Friday, 18 January 2013

இது காதல் செய்யும் நேரம் – 7



தலையில் கை வைத்து அமரந்திருந்த ஆதி யாரோ மேஜையின் மீது வேகமாக கை வைப்பதை உணர்த்து நிமிர்ந்து ஒரு வினாடி அதிசயித்தான் .
” என்ன நினைச்சுக்கிட்டு இருக்க மனசுல ?”
கடுங்கோபத்துடன் வந்து விழுந்த வார்த்தைகளில் திணறி போன ஆதி பதில் சொல்ல வாயெடுக்கும் முன் , அதுல்யா அவனை பேசாதிருக்குமாறு கைகளால் சைகை செய்துவிட்டு பேசலானாள்
” நான் என்ன உனக்கு அவ்வளோ கேவலமா போய்டேனா ? நீ எது சொன்னாலும் உன் பின்னாடியே வந்து சுத்திக்கிட்டே இருக்கனுமா , நான் என்ன சூடு சொரணை இல்லாம இருக்கேனா ? இல்ல லவ் பண்ணிட்டா உனக்கென்ன நான் அடிமையா பதில் எதுவும் பேசாம இருக்கறதுக்கு”
“அதுல்யா கொஞ்சம் பொறுமையா பார்த்து பேசு இது ஆபீஸ் ”
“போதும் இத்தனை நாள் நான் பொறுமையா இருந்ததெல்லாம் .. சத்தியமா இனி உன் பக்கம் கூட திரும்ப மாட்டேன். கெட் லாஸ்ட்னு தானே சொன்னே அப்படியே போய்டுறேன் . தயவு செஞ்சு விட்டுடு ”
அதுல்யா பொரிந்து தள்ளிவிட்டு அவன் பதிலுக்கு கூட காத்திருக்காமல் வேகமாய் ஆதி கண்முன் இருந்து மறைந்து விட்டாள்.
எல்லாரும் தன்னையே வெறித்து பார்ப்பது தெரிந்து அவமானமாய் இருந்தது ஆதிக்கு. இந்த பெண் என்ன இப்படி ஒன்றையுமே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே . என்ன சொல்லி தான் சமாதானப்படுத்துவது என்று நொந்து கொண்டான்.
தன் மீதும் தவறிருப்பதை ஆதி உணரத்தான் செய்தான் , அவனும் அவ்வாறு சொல்லி இருக்கவே கூடாது , என்ன செய்வது சூழ்நிலை அவ்வாறு அமைந்து விட்டது. எல்லா முறையும் போய் சமாதானபடுத்துவது போல் இம்முறையும் எப்படியேனும் அவளை நிலைமையை உணரச்செய்துவிடலாம் என்று எண்ணியது எவ்வளோ முட்டாள்தனம் என்பதை ஆதி அப்பொழுது அறிந்திருக்கவில்லை.
நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்றை நினைத்து.. இல்லை .. முடிவே  பண்ணி வைத்திருக்கும், என்பதை போல தான் ஆதியின் நிலைமையும் அமைந்திருந்தது. எவ்வளவோ முறை அதுல்யாவை பார்த்து தன்னால் இயன்ற அளவு சமாதானப்படுத்த செய்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போனது . ஆதியின் எந்த கெஞ்சலும் கொஞ்சலும் எடுபடவே இல்லை.
காதலில் தன்மானத்தை தான் பார்க்க முடியுமா என்ன ? அது ஒருவருக்குரியதல்லவே ! கடைசி வரை காதலை காப்பதில் தானே தன்மானமிருக்கிறது ? அதை சிலர் எப்பொழுதும் புரிந்துகொள்வதில்லை..
அந்த நிகழ்விற்கு பின்னர் அதுல்யா மிகவும் இறுகி போய் இருந்தாள், யாரிடமும் அதிகம் பேசுவதில்லை .. புன்னகைக்க கூட மறந்து விட்டிருந்தாள். தினம் தினம் அவனை பார்த்து வேதனையில் மனம் வெம்புவதை விட வேறிடத்திற்கு மாற்றல் வாங்கினால் நிம்மதியாக இருக்கும் என்று சென்றே விட்டாள்; அவள் தேடும் நிம்மதி இங்கே தான் இருக்கிறது என்ற உண்மையை அவள் புரிந்துகொள்ளும் காலம் எப்பொழுதோ ?
