Wednesday, 29 January 2014

மார்ஷலுக்கு - 3



பேரன்புமிக்க மார்ஷல்,

புனித மேய்ப்பரின் கருணை எப்பொழுதும் உன் பாத்திரத்தில் நிறைந்திருக்க. 

அந்த கடைசி செய்தி எவ்வளவு வலி மிக்கது மார்ஷல். அந்த செய்தியை நான் அனுப்பி இருக்கவே கூடாது. அதற்கு முன்னால் ஒரு குழந்தையை அள்ளி எடுத்து முத்தமிட்டிருக்கலாம் அல்லது லாஷ்லியின் வதைக்கும் சிரிப்பு நிறைந்திருக்கும் அந்த புகைப்படத்தை எடுத்து பார்த்திருக்கலாம் அல்லது தனித்தலையும் ஒரு தெரு நாய்க்குட்டியை நெஞ்சோடு அணைத்திருக்கலாம் அல்லது சுய இன்பம் கொண்டிருக்கலாம் அல்லது வலசை போகும் பறவை உதிர்த்துப்போகும் சிறகுகளை உள்ளங்கையோடு சேர்த்து வைத்திருக்கலாம் அல்லது, அல்லது உன் தோளில் சாய்ந்து அழுதிருக்கலாம் மார்ஷல்... அந்த கடைசி செய்தி அவ்வளவு வலி மிக்கது.

ஏன் விஷம் கலக்கப்பட்ட தேநீர் கோப்பைகளை நான் எப்பொழுதும் ஏந்தியிருக்கிறேன் மார்ஷல் ? ஏன் இந்த தேநீரில் எப்பொழுதும் துரோகங்கள் மட்டுமே கலந்திருக்கிறது மார்ஷல் ? இந்த நிலவினடியில் நடந்து செல்லும் இந்த நொடி ஆயிரமாயிரம் துரோகங்களை சுமந்து செல்லவில்லையா ? இரவு நம்மை துரோகிக்கவில்லையா மார்ஷல் ? அழுகைகளை புதைத்துக் கொள்ளும் இந்த இரவு நம்மை துரோகிக்கவில்லயா ? ஏன் மார்ஷல் இந்த இரவு பல நேரங்களில் ராப் சாம்பியின் இசையைக் கொண்டிருக்கிறது ? துரோகத்தின் கடைசி துளி வரை ருசித்துப் பார்க்கிற ஓநாயின் அலறல்களால் நிறைந்திருக்கிறது? இரவு அமைதியில்லை மார்ஷல். இரவை மட்டும் கடந்துவிட்டால் போதும், பகல் துரோகங்களை எளிமையாக சுமக்கிறது.

மைக்கேல் ஒரு பைத்தியக்காரன் மார்ஷல். மைக்கேலை இன்னமும் நான் அப்படி தான் எண்ணிக் கொண்டிருக்கின்றேன். மைக்கேலுக்கு என் யோனி குறித்த கவலைகள் அதிகம் மார்ஷல். என்னைப் பற்றி யோசிப்பதற்கு வேறேதுவுமில்லை அவனுக்கு. ஒரு 'ஆணை' போலவே எப்பொழுதும் என்னை காதலித்திருக்கிறான்; களவாடுவதும், களவாடப்படுவதும், அவ்வளவு தான் .. அது மட்டும் தான் மைக்கேல். கண்களில் நுழையும் சோப்பு நுரையின் எரிச்சலை போல அவன் துரோகங்களை தேய்த்தெடுக்க வேண்டும் என்று நினைப்பவன்.

மைக்கேல் ஒரு முட்டாள் மார்ஷல். என்னால் ஒரே நேரத்தில் மைக்கேலையும் லாஷ்லியையும் காதலிக்க முடிகிறது மார்ஷல். அவன் சத்தியமாக முட்டாள் தான். அவனால் இரு ஜூலியாக்களின் அன்பை சுமக்க முடியாது. என் கைகளில் நிறைந்திருக்கும் இந்த தழும்புகள் ஜூலியாவை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கிறது மார்ஷல். நான் இனியொரு முறை ஜூலியாவாக இருக்கவே முடியாது யாருக்கும்.(அழுகிறேன்)

