Monday, 1 September 2014

தாரணி குட்டி - 2

வீட்டிற்கு வந்து கதவை திறக்கும் முன் தாரிணி கதவை திறக்கவிடாமல் கையை பிடித்துக்கொண்டு சிரித்தாள். நானும் சிரித்தபடி விரலை கோர்த்துக்கொண்டேன்.
கண் சிமிட்டாமல் என்னை பார்த்து "நீ ஏன் ஷால் போடல ? " என்றாள் (மூன்றரை வயது குழந்தையிடம் ஷால் போட வேண்டும் என்று யார் சொல்லி கொடுத்திருப்பார்கள் !)
"இல்ல நான் மறந்து வச்சிட்டு போய்ட்டேன்" என்று துணிகள் காய்ந்து கொண்டிருந்த கொடியை சுட்டிக் காட்டிவிட்டு கதவை திறக்க முற்பட்டேன். 

"எங்க இன்னொரு அக்கா ?" என்று மறுபடியும் கையை பிடித்துக்கொண்டாள்.

"அவ ஊருக்கு போய்ட்டா " ஒற்றைக் கையில் கதவை திறக்க முயற்சி செய்தேன்.

"தனியாவா இருக்க ? " தலையாட்டலை பதிலாக எடுத்துக்கொண்டு தொடர்ந்தாள் , "பயமாயில்ல உனக்கு ? பேய் வந்து பிடிச்சிக்காதா ? "

"சாமி இருக்கு பேய் வந்து பிடிச்சிக்காது" என்று பூட்டை விலக்கி தாழை திறந்தேன்.

"அப்போ சாமி வந்து பிடிச்சிக்காதா ?" என் பதிலுக்கு காத்திராமல் கதவை பட்டென்று திறந்து உள்ளே நுழைந்தாள்.

நான் சிரித்துகொண்டே "சாமி நல்லது தான் பண்ணும் , பிடிச்சிக்காது " என்றேன்.

"சாமி எங்க இருக்கு? நீ காமி. உன்னை பிடிச்சிக்க வேண்டாம்ன்னு நான் சொல்லிட்டு போறேன்"

"........."

சாமிப்படங்கள் அடுக்கி வைத்திருந்த செல்ஃப் அருகே போனவள் இரண்டு வினாடி அங்கே நின்று பார்த்துவிட்டு என்னருகே மீண்டும் வந்தாள். "நாளைக்காச்சும் பைஃவ் ஸ்டார் வாங்கி கொடு நீ மறந்துட்ட.. " 
தலையசைத்தேன்,

"சரி கதவை பூட்டிக்கோ... பை"

No comments:

Post a Comment