Wednesday, 10 September 2014

வெல்லிங்டன் – பிரிதலும் பிரிதல் நிமித்தமும் – வாசிப்பனுபவம்

மாற்றம் என்பது ஒரு நொடிப் பொழுதில் நேர்ந்துவிடுவது அல்ல. அதற்கான அடித்தளங்கள் வெகு முன்னரே போடப்பட்டுவிடுகின்றன.காடுகளை அழித்து நகரங்கள் உருவாகும் பொழுது ஏற்படும் இடப்பெயர்ச்சிகளில் பெருமளவு பாதிக்கப்படுவது காலங்காலமாக அந்த இடங்களில் வாழ்ந்து வரும் பழங்குடியினரும், காடுகளில் வாழும் மிருகங்களும் தான். நுகர்வுமயமாக்குதல் சமவெளி பகுதிகளை கடந்து மேடேறி சென்ற காலத்திலேயே மலைப்பகுதிகளின் அழிவு ஆரம்பமாகிவிட்டது, இது அங்கு வாழும் மக்களையும் மிருங்களையும் சேர்த்தே குறிக்கின்றது. இடமும் மக்களும் ஒன்றோடொன்று தொடர்புடைய(து)வர்கள், ஒன்றினால் மற்றொன்று அறியப்படுவது. ஆனால் இது வெகு சமீபத்தில் நடந்தது அல்ல. இதற்கான விதையை பிரிட்டிஷ்காரர்கள் வித்திடப்பட்டது. அரசியல்வாதிகளாலும், அதிகார வர்க்க முதலாளிகளாலும் வளர்க்கப்பட்டது.

பெருநகரங்களில் இவ்வாறாக ஏற்படும் மாற்றங்களை வெகு சுலபத்தில் கடந்து சென்றுவிட முடியும். முக்கியமாக நாடோடித்தனமான வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு இது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது. ஆனால் ஊரோடான உறவு வேரோடு பிடுங்கப்படும் வலியும் வேதனையும் ஆதியந்தமாக அந்த ஊரோடு உறவு கொண்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

கவிஞரும் மொழிப்பெயர்ப்பாளருமான சுகுமாரன் , எழுதிய முதல் நாவல் இது. ஆரம்ப பக்கங்களின் வாசிப்பு இது அவரின் முதல் நாவல் என்று தோன்றாதபடிக்கு வாசிப்பதற்கு லகுவான மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முதல் எழுபது பக்கங்களில் வெல்லிங்டன் உருவான கதை பற்றி விரிவாக அதே சமயம் அழுத்தமாக விவரித்திருக்கிறார். ஊட்டியை கண்டுபிடிக்க ஜான் சல்லீவன் புறப்படுவதில் இருந்து தொடங்கும் கதை எழுபதாவது பக்கத்தில் ஊட்டியில் தேயிலை பயிர் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து ஜான் சல்லீவனின் மகனிடமிருந்து வரும் செய்தியுடன் முடிகிறது (கொசுறாக ஜான் சல்லீவன் இறந்த வருடத்துடன் முடிக்கிறார்).

இந்த பக்கங்களுக்கிடையே தான் ஊட்டிக்கும் குன்னூருக்கும் இடைப்பட்ட ஜதளா எனும் மலை கிராமம் (ஹட்டி) வெல்லிங்டன் எனும் ராணுவத் தளவாடமாக உருமாறுவது சித்தரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து படுகர் இன மக்கள் இந்த மலை கிராமத்தில் வந்து குடியேறிய கதை பற்றியெல்லாம் விவரிக்க ஆசிரியர் சிரத்தை மேற்கொள்ளவில்லை.
“தமிழ்நாட்டின் நீலகிரி மலைப்பகுதிகளில் குடியேறிய ஒரே காரணத்தால் மட்டுமே தங்களையும் ”தோடர்கள்” போன்று (படுகர்களை) “ பட்டியலிடப்பட்டபழங்குடியினர்” (Scheduled Tribes) என்ற சலுகை கேட்டு தமிழ்நாடு மாநில அரசிடம் தொடர்ந்து போராடி வருகின்றனர்.”  என்று ஆவணக் குறிப்புகள் கூறுகின்றன.