மைக்கேல் கனவுகளை திருடுபவன் மார்ஷல். வெட்கமுற வைக்கும் கனவுகளை இப்பொழுதெல்லாம் என்னுளேயே புதைத்துக் கொள்கிறேன். நெடுநாட்களாக தொடர்ந்து வரும் கனவொன்றில் மைக்கேல் எப்பொழுதும் உடனிருக்கிறான். அந்த அறையின் மங்கலான வெளிச்சம் வெற்றுத் தரையில் நீண்டிருக்கும் முழங்கால்களின் வெண்மை பளிச்சிட்டு காட்டிக் கொண்டிருக்கிறது, மைக்கேலின் மார்பில் சாய்ந்திருக்கிறேன். எங்கிருந்தோ வந்த வண்ணத்துப்பூச்சிகள் முழங்காலின் மேல் அமர்ந்தன. மெல்லிய ஆரஞ்சு வர்ணத்தில் கரும்பொட்டுகள். அவற்றில் ஒன்றை வருடிக்கொடுத்த பொழுது ஒவ்வொன்றாய் மறையத் துவங்கிய நிமிடத்தில் அதே ஆரஞ்சு வர்ண கருப்பொட்டுகள் என் உடலெங்கும். மைக்கேலும் அங்கிருக்கவில்லை. பெயர் தெரியாத இந்த வனத்தில் அதன் பின் எப்பொழுதும் தனித்திருக்கிறேன் மார்ஷல்

நான் ஏன் படிக்கிறேன் மார்ஷல் ? ஏன் எழுதுகிறேன் ? ஏன் பாடல்களில் கரைந்துவிட துடிக்கிறேன் ? எவற்றிலாவது அவனை தொலைத்து என்னை மீட்டெடுக்கும் யுக்திகளில் மறுபடி மறுபடி நானே தொலைந்து போகிறேன் மார்ஷல்.

ரயில் பயணங்களில் யாருடைய பாதங்களிலோ கடலை தொலிகளை உதிர்த்துவிட்டு வருவது போல் நினைவுகளை எங்காவது உதிர்த்துவிட்டு வரவேண்டும் மார்ஷல், நான் மீண்டு வரவேண்டும்.

எல்லாவற்றிலும் இருந்து விடுபெற்றுக்கொள்வதற்கு முன்னால் ஒரு பெருமூச்சு தேவைப்படுகிறது மார்ஷல்

முத்தங்களுடன்,
ஜென்னி

Wednesday, 8 January 2014

மார்ஷலுக்கு - 2



மார்ஷல்,

கூட்டங்களினிடையே இருப்பது எனக்கு பிடிக்கவேயில்லை. வெகு சில நாட்களா தான் இதை உணர்கிறேன். எனக்கு கூட்டங்கள் எப்பொழுதுமே பிடித்தமில்லை மார்ஷல். கூட்டத்தை பார்த்து நான் பயந்த நாட்கள் தான் அதிகம். தற்கொலை எண்ணங்களை விலக்கி வைக்கவே நான் கூட்டங்களை தேடி தேடி கலந்து கொண்டேன் என்பதை நீ அறிவாய் மார்ஷல். பயம் இப்பொழுது அதிகமாய் இருக்கிறது.. மிக அதிகமாக.

எப்படி ஒரு இடைவெளியை ஏற்படுத்தினாய் மார்ஷல் ? நாம் கூட்டத்தினிடையே கலந்தோமா இல்ல அது நம்மிடையே கலந்ததா ? வேண்டாம் , இந்த கூட்டமும், அன்பும், தற்கொலையும். போலியாய் இருக்கிறது மார்ஷல். தொலைந்து போவது வருத்தமில்லை.. உன்னை நானும் என்னை நீயும் தொலைத்து விடக் கூடாது மார்ஷல். அன்பை சுமப்பது பெரும் கொடுமை இல்லயா மார்ஷல், அத்துனை பேர் அன்பையும். கூட்டங்களின் கருணைகளையும் , நேசங்களையும் என்னால் சுமக்க இயலவில்லை.. ஒரு துளி துரோகம் வேண்டும் மார்ஷல்; வாழ்கையை வாழ. கூட்டம் என்னை துரோகிக்கவில்லை மார்ஷல். அது தான் எனக்கு பயமாக இருக்கிறது, அன்பு தான் எனக்கு பயமாக இருக்கிறது.

