இருக்கிறது.

மிச்சமிருந்த சோற்றை வழித்தெடுத்து பூனைகளுக்கு போட்டுவிட்டு அந்த பச்சை நிறக் கண்களை கொண்ட பூனையை மட்டும் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அந்த கண்களை நேருக்கு நேர் என்னால் சந்திக்க இயலவில்லை. முடியாது. குற்ற உணர்வோடு இந்த தற்கொலை நிகழ்ந்திட கூடாது. இது சந்தோஷமான நாள்; சந்தோஷமான தற்கொலை. பைகளை தடவிப் பார்த்துக்கொண்டேன், தாரணி பாதி கடித்துவிட்டு திரும்ப கொடுத்துவிட்ட சாக்லேட் இன்னும் உறுத்திக்கொண்டே இருந்தது. இந்த உணர்வு பெரும் பாரம். தலையை உதறி முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டேன்.

செருப்பை மாட்டிக்கொண்டு கதவை பூட்டினேன். தற்கொலைக்கு எதற்கு செருப்பு ? எதற்கு பூட்டு ? சாவியை விட்டெறிந்தேன், எதிலோ 'நங்'கென்று பட்டுத்தெறித்த ஒலியைக் கடந்து சாலையில் இறங்கினேன். எதிர்ப்பக்கம் செல்வதற்காக சாலையில் ஓடினேன். எதற்கு ஓட வேண்டும் ? நிற்க தோன்றவில்லை. சாலையை கடக்க முடியாமல் நீண்டு கொண்டே செல்வது போல் இருந்தது. இந்த தற்கொலைக்கு தண்டவாளங்கள் மட்டுமே வேண்டும். எல்லா அன்பும் சிதறி அடிக்க வேண்டும்.

முன்பொரு தற்கொலை முயற்சிக்கு முன் யானியின் இசையை பரிசாக அளித்தவனின் கைகளை இந்த மாலையில் அழுந்த பிடித்திருந்தேன். கைகளை முகர்ந்து பார்த்துக்கொண்டேன். வேர்வையின் மணம் இன்னும் மிச்சமிருக்கிறது. இந்த தற்கொலைக்கு பின்னும் இருக்கக்கூடும். வேறு யாரும் முகர்ந்திடக்கூடுமா ? தண்டவாளத்திலிருந்து தலையை எடுத்துவிட்டு கைகளை இறுக்க மூடிக்கொள்கிறேன். காலம்காலமாக தொடர்ந்து வரும் மணம் இது, இப்பொழுது உடலெங்கும் பரவியிருக்கிறது. இதைவிட்டு எப்பொழுதும் நான் பிரிந்திருக்க முடியாது. இது எப்பொழுதும் என்னுள் கலந்திருக்கிறது. பையில் இருந்த காகிதக்கற்றைகளை இருளில் விசிறடித்துவிட்டு கைகளை முகர்ந்துகொண்டே தண்டவாளத்தை தாண்டி நடந்தேன்.