Sunday, 29 December 2013

தற்கொலைக் குறிப்புகள் - 2



காதலிப்பதை போல சுலபமாக (சுதந்திரமாக ? ) இல்லை காதலிக்கப்படுவது. காதலிக்கப்படுவது பெரும் வாதையாக இருக்கிறது.சில நேரங்களில் காதலிக்கப்படுவதை விட தற்கொலை சுலபமானதாக இருக்கிறது; எந்த கட்டுப்பாடுமின்றி 'சுதந்திரமான' தற்கொலை.

இந்த தற்கொலை குறிப்பை இருஇரு வரிகளில் மடக்கி ஒரு காதல் கவிதையைப் போல எழுதி பார்த்து சிரித்துக் கொள்கிறேன். ச்சை தற்கொலை செய்து கொள்ளப் போகிறவளுக்கு என்ன சிரிப்பு. ஒரு ஸ்வெட்டரை எடுத்து அணிந்து கொள்கிறேன், காதலிக்கப்படுவதை போன்ற கதகதப்பு. குளிர் இதைவிட இதமானதாக இருக்கிறது. ஒரு வெறியோடு ஸ்வெட்டரை அவிழ்த்தெறிகிறேன். இந்த இருளிலும் அது விழுந்த இடம் நன்றாக தெரிகின்றது.

காதலிக்கப்படுவதை என்னால் தூக்கி எறியமுடிவதேயில்லை. ஒரு சர்ப்பம் போல் அது என் மேல் ஊர்ந்து கொண்டிருக்கிறது, இதன் வழுவழுப்பு எனக்கு பிடிக்கவேயில்லை. ஏன் இத்தனை கருணை இதற்கு.
"ஆதி வனத்திலும் இந்த சர்ப்பம் இருந்தது...
சர்ப்பத்தின் தீண்டலில் நெளியும் இந்த ஆதியின் வனம் பெரியது". எப்பொழுதோ எழுதியது. மறுபடி சிரித்துக் கொள்கிறேன். காதலிக்கப்படுவதை பற்றி நினைக்குபொழுதெல்லாம் ஒரு தற்கொலை குறிப்பை எழுதி விடுகின்றேன்.

ச்சை இதென்ன காதல் கடிதம் போல, தற்கொலை குறிப்பை நிரப்ப முற்படும்பொழுது முதல் தற்கொலை குறிப்பு நினைவுக்கு வருகிறது. காதலிக்கப்படும் ஒரு மழை நாளில் அதை கிழித்தெறிவதற்காக வைத்திருக்கிறேன். இந்த முறை யானியும் இல்லை மழையும் இல்லை. சுதந்திரமாக தற்கொலை செய்து கொள்ளலாம்.. காதலிப்பதை போல.

ஒரு தேவதையாக இருப்பது எனக்கு பிடிக்கவேயில்லை. இந்த கணம் சாத்தானாக வேண்டும். தேவக்குமாரனால் காதலிக்கப்படும் ஒரு சாத்தான். ச்சை காறி உமிழ்ந்து , கொடிக் கயிற்றை சுருக்கிடுகிறேன்.

சில்லிடும் இந்த இரவில் தற்கொலையை மட்டும் போர்த்திக் கொள்ள போகிறேன்.

காதலிக்கப்படுவது பெரும் வாதை !

1 comment:

  1. "காதலிக்கப்படுவதை பற்றி நினைக்குபொழுதெல்லாம் ஒரு தற்கொலை குறிப்பை எழுதி விடுகின்றேன்.:"

    சுயம் அழிவதில் காதலும் தற்கொலையும் ஒரே பணியை செய்கின்றன... நல்ல கோணம்

    ReplyDelete