Wednesday, 16 January 2013

ஓட ஓட ஓட தூரம் கொறையல

பாவாடை நுனியில்

கடிக்கப்பட்ட 

பாதி மிட்டாய்களின்

பிசினிலிருந்து எடுக்கபடுகிறது 

நம் நட்புக்கான அஸ்திவாரம் 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடலும் கடல் சார்ந்த இடமும் 

வனமும் வனம் சார்ந்த இடமும் 

மலையும் மலை சார்ந்த இடமும்

என கூடும் பொழுதுகளில் 

விரிகிறது 

நம் நட்பும் நட்பு சார்ந்த இடமும் 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொடுக்காபுளிக்கு ஸ்லேட்டுக்குச்சி 

தீப்பெட்டி அட்டைக்கு மஞ்சள் ரிப்பன் 

பொட்டுக்கடலைக்கு அச்சுவெல்லம் 

அட

நம்மிடமிருந்தே 

உலகிற்கு அறிமுகமானது 

பண்டமாற்றம் 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


கல்லாங்கா , லகோரி 

கோலிகுண்டு , கிட்டி புல்

தட்டாமாலை , ஐஸ்பாய் 

விளையாட்டுகளுக்கும் 

சலிக்கிறது 

நம்மோடு 

விளையாடி விளையாடி 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காட்டுக்குள் இருக்கும் 

அய்யனார் கோவிலருகே 

சமைக்கப்படும் 

கூட்டாஞ்சோறு 

தீயில் எரிகிறது

உன் வீட்டு  ஜாதியும் 

என் வீட்டு மதமும் 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆலம் விழுதோடு போராடி 

ஆற்று நீரில் 

எருமைகளோடு ஊறி 

புழுதிக்காட்டில் பிரண்டு 

....... போராடி ஊறி பிரண்டு 

திளைக்கிறது நட்பும் கூட 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன் வீட்டிற்கு

நான் கூட்டிவந்த 

நிலாவிற்கும்  

என் வீட்டிற்கு 

நீ கூட்டிவந்த 

நிலாவிற்கும்  

ஏழு வித்தியாசம் 

சொல்லும் 

நம் நட்பு 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மாங்காய்களும் 

குருவி முட்டையும் 

கள்ளி பழமும் 

திருட திருட 

நட்பும் சேர்ந்தே 

இனிக்கிறது 


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மயில் றெக்கையும் 

சோளத்தட்டையும் 

புளியங்கொட்டையும்

பொறுக்கி பொறுக்கி ....

பொறுக்கி பொறுக்கி ....

ச்சீ ச்சீ

பொறுக்கியான நட்பு 

நம் நட்பு 


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எதை நீ எடுத்தாயோ

அது இங்கிருந்தே 

எடுக்கப்பட்டது 

எதை நீ கொடுத்தாயோ 

அது இங்கிருந்தே 

கொடுக்கப்பட்டது 

ஆம் 

நட்பிலிருந்தே

கொடுக்கப்பட்டதும் எடுக்கப்பட்டதும் 


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இவ்வாறான 

உவகை ஊட்டும்

பொழுதுகளில் 

பால்வெளியில் மிதக்கிறது 

நட்பும் 

காற்றைப் போலவே 




பி . கு : தொலைந்து போன பால்யத்தை பற்றி எழுதுவது மிகவும் சுவாரசியமானது. ஒவ்வொருவருள்ளும் பால்யத்தின் சிறு துளி ஈரம் ஒட்டிக் கொண்டு இருக்கும். அதுவும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம் போன்றது. கிரிக்கெட்டும் , ப்ளே ஸ்டேஷன்னுமாக உருண்டு பிரளும் 
இக்கால குழந்தைகளுக்கு ஒரு முறையேனும் விளையாடி காட்டவேண்டும் கிட்டிப்புல்லும் , பம்பரமும் , கோலி குண்டும் ....................

 நான் தொலைத்த பால்யமும் , பால்ய கால நட்பிற்கும் இந்த கவிதை சமர்ப்பணம்.

No comments:

Post a Comment