இம்மக்கள் 200 வருடங்களுக்கு முன்பு தான் நீலகிரி மலைப்பகுதியில் வந்து குடியேறியதாக ஆவணங்கள் கூறுகின்றன. ஜான் சல்லீவன் ஊட்டியை கண்டறிந்தது 1800களின் ஆரம்பம். இராணுவத் தளவாடம் ஆரம்பிக்கபட்டது கிட்டத்தட்ட 1800களின் மத்தியில். ஆக, குத்துமதிப்பாக மக்களுக்கும் மலைக்குமான நூறு வருட பிணைப்பு இவ்வளவு அழுத்தமாக வேரூன்றி இருப்பது ஆச்சரியமானது.

இந்த முதல் எழுபது பக்கங்களிலேயே வெல்லிங்டனின் கதை முடிந்துவிட்டது. மீதி இருநூற்றி எண்பது பக்கங்களும் நாவலுக்காக இழுக்கப்பட்டவை. அதன் பின் வெல்லிங்டனுக்கும் கதைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை, வெல்லிங்டன் திருநெல்வேலியை போல கும்பகோணத்தை போல ஒரு வசிப்பிடம் அவ்வளவே. மீதி கதையை சமதளத்தில் நடக்கும் கதையாக விவரித்தாலும் இதே வித அனுபவத்தினை தான் கொடுக்கும் என்பது திண்ணம்.

பாபு என்கிற சிறுவனின் பார்வையில் கதை விரிகிறது. ஜகதளா ஹட்டியில் இருந்த, இடம்பெயர்ந்த மனிதர்களுக்கும் பாபுவுக்கும் இருந்த உறவை விவரிப்பதே மீதி கதை. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அத்தனை காலமாக உடன் வசித்து வந்த ஒவ்வொருவரும் மெதுவாக விலகி செல்லும்போது (இடம்பெயர்ந்து செல்கின்றனர்) பாபுவிற்கு இருக்கும் மனநிலையை நாவலாசிரியர் விளக்க முற்படுகிறார் ! பல இடங்களில் கதை தொய்வு கொண்டு நகர மறுக்கின்றது. உறவுகளுக்கிடையே இருக்கும் சிக்கல்களை தான் பெரும்பாலான கதைகள் பேசி வருகின்றன. அப்படியிருக்கையில் வெல்லிங்டன் என்ற வலுவான அடித்தளத்தை கையில் எடுத்துக்கொண்டு கோரைப் புற்களைக் கொண்டு வீடு கட்டியிருக்கிறார் சுகுமாரன். வெல்லிங்டன் (ஜகதளா) பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடி மக்களின் இடம்பெயர்ச்சிக்கான வலுவான அரசியல் பின்னணிகளை வெளிக்கொணர ஆசிரியர் முற்படவில்லை. ஒரு சராசரி கதையை மட்டுமே ஆசிரியர் கூறியிருக்கிறார். அதனால் கதை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்களின் வாழ்வாதாரங்களை மருந்துக்கு கூட எங்கேயும் விவரிக்கவில்லை, ஏனெனில் அதெல்லாம் முதல் நூறு பக்கங்களிலேயே சுருக்கமாக முடிந்துவிடுகிறது.

