Friday, 18 January 2013

இது காதல் செய்யும் நேரம் – 9




உள்ளே ஒவ்வொரு மாத்திரையும் செல்ல செல்ல அவள் மனது கனத்துக்கொண்டே வந்தது. ஐந்து அட்டைகளில் இருந்த மாத்திரைகளும் முடிவுற்றிந்தது, ஆனால் ஓயாமல் வடிந்து கொண்டிருந்த கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.
ஆதி இப்படி மனம் மாறுவான் என்பதை அவள் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவே இல்லை. தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டாள். திருமணம் வரை போகும் அளவு தான் வெறுப்பை ஏற்படுத்தி விட்டோமோ என்று கலங்கினாள். இந்த காதலே ஒரு மாயை தான் என்றும் அவளுக்கு தோன்றியது.
அவனில்லாத வாழ்கையை அவள் நினைத்துக்கூட பார்த்ததில்லை. அப்படி ஒரு வாழ்கை தேவையே இல்லை என்று துணித்து (!?) தான் இந்த முடிவை எடுத்துவிட்டாள்.
ஏதேதோ நினைவுகளுடன் கண்களும் சுழற்ற துவங்கியதில் சற்று பீதியடைந்தாள். அவரசப்பட்டு விட்டோமோ , இன்னும் ஒரு முறை அவனிடம் பேசி இருக்கலாம் என்று எண்ணம் வந்த பொழுது ஆதி முன்பொருமுறை அனுப்பிய கடிதம் நினைவுக்கு வந்தது. பரபரத்து எழுந்து தள்ளாடி நடையிட்டு அந்த கடிதத்தை எடுத்து பிரித்தாள்.
கடிதத்தின் முதல் வரியை கண்டதுமே பொலபொலத்து அழ துவங்கி, கண்ணீருடனே மேல படிக்கலானாள்.
அன்பு மனைவிக்கு
உன்மேல் சிறிதளவு கூட காதலே இல்லை என்று நீ நினைக்கும் உன் …. (என்ன சொல்வது ? நான் இன்னமும் உன் காதலுக்குரியவனா ?? ) எழுதிக்கொள்வது. இது தான் நான் உனக்கு எழுதும் முதல் கடிதம் , கடைசி கடிதமாகவும் இருக்கலாம் ஆனால் எவ்விதத்தில் என்று நீ தான் முடிவு செய்ய வேண்டும். என் காதலை புரிய வைக்க நானும் பல விதத்தில் முயன்று விட்டேன், அனைத்தும் பாதகமாய் தான் முடிந்தது , உனக்கு என் காதல் புரியவில்லை என்பதற்காக என் காதலை விட முடியாது. இந்த கடிதமும் கூட என் காதலை புரிய வைக்க தான்.
நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய் என்பதை நான் அறிவேன் , உன்னை விட அதிகமாய் காதலிக்கிறேன் என்று மதிப்பீடு கூறி என் காதலை சுருக்க நான் விரும்பவில்லை. உனகெந்த அளவீடுகளில் என் காதல் தெரிகிறதோ அதைவிட கொஞ்சமாவது அதிகம் இருக்கலாம் என்று நம்புகிறேன். இதையாவது நம்புகிறாயா?
உன்னை நான் என் உயிரை விட மேலாக நேசிக்கிறேன் , அதை தவிர உனக்கு வேற என்னடி வேண்டும் ? நான் உன்னை தவிர வேறதுவும் வேண்டாம் என்று கூட நினைக்கிறேன், அது ஏன் உனக்கு புரிய மாட்டேன் என்கிறது?  நீ என்னை எப்படி; என்னவென்று நினைத்தாயோ எனக்கு அதெல்லாம் தெரியாது, நான் உன்னை என் மனைவி என்று தான் வகுத்து வைத்திருக்கிறேன் , இதை மாற்றதான் நீ விரும்புகிறாயா ? நான் உன்னை கொஞ்சம் தவிர்த்தாலே தவித்து போவாயேடி .. இத்தனை நாள் எப்படி உன்னால் என்னை பிரிந்திருக்க முடிகின்றது ? அவ்வளவு வெறுப்பா என் மேல். உன் கோவம் பல நேரங்களில் நியாமானது தான், உன் கோவத்தையோ வெறுப்பையோ என்மேல் காட்டடி, ஏன் நம் காதல் மேல் காட்டுகிறாய், காதல் மேல் உனக்கேனிந்த வெறுப்பு. பொல்லாக் காதல் உன்னை விட்டுவிட்டு என்னை அல்லவா வதைக்கின்றது.