ஆதியின் நிலைமையோ இன்னும் தலை கீழ் கோல்டன் ஈகலும் எம்சியுமே வாழ்க்கையாகி விட்டிருந்தது ஆச்சரியமே !! வேலைக்கு கூட சரி வர போவதில்லை.  ஒரு நாள் அவனை மேடவாக்கத்தில் இருந்த பார் ஒன்றில் பாட்டிலும் கையுமாக பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
“மச்சி தாங்க முடியல டா.. செத்து போய்டலாம் போல இருக்கு டா .. நரக வேதனையா இருக்கு டா.. எல்லாம் என் தப்பு தான் டா ..” தலையில் அடித்து கொண்டு கதறி அழுதவனை பார்த்து ஆதியின் நண்பர்கள் கலங்கி விட்டனர். பலவாறு அவனை தேற்ற முயற்சித்தனர் , ஒன்றும் உதவவில்லை.. இன்னும் ஒடிந்து தான் போனான்.
ஆனாலும் அதுல்யாவை இப்பொழுது தொந்தரவு செய்வதில் ஆதிக்கு சற்றும் விருப்பம் இல்லை. இனி அவளை இறுக்கி பிடிப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. அவளாகவே உண்மையை உணரும் காலம் வரும் என்று காத்திருந்தான்….
மூன்று மாதங்களுக்கு பிறகு ,
“என்னடா பேசினாளா..?” வண்டியை ஒட்டிகொண்டிருந்த தீபக் சற்று பின்புறமாக திரும்பி ஆதியை நோக்கி வினவினான்.
“ஹ்ம்ம் இல்லடா . பிங் பண்ணினா ஒரு ரெஸ்பான்சும் இல்லடா .. நம்பர கூட மாத்திடாடா , அவ விநெட்டுக்கு கூட எத்தன தடவ டா கால் பண்றது.” கண்களில் எட்டி பார்த்த கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டு அதுமுடியாமல் வார்த்தைகள் தழும்பியதை உணர்ந்த தீபக் அவனிடம் ,
“டேய் விட்டு தொலை டா .. இன்னும் எத்தனை நாளுக்கு தான் அழுதுகிட்டே இருக்க போற . அவ நல்ல ஜாலியா தான் டா இருக்கா .. நீ ஏண்டா இப்படியே இருந்து உன் வாழ்கையை கெடுத்துக்கற “
” விடரதுக்காடா லவ் பண்ணினேன் ?  விட்டுட்டு என்ன பண்ண சொல்ற ? வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி , குடும்பம் நடத்தி … ச்சே நினைக்கவே அருவருப்பா இருக்கு டா. தொட்ட என்ன ? தொடலைனா என்ன? காதல்னு வந்துட்டா எந்த விஷயத்துலயும் ஆண் பெண் வித்யாசம்லாம் கிடையாது டா எல்லாருமே ஒன்னு தான் . ஏதோ விரக்தில பேசுறேன்னு நினைக்காத டா , இது தான் காதலோட யதார்த்தம். ” ஆதிக்கு வார்த்தைகளின் ஊடே கண்ணீர்  வழிந்தது
“அப்போ லவ்ல தோத்துப்போன …” வாக்கியத்தை அத்துடன் நிறுத்தினான் தீபக்.
“பைக்க அப்படி கொஞ்சம் ஓரமா நிறுத்துடா “
கண நேர அமைதிக்குப்பின் ஆதி
” நீ என்ன சொல்லவரனு தெரியுது … லவ்ல தோத்த யாரும் வேற கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கறதில்லையா அதானே ?”
ஆம் என்பது போல் தலை அசைத்தான் தீபக்.
“அவங்கள்லாம் யதார்த்தத்தை பொய் பொய்னே மனசுக்குள்ள வரையறுதுக்கிட்டு அவங்களை அவங்களே ஏமாத்திக்கிட்டவங்கடா …”
“ஹ்ம்ம் என்னமோ சொல்ற… இப்போ என்ன தான் முடிவு பண்ணி இருக்க ?”
“ஒண்ணுமே புரியல டா “
சற்று அமைதிக்கு பின் , தீபக் ஆதியை நோக்கி
” இப்படி பண்ணி பாரேன் டா ”



நேரம் வரும் காத்திருப்போம்…..

No comments:

Post a Comment