மைக்கேலின் பிறந்தநாளை மறந்துவிட்டேன் மார்ஷல். எப்படி மறந்தேன் ? நான் மறந்திருக்கவே கூடாது மார்ஷல். இரண்டு நாட்கள் கழித்து இது நினைவுக்கு வந்திருக்கவும் வேண்டாம். இந்த கூட்டத்தினால் தான் மறந்து தொலைத்தேன். ஒரு வாழ்த்து செய்தி கூட அனுப்பவில்லை. மைக்கேல் என்னிடம் எதுவும் கேட்கப் போவதில்லை. அவனின் ஜூலியா நானில்லை இப்பொழுது. அவனுக்கு தெரியும் நான் சூழப்பட்டிருப்பது. வெள்ளம் போல் நுழைந்து இந்த அன்பு என்னை மூழ்கடிக்கிறது என்று மைக்கேலிடம் நான் எப்படி சொல்வேன் மார்ஷல்.

மார்ஷல், தெரியுமா ? அவன் எதையுமே மறப்பதில்லை. ஒவ்வொரு முறையும் அவன் முன் குறுகி நிற்கிறேன். எல்லாம் இந்த பாழாய் போகிற கூட்டமும் ... அன்பும். அன்பு ஏன் மார்ஷல் இவ்வளவு கொடுமையாக இருக்கிறது ?

மைக்கேலை பற்றி பேசும்பொழுதெல்லாம் உடல் சிலிர்க்கிறது. நானும் அவனும் தனித்திருந்தோம். எங்களை சுற்றி யாதொரு கூட்டமுமில்லை. மைக்கேலுக்கு கடிதம் எழுத வேண்டும் மார்ஷல். நீ இப்பொழுது சிரிக்கிறாயா மார்ஷல் ?

என்னால் யாரையுமே புறக்கணிக்க முடியவில்லை மார்ஷல். புறக்கணிக்கப்படுவது பெரும் வாதை. மைக்கேல் எனக்கு செய்ததை போல. என்னால் யாரையுமே புறக்கணிக்க முடியாது மார்ஷல்.

பூனைகளாக இருக்க பிரயத்தனப்படுகிறோமா மார்ஷல் ? அது நம் இயல்பு தானே. இயல்பை மறக்கடிக்கும் கூட்டங்கள் நமக்கு வேண்டாம் மார்ஷல். பூனைகளிடம் உன்னை பற்றி பேசுகிறேன், உன்னிடம் பூனைகளை பற்றி பேசுவது போல. அல்லது இரண்டுமே !

தனித்திருப்போம் மார்ஷல், எப்பொழுதும் போலவே. தேவக்குமாரனும் பூனையும் சாத்தானும் தேவதைக்காரனும் அப்புறம் ஓடிப்போனானே அந்த கம்யூனிஸ்ட்டும்.

இந்த பூனைக்கு வெதுவெதுப்பான அணைப்பு தேவைப்படுகிறது மார்ஷல்.

ப்ரியங்களுடன்,
ஜென்னி

Sunday, 5 January 2014

தற்கொலைக் குறிப்புகள் - 3



தலையிலிருந்த நீர் இன்னும் சொட்டிக்கொண்டே இருந்தது. ஈரம் காயும் முன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற வெறி உந்தித் தள்ள அவசரமாக கத்தியை தேடினேன். அடுப்பிற்கு அடியில் இருந்த கத்தி என் தற்கொலை குறிப்பை போலவே மொன்னையாக இருந்தது. இது நேரம் எடுக்கும். எனக்கதற்கு அவகாசம் இல்லை. 


வீட்டை விட்டு வெளியே வந்தபொழுது வெயில் அவ்வளவாக இல்லை. குப்பைத் தொட்டியில் ஒரு தலையில்லா குழந்தை பொம்மை கிடந்தது. இல்லை, நிற்க வைத்தது போல குப்பைகளிடையே கிடந்தது. ஒரு நிமிடம் நின்று பார்த்துக்கொண்டே இருந்தேன். அவ்வளவு துயரமாக இருந்தது, அதன் கைகளை பிடித்துக் கொள்ள வேண்டும் போல. கத்தியும் தற்கொலையும் நினைவிற்கு வர பேருந்தி நிறுத்தத்தை நோக்கி அவசரமாக நடந்தேன்.