பாபுவுக்கும் கௌரிக்குமான உறவோ அல்லது பாபுக்கும் சகுந்தலாவிற்குமான உறவோ மேலோட்டமாகவே கூறியிருப்பது நாடகத்தன்மையை தான் அதிகரிக்கிறதே தவிர அதில் எந்தவொரு ஒட்டுதலும் இல்லை. இடையிடையே சர்க்கஸை பற்றிய இடைச்செருகல்கள் பெரும் அயர்ச்சியை கொடுக்கிறது. இந்நாவல் ஊர்வரலாறாக இல்லாமல் தன்வரலாறாகவே இருக்கிறது.
ஒரு நேர்காணலில் சுகுமாரன் இவ்வாறாக கூறியிருக்கிறார் ,
“பாபுவும் அவன் நண்பர்களும் புழங்கும் உலகத்தை சல்லிவன் உருவாக்கிய ஊரின் உருவாக்கக் கதையுடன் ஒப்பிட்டு பார்க்க முடியுமானால் நாவலின் இன்னொரு பரிமாணம் புரிபடலாம்”

சல்லீவன் ஒரு இயற்கை ஆர்வலர், சல்லீவனின் வரலாறு கண்டெடுத்த நீலகிரியை எந்தவித்திலும் பாபு ஆராய்ந்தாகவே தெரியவில்லை. பாபுவும் நண்பர்களும் விளையாடுகிறார்கள், பள்ளிக்கு செல்கிறார்கள், ஒரு படுகர் திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள், பட்டம் விடுகிறார்கள், திண்பண்டம் வாங்கி உண்ணுகிறார்கள், அக்கம்பக்கத்தில் நடக்கும் சண்டைகளை கவனிக்கிறார்கள், உதவிகளை செய்து கொள்கிறார்கள். அவ்வளவே ! இதை வேறு பரிணாமத்தில் எந்தவிதத்திலும் பார்க்க இயலவில்லை.

நாவலாசிர்களுக்கு தனக்கான வாசகர்களை தேர்ந்தெடுக்க எல்லாவிதமான உரிமையும் இருக்கிறது. எல்லா வாசகர்களுக்குமான கதை என்று எதுவே இல்லை. ஒரு சாராரை திருப்திபடுத்தும் கதை மற்றொரு சாராருக்கு அலுப்பூட்டுவதாக இருக்கின்றது. அதனால் இன்ன மாதிரி தான் கதையிருக்க வேண்டும் என்று வாசகர் எதிர்ப்பார்ப்பதை தவறென்றும் சொல்ல முடியாத சரியென்றும் சொல்ல முடியாத இரண்டும்கெட்டான் நிலை தான் வாய்த்திருக்கிறது. ஆனால் ஏதோவொரு விதத்தில் வாசகனை குறைந்தபட்சமாகவேனும் திருப்திபடுத்துவதாக இருக்க வேண்டும். அந்த அளவுகோலில் வெல்லிங்டனின் பின்னணி அரசியல் பற்றியும், பெருவாரியான மலை கிராமங்கள் அழிப்பும் பற்றியும், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டு அவர்கள் இடம்பெயர்ந்ததை பற்றியும் சிறிதும் விமர்சிக்காமல் சுய வரலாற்றை போல் நாவல் விரிந்திருப்பதினால் என்னளவில் இந்நாவல் திருப்தியளிக்கவில்லை.

பதிப்பகம் – காலச்சுவடு
விலை – ரூ. 275

2 comments:

  1. அன்பின் பூனைக்காதலி

    வாசிப்பனுபவமும் விமர்சனமும் தாறுமாறாக இருக்கிறது. நெடுநாள் முன்னரே இந்நாவலை எனக்கு பரிந்துரைத்தற்கு என்ன காரணம் என்பதை தெரிந்துகொள்ளலாமா?

    அன்பின்
    ஷா
    www.minnalgal.in

    ReplyDelete
    Replies
    1. எப்பொழுதும் நல்ல நாவல்களை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. மேலும் வெல்லிங்டன் மோசமான நாவல் இல்லை. குறைகள் இருக்கிறது என்பதை தான் என் வாசிப்பனுபவம் மூலமாக சொல்லியிருக்கிறேன். கொஞ்சம் intenseஆன நாவல் தான் ஆனால் இரண்டாம் பாதியில் அந்த தீவிரத்தன்மை குறைந்தது தான் வெல்லிங்டனின் வீழ்ச்சி.

      Delete