Monday, 1 September 2014

அமேசான் காடுகளில் வளரும் அரிய வகை மூலிகை

முன்னெச்சரிக்கை: சற்றே நீண்ட குறுங்கதை.  அலுப்பூட்டும் விதமாக அமைந்திருந்தால் அதற்கு காரணம் மதிய உணவு வேளை.
குஞ்சாயிக்கு எதுவுமே நறுக்கென்று இருக்க வேண்டும். அதாவது சின்னதாக. எல்லாமுமேவா என்று கேட்டால் அது எனக்கு தெரியாது. அதனால் தான் ஒவ்வொரு மாதமும் நகரத்தில் இருக்கிற பெரிய சலூனிற்கு சென்று தோள்பட்டையை தொடுமளவு முடிவெட்டிக் கொள்ளுவாள்.

(எனக்கு மட்டும் தெரிந்த ரகசியத்தை உங்களுக்கு சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொள்கிறேன்)

ஊரெல்லாம் தேடி இவன் தான் நமக்கு சரியான ஜோடி என்று மிஸ்டர் பெருமாளுடன் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டாள்; மிஸ்டர் பெருமாளின் பெற்றோர்களிடமும் தான். பெருமாளுக்கு குஞ்சாயியின் முடி காற்றில் அலைபாய்ந்து முகத்தை கூச செய்யாமல் இருந்தால் சரி என்பதால் குஞ்சாயியின் முடியை பற்றி கவலையேதுமில்லாமல் இருந்தது.

வெட்டியான ஒரு வார இறுதியில் ஆட்டுக்கால் சூப் குடிப்பதற்கென்றே மிஸ்டர் பெருமாளின் வீட்டுக்கு சென்ற குஞ்சாயியின் முடியை பார்த்ததுமே பெருமாளின் அம்மா முகம் சுளித்தாள் ’இதென்ன முடியை குட்டையா வெட்டிக்கிட்டு”

பெருமாள் தான் சமாதானப்படுத்தினான் ‘வெயில் காலமில்லையா தல கசகசப்பு தாங்கல… அதெல்லாம் கல்யாணதுக்குள்ள வளத்திடலாம்’

பெருமாளின் அம்மா ஊருக்கு வரும்பொழுதெல்லாம் ‘மண்டய பாரு.. மண்டைய பாரு..’ என்று இடித்துக் காட்டிக்கொண்டே இருந்தாள். அதுவுமில்லாமல் குஞ்சாயியின் மேல் வீட்டில் குடியிருந்த பல் டாக்டருக்கு குஞ்சாயியை விட கொஞ்சம் முடி ஜாஸ்தியாக இருந்தது பிரச்சனையாகிவிட்டது. மாதா மாதம் மேல்வீட்டிற்கு மல்லிக்கைப்பூ பந்து போக ஆரம்பித்தது.

குஞ்சாயிக்கு பெரும் மண்டைக் குடைச்சலாகிவிட்டது. அலுவலக நண்பர்களிடமும் பேஸ்புக்கிலும், முடி வெட்டிக்கொள்ள போகும் சலூனிலும் கூட முடி வளர்க்கும் டிப்ஸ் கேட்டு கலர் கலராக கண்டிசனரும் , ஷாம்பூவும் மாற்றி மாற்றி தேய்க்க ஆரம்பித்தாள். ஒரே மாதத்தில், தலையில் கையை உள்ளே விட்டு இழுத்தால் கையோடு ஒரு கொத்து முடி வரும்படி ஆகியிருந்தது குஞ்சாயி மண்டை.

ஆக கடைசியாக இது தான் வழி என்ற முடிவுக்கு வந்தவள்அமேசான் காடுகளில் வளரும் அரிய வகை மூலிகையை தேடி சென்றாள்.

இரண்டே மாதத்தில் முட்டுக்கு கீழே பின்னல் தொங்கியது. தலையில் இருந்து அடித்த ஆட்டுப் புழுக்கை நாற்றத்தை மறைக்க விதவிதமான ஃப்ளேவரில் ஹேர் ஸ்ப்ரே வாங்கி அடுக்கி வைத்தாள். கல்யாணத்திற்காக வாங்கிய ஆயிரம் ரூபாய் சவுரி முடி வீணாய் போனதே என்று குஞ்சாயி அம்மா அலுத்துக் கொண்டாள்.

சீரும் சிறப்புமுமாக கல்யாணம் முடிந்தது. இரண்டாவது வாரத்தில் தோளுக்கும் தொடாமல் முடியை வெட்டி விட்டு வந்தாள் குஞ்சாயி.

முடிந்தது.

பி.கு. அந்த ரகசியத்தைப் பற்றி நீங்கள் அதிகம் அலட்டிக் கொள்ள தேவையில்லை.

No comments:

Post a Comment