அழுக்கு ஜீன்சும் பரட்டைத் தலையுமாய் பைக்கின் மீது அமர்ந்திருந்தவன் பார்த்துக்கொண்டே இருந்தான். நான் அவனை நோக்கி நடந்தேன். பைக்கை அவசரமாக கிளப்பிக்கொண்டு நகர்ந்தான். முத்தம் கொடுக்க தான் சென்றேன். தற்கொலைக்கு முன்னதான முத்தம்; சிறு முத்தம்; தற்கொலைக்கு முன் தெரியாத ஒருவருக்கு கொடுக்கும் முத்தம். தெரிந்தவர்களுக்கு தான் எத்தனை முத்தங்கள் கொடுத்திருக்கிறோம்.


பாக்கெட்டில் இருந்த ஜெம்சு மிட்டாய்கள் ஒவ்வொன்றாய் தரையில் சிதறடித்துக் கொண்டே அருகிலிருந்த அந்த கடையில் நுழைந்து கத்தியை தேர்வு செய்யத் தொடங்கினேன். துரோகங்களை போல் அறுக்கும் ஒரு கத்தி இல்லவே இல்லையென்று கடையின் பணிப்பெண் சாதித்தாள். தற்கொலையை தற்கொலைப் போலவே நடத்திடும் கத்தியாவது கிடைக்குமாவென்று பரபரத்தேன். அவள் உதடு பிதுக்கிய நேரம் தலையின் ஈரம் குறைவது போல உணர்ந்தேன்.



எப்பொழுதும் செல்லும் பார்க் தான். உள்ளே நுழையாமல் வெளிவாசல் ஓரத்திலிருந்த திண்டில் வாயில் சிகரட்டை சொருகியவாரு ஏறி அமர்ந்தேன். இன்னொரு முனையில் தனியாக அமர்ந்திருந்தவன் ஒருமுறை திரும்பிப் பார்த்தான். புன்னகைக்கவில்லை. லைட்டரை எடுத்து பொருத்தினேன். "நீ புகைப்பாயா ?" முகத்தை திருப்பாமலேயே அமைதியாக கேட்டான். "தற்கொலைக்கு முன் புகைக்க வேண்டும்......நெஞ்சு நிறைய..... நண்பன் சொன்னான்" நானும் அவனை திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் அவன் புன்னகைத்தது போல் இருந்தது. தொண்டையிலிருந்து தலைக்கு புகை ஏறி இரும்மத் தொடங்கினேன். "முதல் முறையாக இருக்கும்..... நெஞ்சு நிறைய புகைப்பது" வாய்விட்டே சிரித்தான். திண்டிலிருந்து குதித்து திரும்பி பார்க்காமல் நடந்தேன்.


என்னுடைய எந்த பிம்பத்தை விட்டு வந்தேன் ?


வாசல் முகப்பில் இருந்த குப்பைத் தொட்டியில் இன்னும் அந்த தலையில்லாத பொம்மைக் கிடந்தது. குப்பைத் தொட்டியின் அருகிலேயே அமர்ந்து முகத்தை மூடி பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினேன்.


தற்கொலைகளை தலையில்லாத பொம்மைகளே முடக்கிப் போடுகின்றன

Wednesday, 1 January 2014

மார்ஷலுக்கு - 1



அன்பின் மார்ஷல்,

தேவகுமாரனின் குறைவில்லா கிருபையால் என்றென்றும் நலமோடு வாழ ! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மார்ஷல். நாம் சந்தித்து ஒரு வருடம் ஆகப்போகிறதா ? ஆதியிலிருந்தே இந்த உறவு நம்மிடையே நிலைத்திருப்பதாய் நான் நம்புகிறேன். மார்ஷல் உனக்கு நினைவிருக்கிறதா ? நம் முதல் சந்திப்பு ? நாம் பெரிதும் நேசிக்கும் புத்தகங்களிடையே கைகுலுக்கிய அந்த முதல் சந்திப்பு. அந்த கைகுலுக்கலில் தான் எத்தனை உயிர்ப்பு. காலம்காலமாக தொடர்ந்து வந்த நேசத்தை நாம் இருவரும் அறிவோம் மார்ஷல்.