நீ போ யார் வேண்டாம் என்று சொன்னது , என் காதலையும் என் உயிரையும் திருப்பி கொடுத்து விட்டு போடி; என் உயிரே நீதான் என்பதை மட்டும் மறந்து விடாதே.
உன்னை நான் எந்த விஷயத்திலும் நான் வெறுத்ததில்லை , அது என்மேல் நானே சுடு நீரை கொட்டிக்கொள்வது போல் தான். நான் உன்கிட்ட எதுவுமே மறைததில்லையேடி , நீ மட்டும் இன்னும் ஏன்டி மறைக்கிற என்மேல இருக்கற காதலை ?
உனக்காக எது வேணா செய்வேன் , உயிரை கூட கொடுப்பேன் அப்படி எல்லாம் எனக்கு டயலாக் விட தெரியாது , யதார்த்தமாய் இருக்கு தான் எனக்கு தெரியும் . சுத்தி வளைக்காம சொல்லனும்னா நீ இருந்தா என் வாழ்கை .. இல்லை நம்ம வாழ்கை சந்தோஷமாக இருக்கும். இந்த காதல் தரும் சந்தோஷத்தை விட வேறென்ன நமக்கு வேணும் ?
துளி அளவு வெறுப்பை கூட என்மேல் நீ காட்டினாள் நெஞ்சம் வெடிக்கிறது.
என்மேல் தவறுகளே இல்லை என்று நான் சொல்லவில்லை , தவறிந்தாலும் கூட சுட்டி காட்டி திருத்த வேண்டிய நீயே இப்படி உன்னகென்ன என்று பொறுப்பில்லாமல் விட்டு சென்றாயே இது நியாயமா ? இதற்கு மேல் என்ன சொல்வது ? நீ விரும்பும்படி நான் இருக்கவே விழைகிறேன். நான் தவறே செய்திருப்பின் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன். மன்னிப்பாயா? நம் காதல் தான் கெஞ்சி கதறுகிறது, அதை தவிக்க விடாதேடி. நான்  சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீரிலும் உனக்கான என் காதல் வழிந்தோடுவது உனக்கு தெரியவில்லையா ?
உன்னை நான் வெறுத்திருப்பேன் என்று கனவிலும் நினையாதே , உயிர் போகும் வலி அது. என் காதலை தவிர உன்னிடம் தருவதற்கு வேறொன்றும் இல்லை ; என் உயிரை தான் எப்பொழுதோ எடுத்து சென்று விட்டாயே ?
மனம் திறந்து பேசுவோம்.. நம் காதல் உன்னை என்னிடம் கொண்டு  வந்து சேர்பதாய் எனக்கு உறுதி அளித்திருக்கிறது.
இதற்கு மேலும் உனக்கு புரிய வைக்க கூடிய எந்த கூறுகளும் என்னிடம் இல்லை . காதல் ஒன்று தான் மிச்சமிருக்கிறது . அதுவும் உனக்காக மட்டும் தான் இருக்கிறது. வேறு யாரிடமும் உனக்கான என் காதலை ; நம் காதலை, பகிர முடியாது.
“நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா
தன்னையே சசியென்று சரணம் எய்தினேன்”
உனக்காக காத்திருக்கிறேன் ..
காதலுடன். “
கடிதத்தின் எழுத்துக்களும் அதுல்யாவுடன் இணைந்து கரைந்து கொண்டிருந்தன.
ஆதியோ இல்லை அவளோ அங்கே ஜெயித்து விடவில்லை.. காதல் தான் அங்கே ஜெயித்திருந்தது. அவனை இன்னமும் தன்னுள் பிணைத்து வைத்திருந்தது காதலின் ஓர் இழை தான் என்பதை அதுல்யா உணர்ந்திருந்த தருணம் அவள் வாய் ஓரத்தில் நுரை தள்ள துவங்கி இருந்தது


நேரம் வரும் காத்திருப்போம்…..

அடுத்த பகுதியில் நிறைவுறும்!
நின்னையே ரதியென்று – பாரதியாரின் நின்னையே ரதிஎன்று பாடலின் வரிகள்

No comments:

Post a Comment