அதன் பிறகு எத்தனை சந்திப்புகள்... சந்திப்புகள்... சந்திப்புகள், அமைதியாய் சில, ஆர்பாட்டமாய் சில. சந்தேகமில்லாமல் நீ என்னுள் நிறைந்திருக்கிறாய் மார்ஷல். வண்ணத்துப்பூச்சியின் சாயம் நம்மேல் எப்பொழுதும் படர்ந்திருக்கிறது. இன்று நேற்றல்ல, காலம்காலமாய் மார்ஷல். நமக்கு பிடித்தமானதை நம் இருவரை தவிர அதிகமாய் யாரும் அறிந்திருக்க முடியாது மார்ஷல். அறிந்துகொள்ளும் இடைவெளியை நாம் ஏற்படுத்திக்கொண்டதில்லை.

பேரிரைச்சலுடன் கடந்து செல்லும் இரயிலொன்றை இரவு அமைதியாக பார்த்து நின்றிருக்கிறது. உதிராத அந்த மஞ்சள் நிற மனோரஞ்சித மலரின் வாசனை இப்பொழுது இந்த வெளியை நிரப்பியிருக்கிறது. அதோ எதன் மீதோ பாயத் தயாரான அந்த ஒற்றைக் கண் பூனை ஒரு கணம் நின்று திரும்பி பார்க்கிறது மார்ஷல். நீ இங்கே தான் இருக்கிறாய் மார்ஷல். இந்த உணர்வுகளெங்கும் நிரம்பியிருக்கிறாய். எதையோ திருப்பி தந்துவிட முனைகிற இந்த இரவில் தான் நீ இருக்கிறாய் மார்ஷல்.

பூனைகளை நமக்கு ஏன் தெரியுமா பிடித்திருக்கிறது மார்ஷல் ? நம்மை தவிர வேறு யாரையுமே நாம் இலட்சியம் செய்வதில்லை மார்ஷல். பூனைகளை மட்டுமே நமக்கு பிடித்திருக்கிறது.

மார்ஷல், நான் எப்பொழுதுமே பூனையாகவே இருக்க விரும்புகிறேன். ஆனால் எல்லாரும் என் மேல் ஏன் அன்பாக இருக்கிறார்கள் மார்ஷல் ? இவ்வளவு அன்பாக ? பயமாக இருக்கிறது மார்ஷல், உன் அதே பயம் ஒரு அட்டை போல் என்மேலும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. இந்த அன்பு வேண்டாம் மார்ஷல். இந்த அன்பை நிராகரிக்க முடியாமல் நான் தவிக்கும் தவிப்பை நீ மட்டுமே அறிவாய். பயமாக இருக்கிறது.

பிரிவின் பெருந்துயரினை எப்பொழுதும் நாம் மட்டுமே உணர்ந்து கொண்டிருக்கிறோம் மார்ஷல்.

நீ என் குழந்தையாக பிறந்திருக்க கூடாதா மார்ஷல். ஒரு தாயின் வெதுவெதுப்பை நான் எப்பொழுதும் உனக்கு தந்ததில்லையே.
மார்ஷல்.. மார்ஷல்....(அழுகிறேன்)

நாளை மறுநாள் விடியும்போது புத்தாண்டு மார்ஷல். இந்த கைகளை கோர்த்துக் கொண்டு ஊர் சுற்றி வர வேண்டும். உன்னை குழந்தையாக்கி தோளோடு அணைத்து...கொண்டாட வேண்டும் மார்ஷல், அந்த நாளை கொண்டாட வேண்டும்.

அழுதுவிடு மார்ஷல். என்னை பாரமாக்காதே. மடிபுதைந்து அழுது கரைந்துவிடு மார்ஷல்.

மார்ஷல், நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை.

முத்தங்களுடன்,
ஜென்னி